தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொரோனா' தடுப்பூசி, இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள போவதாகவும், என்னை துணைக்கு வரும்படி அழைத்தார், லென்ஸ் மாமா.

மறுநாள் காலை, வீட்டிலிருந்து, சற்று முன்னதாக கிளம்பி, மாமா வீட்டிற்கு சென்றேன். மாமா குளித்துக் கொண்டிருப்பதாக கூறி, என்னை, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார சொன்னார், மாமி.

ஹாலில் இருந்த, 'டிவி'யில், ஏதோ ஒரு பக்தி சேனலில், பாகவதர் ஒருவர், கதா காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.

'இவர் புராணக் கதைகள் கூறுவதைக் கேட்க ஆரம்பித்தால், நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்...' என்று சிலாகித்த மாமி, சிறிது நேரம், 'டிவி' திரையை பார்ப்பதும், விளம்பரம் வரும்போது, சமையலறைக்கு சென்று, சமையலை கவனிப்பதுமாக இருந்தார்.

'டிபன், காபி கொடுக்கட்டுமா...' என்றார், மாமி.

'மாமா வந்துடட்டுமே...' என்று கூறி, 'டிவி' திரையில் கண்ணை ஓட விட்டேன்.

பாகவதர், கண்ணை சுழட்டி, கைகளை நீட்டி, பலவிதமான சேஷ்டைகளும், இடையிடையே சுலோகங்களை கர்ண கடூரமாக பாடியும், நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.

உட்காரவும் முடியாமல், வெளியே செல்லவும் முடியாமல் தவித்தேன். 'இந்த மாமா, நான் வருவதற்குள் தயாராக இருக்கக் கூடாதா?' என்று, மனதிற்குள் அவருக்கு இரண்டு குட்டு வைத்தேன்.

அப்படி என்ன கதைத்தான் கூறினார் என்கிறீர்களா, பாகவதர் கூறிய கதையின் சாராம்சம் இதுதான்:

மகாபாரதத்தில், தர்மபுத்திரனுக்கு, பீஷ்மர் கூறியதாக வரும் ஒரு கிளைக்கதை. பிறர் துன்பம் அடையும்போது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழி காட்டுகிறது.

காட்டுப் பகுதியில் வேடன் ஒருவன், வேட்டையாடிக் கொண்டிருந்தான். மான்கள் மீது விஷம் தடவிய அம்புகளை அவன் விட்டுக் கொண்டிருந்தான். அதில் ஒரு அம்பு, பசுமையான ஒரு மரத்தின் மீது பாய்ந்தது. விஷத்தின் வேகத்தை தாங்க முடியாமல் அந்த மரம், கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போக ஆரம்பித்தது.

அது, நல்ல பழ மரம்; பல கிளைகளை கொண்ட பெரிய மரம்; பல பறவைகள் கூடு கட்டி வாழ்கிற மரம்; இரவு நேரங்களில் பல பறவைகள் வந்து அடைகிற மரம்.

விஷ அம்பு தைத்த அந்த மரத்திலிருந்து இலைகள் உதிரத் துவங்கின. இப்போது, மரம் பூப்பதும் இல்லை; காய்ப்பதும் இல்லை. எனவே, பறவைகள் அந்த மரத்தை விட்டு வெளியேறத் துவங்கின.

அந்த மரத்தின் பொந்துக்குள், கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. அது மட்டும் எங்கும் போகாமல் அங்கேயே இருந்தது. இத்தனை காலமாக நம்மை காப்பாற்றிய மரத்தை விட்டுப் போவது முறையல்ல என்று, அது கருதியது.

நம்மை காப்பாற்றியவர்களை, அவர்களுக்கு ஒரு ஆபத்து வருகிறபோது கைவிட்டு விடாமல் துணை நிற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, அது வாழ்ந்தது.

விண்ணுலகில் இருந்த தேவேந்திரன், இதை அறிந்து ஆச்சரியப்பட்டான்.

அந்த கிளியை பார்க்க மாறுவேடத்தில் வந்தான்.

'பட்டுப் போன மரத்தில் ஏன் இருக்கிறாய்... வேறு மரத்துக்கு போக வேண்டியது தானே...' என்று, அதற்கு ஆலோசனை சொன்னான்.

அதை ஏற்றுக் கொள்ளவில்லை, கிளி.

'இத்தனை காலமாக எனக்கு தங்குவதற்கு இடமும், உணவும் கொடுத்த மரத்தை, அதற்கு துன்பம் சூழ்ந்துள்ள இந்த வேளையில் விட்டுப் பிரிவது சரியல்ல. நன்றாக மழை பெய்து இந்த மரம் மீண்டும் துளிர்க்கலாம்.

'நிச்சயம் இது உயிர் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே, நான் இங்கிருந்து வேறு இடத்துக்கு செல்ல மாட்டேன்...' என்று, உறுதியாக சொன்னது, கிளி.

அப்போது தேவேந்திரன், 'இது கடைசி வரையிலும் துளிர்க்காமல் பட்டே போய் விட்டால் என்ன செய்வாய்...' என்று கேட்டான்.

'அப்படியானால் நானும் மடிந்து போவேன்...' என்றது, கிளி.

இதைக் கேட்டதும், சிலிர்த்துப் போனான், தேவேந்திரன்.

'நான் சாதாரண ஆள் அல்ல, தேவேந்திரன். உன் உயர்ந்த பண்பை பாராட்டி, ஒரு வரம் தருகிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும்...' என்று, கேட்டான்.

தனக்கு எதுவும் வேண்டுமென்று கேட்கவில்லை, கிளி.

'நீங்கள், தேவேந்திரன் என்பதால், உங்கள் சக்தியால் இந்த மரத்தை மீண்டும் துளிர்க்க வைக்கும் வரத்தை கொடுங்கள்...' என்றது.

தேவேந்திரன், அப்படியே வரம் கொடுத்தான்.

மரம் மீண்டும் துளிர்த்தது. மகிழ்வோடு தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தது, கிளி.

அந்த நிகழ்ச்சி முடியும் நேரத்திற்கு, குளித்து முடித்து, டிரஸ் செய்து வந்தார், மாமா.

'நன்றாக மாட்டினியா?' என்ற அர்த்தத்தில், என்னைப் பார்த்து கண்ணடித்தார்.

மாமி கொடுத்த, டிபன், காபியை, 'லபக்'கி, தப்பித்தால் போதும் என, மருத்துவமனைக்கு கிளம்பினோம்.



நம் இந்திய நாட்டின் சுதந்திர போராட்ட காலம். அப்போது நடந்த காந்திஜியின் அகிம்சை போராட்டம், ஒரு வகையானது. நேதாஜி, பகத்சிங் போன்றோரின் போராட்டம் மற்றொரு வகையானது. இரண்டுமே ஆங்கிலேயரை நடுங்க வைத்தன.

ஒரு வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார், பகத்சிங். விசாரணை முடிவில், அவருக்கு துாக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதைப் போலவே வேறு குற்றங்களுக்காக இன்னும் சில கைதிகளுக்கும் துாக்குத் தண்டனை தேதிகள் குறிக்கப்பட்டன.

குறிப்பிட்ட அந்த தேதி வரையிலும் கைதிகளை பத்திரமாக பராமரிப்பதும், கண்காணிப்பதும் சிறை அதிகாரிகளின் முக்கிய வேலை. கைதிகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் அவர்கள், அதிக அக்கறை எடுத்துக் கொள்வர்.

சரியான நேரத்தில் உணவு, மருத்துவ வசதி எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்வர். அவ்வப்போது கைதிகளின் எடையை பார்ப்பர். அவர்களின் எடை அப்போது குறையாமல் இருக்க வேண்டும். அது முக்கியம்.

ஆனால், கவலையோடு தான் இருப்பர், கைதிகள். அதனால், அவர்களின் எடை குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

மற்ற கைதிகளுக்கு எடை குறைந்து கொண்டே போக, பகத்சிங்கிற்கு மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக எடை கூடிக்கொண்டே போனதாம். இத்தனைக்கும் அவர் சரியாக சாப்பிடுவதில்லை.

அவருக்கு எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று சிறை அதிகாரிகள் கேட்டபோது, பகத்சிங் சொன்ன பதில்...

'தாய் நாட்டுக்காக உயிரை கொடுக்கப் போகிறேன் என்ற பூரிப்பு, என் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியில்

என் எடை கூடியிருக்கலாம். துாக்கிலிடப்படும் நாளை, நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

'அந்த நேரத்தில், கறுப்பு துணியால் என் முகத்தை மூடாதீர்கள். ஏனென்றால், என் தாய் மண்ணை பார்த்துக் கொண்டே, நான் மகிழ்ச்சியோடு உயிர் விட வேண்டும்...'

இதைக் கேட்டு சிறை அதிகாரிகள் சிலிர்த்து போயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us