sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 04, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே



அன்று காலை, 11:00 மணி.

அலுவலகத்தில் தேநீர் இடைவேளை. டீ டம்ளர் ஒரு கையிலும், மசால் வடை ஒரு கையிலுமாக, எதைப் பற்றியோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர், உதவி ஆசிரியைகள். தன் பங்குக்கு அவர்களை, 'கலாய்த்து' கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

அப்போது, ஏதோ ஒரு பாட்டை முணு முணுத்தபடி வந்தார், 'திண்ணை' நாராயணன்.

'நாணா சார், டீ வேணுமா...' என்று அக்கறையாக விசாரித்தார், உதவி ஆசிரியை.

'வேணாம்மா. இப்பத்தான் வீட்டில் சாப்பிட்டுட்டு வந்தேன்...' என்றார், நாராயணன்.

'பலமான டிபனோ...' என்றார், லென்ஸ் மாமா.

'அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஓய்... அன்னரச அமிர்த சஞ்சீவி தான் சாப்பிட்டு வந்தேன்...' என்றதும், அனைவர் முகத்தில் ஒரு கேள்விக்குறி.

'அதென்ன அன்னரச அமிர்த சஞ்சீவி?' என்றேன்.

'ஓய்... நாணா, வரும்போதெல்லாம் ஏதாவது தகவல் சொல்லிட்டு இருப்பீர். இப்ப என்ன புதுப்புது புரியாத பாஷை எல்லாம் பேசிட்டு...' என்றார், மாமா.

'அது என்ன, 'ஐட்டம்' எங்களுக்கும் சொல்லுங்களேன். தினமும், இட்லி, தோசை சாப்பிட்டு, 'போர்' அடிக்குது... அன்ன ரசம்ன்னா என்ன?' என்றார், ஒரு உ.ஆ.,

'அதுவா... சொல்றேன், சொல்றேன்...' என்றவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, பொடி டப்பாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, உறிஞ்சி, கூற ஆரம்பித்தார்:

போன வாரம், பழைய புத்தகக் கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு புகுந்து தேடியதில், 'ஜீவப்பிரம்மைக்கிய வேதாந்த ரகஸ்யம்' என்று ஒரு புத்தகம் அகப்பட்டது. 1925ல், எட்டாம் பதிப்பு நுாலாக வெளி வந்திருக்கிறது. மொத்தம், 904 பக்கங்கள். எழுதியவர், ஸ்ரீபரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர்.

அந்த புத்தகத்தை புரட்டினதுக்கு அப்புறம் தான், அன்னரச அமிர்த சஞ்சீவி பற்றி அறிய முடிந்தது. அது வேறொன்றும் இல்ல... பழைய சாதத்துக்கு தான் அந்த பெயர்.

பழைய சாதமும், அதன் நீரும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் இல்லாமலும், சரீரத்திற்கு எவ்வித வியாதிகளும் வராமல் எப்போதும் சுகமாயிருப்பர்ன்னு அந்த புத்தகத்திலே எழுதியிருக்கு.

பழைய சாதம் எப்படி தயார் பண்றதுங்கற விபரமும் அதிலே இருக்கு.

'இது என்ன பெரிய விஷயம். ராத்திரி மீதமுள்ள சோத்துல தண்ணியை ஊத்தி வச்சா மறுநாள் காலையில அதுதான் பழைய சோறு'ன்னு சொல்லத் தோணுதா? அப்படியில்லே, இதுலே சில நுணுக்கம்லாம் இருக்கு.

ராத்திரியில சாதம் வடிச்சதுக்கு அப்புறம், ஒரு பாத்திரத்துல சுத்தமான தண்ணியை விட்டு கொதிக்க வைக்கணும். சாதம் வடிச்ச கஞ்சி இருக்குல்ல, அது மேல படிஞ்சிருக்கிற ஏட்டை எடுத்துட்டு, அந்த கஞ்சியை வேணுங்கிற அளவுக்கு எடுத்துக்கணும்.

ரெண்டு பங்கு கஞ்சி நீர், ஒரு பங்கு கொதிச்சு ஆறின தண்ணீர், இது ரெண்டையும் ஒரு பாத்திரத்துல கலந்து வச்சுக்கணும்.

ராத்திரி எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம், மீந்து இருக்கிற சாதத்துல இந்த தண்ணீரை ஊத்தி மூடி வச்சுடணும், அவ்வளவு தான்.

காலையில எழுந்து, பல் தேய்ச்சு, குளிச்சு முடிச்சதுக்கப்புறம் சாப்பிட உட்காருங்க. ஒரு கிண்ணத்துல சாதத்தை எடுத்துப் போட்டுக்குங்க, அதுக்கு மேல ரெண்டு அங்குல உயரத்துக்கு வர்ற மாதிரி சாதம் ஊறிய தண்ணியையும் ஊத்திக்கணும். கொஞ்சம் அதிகமா கரிக்கிற மாதிரி உப்பு போட்டு, ஊறுகாய் ஏதாவது பக்கத்துல வச்சுக்குங்க. சாதத்தை சாப்பிட்டு, அந்த தண்ணியையும் குடிச்சுடுங்க.

மழைக்காலம், குளிர்காலம் எதைப் பத்தியும் கவலைப்படாம ஆயுள் பூராவும் இதை சாப்பிட்டுக்கிட்டே வரலாமாம்.

எந்த காலத்துலேயும் எந்த வியாதியும் நம்மகிட்ட வராதாம்.

சின்ன புள்ளைங்கள்லேர்ந்து பெரியவங்க வரைக்கும், எல்லாரும் இதை சாப்பிடலாம். முதல் ஆறு மாசம் இப்படி சாப்பிட்டுகிட்டு வந்தாலே, அதோட பலன் என்னாங்கிறதை நீங்க உணர ஆரம்பிச்சிடுவீங்க. அதுக்கப்புறம் மத்தவங்க வேணாம்ன்னு சொன்னாலும், நீங்க விட மாட்டீங்க.

இன்னொரு வைத்தியமும் உண்டு. குடல் சுத்தமாகணுமா? வேற ஒண்ணும் வேண்டாம்ன்னு சொன்னாலும், நீராகாரத்தை ஒரு ரெண்டரை டம்ளர் எடுத்துக்கிட்டு, கொஞ்சம் அதிகமா கரிக்கிற மாதிரி உப்பை போட்டுக்க வேண்டியது.

ரொம்ப அதிகமா திகட்டற அளவுக்கு உப்பு போட்டுட படாது. காலையில வெறும் வயித்துல சாப்பிடணும். உடனே, தாம்பூலம் போட்டு விழுங்க வேண்டியது. அவ்வளவு தான், வயிறு கிளீன்.

பழைய சாதத்துல, தயிரோ - மோரோ விட்டு சாப்பிடப் படாதாம். திமிர், சோம்பேறித்தனம், கொட்டாவி, துாக்கம் மற்றும் மந்த புத்தி எல்லாம் வந்துடுமாம். அது என்னத்துக்கு நமக்கு வம்பு; ஏற்கனவே இருக்கிறது போதாதா?

இதுவரைக்கும் சொல்லியிருக்கிற விபரமெல்லாம், அனுபவத்துல, ஒரு மகான் சோதிச்சு பார்த்துட்டு, நமக்கு சொல்லியிருக்கிற விஷயங்கள்.

'இது, கை கண்ட அன்னரச அமிர்த சஞ்சீவி ஒளஷதமென்று அறியக் கடவீர்களாக'ன்னு, அவர் எழுதியிருக்கார்.

அதை இப்ப உங்க காதுலயும் போட்டு வச்சுட்டேன்.

- இவ்வாறு கூறி முடித்தார், நாணா.

'பழைய சாதம் தயாரிப்பதிலும் இவ்வளவு விஷயம் இருக்கா. குக்கரில் சோறு ஆக்கும் என்னைப் போன்றவர்கள், நீராகாரத்துக்கு எங்கே போவது? ஹோட்டலில் கப் நிறைய பழைய சாதமும், வெங்காயம் வெச்சு கொடுக்க ஆரம்பிச்சு இருப்பது போல், இது போலவும் செய்து கொடுத்தால் தேவல...' என்றார், ஒரு உ.ஆ.,

நாணா சொன்னதை மனதில் பதிய வைத்துக் கொண்டேன். வாரத்துல ஒருநாளாவது, இந்த முறையில் தயார் செய்து சாப்பிட முடிவு செய்து விட்டேன்.



ஒருசமயம், சென்னைக்கு வந்திருந்த பிரபல ஹிந்தி நடிகர் மற்றும் இயக்குனர் ராஜ்கபூருக்கு, ரத்தக் கண்ணீர் படம், போட்டுக் காண்பிக்கப்பட்டது.

படத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா, குஷ்டரோகியாக வேடமேற்று நடித்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த, ராஜ்கபூர், பக்கத்திலிருந்த நண்பரிடம், 'ஆமாம், இவருக்கு உண்மையாகவே குஷ்டரோகமா...' என்று கேட்டார்.

அதற்கு, அந்த நண்பர் சிரித்தபடியே, 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவர், அந்தளவுக்கு, ஒரு குஷ்டரோகியாகவே மாறி நடித்திருக்கிறார்...' என்றார்.

படம் முடிந்ததும், ராஜ்கபூர் பேசும்போது, 'தமிழகத்தில் இவ்வளவு பெரிய நடிகர் இருப்பது, எங்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் போய் விட்டதே. உலகிலேயே இவர் தான் உண்மையான கலைஞர்...' என்று, மனதாரப் பாராட்டினாராம்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us