தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே



'சில கேள்விக்கு, சந்தேகங்களுக்கு நாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டோம். சில நேரங்களில், சில கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள தோன்றும். ஆனால், யாரிடமும் அதற்கான விடை கிடைக்காது.

'அப்போது, தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கடுப்பாகி, 'கூகுள்' தேடுபொறியை தட்டுவோம். அப்போதும் சரியான விளக்கம் கிடைக்காது. அப்படி ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டது மணி...' என்றார், நண்பர் ஒருவர்.

'அப்படி என்ன சந்தேகம்...' என்றேன், நான்.

'ஒரு சில கார்களில், பின்புறக் கண்ணாடியில் குறிப்பிட்ட இடைவெளியில் மெலிதான கோடுகள் இருக்கிறதே... எதற்காக அந்த கோடுகள்?' என்று கேட்டார், நண்பர்.

'அதற்குக் காரணம் இருக்கு. குளிர் காலங்களிலோ அல்லது வேறு சில காரணத்தாலோ கண்ணாடி மீது நீர் திவலைகள் படியும்.

'கொதிக்க வைத்த நீரை, மூடி போட்டு மூடினால், தட்டின் மீது நீர்த் திவலைகள் எப்படி படியுமோ, அதுபோல, காருக்குள் இருக்கும் ஈரப்பதம் ஆவியாகி, அவை நீர்த் திவலைகளாக கண்ணாடி மீது படியும்.

'முன் பக்க கண்ணாடி என்றால், 'வைப்பர்' போட்டு துடைத்து விடலாம். பின்பக்க கண்ணாடி என்றால்... எல்லா கார்களிலும் பின்புறம், 'வைப்பர்' இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், சிறு கோடுகள் போல இருக்கும் மெல்லிய மின் கம்பிகளைப் பதித்துள்ளனர்.

'அவை, நீர்த் திவலை அல்லது பனிப்படலத்தை மின்சக்தி மூலம் வெப்பத்தை ஏற்படுத்தி நீக்கி விடும். இதற்கு முன் சூடு காற்றை பயன்படுத்தும் முறை எல்லாம் கூட இருந்தது. இப்போ, நவீன தொழில்நுட்பம் வந்து விட்டது...' என்றேன்.

'சரி, முன் பக்கம் உள்ள கண்ணாடியில் ஏன் கோடு போடுவதில்லை?'

'முன்பக்க, 'விண்ட் ஷீல்டை' வெப்பமாக வைத்துக்கொள்ளும் மெக்கானிசத்தை, 'ப்ரமைரி கார் டீப்ராஸ்டர்' என்று அழைக்கின்றனர். இந்த அமைப்பு, காரின், 'டேஷ்போர்டு' துளைகள் வழியாக, 'விண்ட் ஷீல்டு' மீதான காற்றை வெது வெதுப்பாக்குகிறது. இதனால், முன்பக்க கண்ணாடியில் அதிகமாக பனி படலம் படியாமல் தவிர்க்கப்படுகிறது.

'உலகின் பல பிரபல,'ஆட்டோமேக்கர்ஸ்' பலரும், முன்பக்க, 'விண்ட் ஷீல்டில்' கண்ணுக்குத் தெரியாத எலெக்ட்ரிக் சிஸ்டம் பொருத்தி, பனி படலத்தைக் குறைக்க முயற்சித்து வருகின்றனர்.

'ஆனால், அவ்வாறு முன்பக்க கண்ணாடியில், கண்ணுக்கு தெரியாத எலெக்ட்ரிக் சிஸ்டம் வைத்தால், ஓட்டுனர் பார்க்கும்போது, வெளியே உள்ளவை மங்கலாக தெரியும் என்பதால், இதை செய்ய தயங்குகின்றனர். தொடர்ந்து இது சம்பந்தமாக பல ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன...' என்றேன்.

'அப்பாடா, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. எப்படி மணி, எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிஞ்சு வைச்சிருக்கே...' என்று, நண்பர் சிலாகிக்க, 'ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்...' என்று கூறி, அங்கிருந்து நகர்ந்தேன்.



சத்யசாய்பாபா சொன்ன கதை இது:

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு திடீரென்று ஒருநாள் தலையை வலிக்க ஆரம்பிச்சிட்டுதாம்.

அரண்மனையில வைத்திய வசதிக்கு என்ன குறைச்சல்...

நிறைய வைத்தியர்கள் ஒவ்வொருத்தரா வந்தாங்க, ஒவ்வொரு விதமான மருந்தை கொடுத்தாங்க. ஒண்ணுலயும் தலைவலி நிக்கல. தலைவலிக்கு என்ன காரணம்ங்கறதை அவங்களால சரியா கண்டுபிடிக்க முடியல.

தலைவலி தொடர்ந்து இருந்தது.

என்ன பண்ணலாம்ன்னு எல்லாரும் யோசனை பண்ணினாங்க.

'காட்டுல ஒரு முனிவர் இருக்கார். அவரைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து காட்டினா, ஏதாவது யோசனை சொல்வார்...' என்றார், அமைச்சர் ஒருத்தர்.

'சரி, போய் கூப்பிட்டுக்கிட்டு வாங்க...'ன்னு உத்தரவு போட்டார், ராஜா.

முனிவரை போய் அழைச்சுக்கிட்டு வந்தாங்க.

அவர் வந்து பார்த்து, 'மன்னா, மருந்துகள் மூலமா உன்னுடைய தலைவலியை குணப்படுத்த முடியாது. நீ எங்கே போனாலும், வந்தாலும், பச்சை வர்ணம் உன் கண்ணிலே படற மாதிரி பார்த்துக்க.

'பச்சை நிறம் கண்ணுக்கு நல்லது. பச்சை நிறத்தை அதிகமா பார்த்துக்கிட்டிருந்தா, உன் தலைவலி பறந்து போயிடும். இதுதான் அதுக்கு வைத்தியம்...'ன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அடுத்த நாளே, மந்திரிகளோட ஆலோசனை நடத்தினார், ராஜா.

அரண்மனை பூராவும் பச்சைக் நிற பெயின்ட் அடிக்கச் சொன்னாங்க. ஊர்ல உள்ளவங்கள்லாம் பச்சைக் நிற சட்டை தான் போட்டுக்கணும்... வீடுகளுக்கெல்லாம் பச்சை வர்ணம் பூசணும்... பச்சை நிறத்தை தவிர, வேற எந்த நிறமும் ராஜா கண்ணுல படக் கூடாதுன்னு கடுமையான உத்தரவு போட்டாங்க.

கொஞ்ச நாள்ல அந்த நாட்டுல எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைக் நிறம் தான். பசுமைப் புரட்சி பண்ணிட்டாங்க.

காட்டுக்கு போன அந்த முனிவர், கொஞ்ச காலம் கழிச்சு மறுபடியும், ராஜாவோட தலைவலி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு போகலாம்ன்னு அரண்மனைக்கு வந்தார்.

பார்த்தா, ஊரு பூரா பச்சை நிறம்.

இவரு அரண்மனைக்கு போனதுமே, இரண்டு பேர் கையில பெயின்ட் வாளியோட ஓடி வந்தாங்க.

'முனிவரே, கொஞ்சம் நில்லுங்க. உங்க உடம்பு பூராவும் பச்சை பெயின்ட் அடிச்சு விட்டுடறோம். அதுக்கப்புறம் தான் நீங்க உள்ளே போகலாம்...'ன்னாங்க.

திகைச்சு போயிட்டார், முனிவர்.

'என்னடா இது, நம் யோசனை இந்த அளவுக்கு கொண்டாந்து விட்டுட்டுதே...'ன்னு அந்த பெயின்ட் ஆசாமிகளை பார்த்து, 'ஐயா, கொஞ்சம் பொறுங்க...'ன்னு சொல்லிட்டு, ராஜாவை போய் பார்த்தார்.

'அரசனே, உனக்கு யார் இந்த வர்ணம் பூசற யோசனையை சொன்னது... பச்சை நிறத்தை பாருன்னு சொன்னா, அதுக்காக இப்படியா அரசாங்க பணத்தை வீணாக்கறது? உன் பார்வையை மாத்திக்கிட்டா போதாதா...'ன்னார்.

'அது எப்படி பார்வையை மாத்திக்கிறது...' என்றான், ராஜா.

'ஒரு பச்சை நிற கண்ணாடியை போட்டுக்கிட்டா, பார்க்கிறது பூரா பச்சையா தெரிஞ்சுட்டு போவுது. அதுக்குப்போய் இவ்வளவு பணம் விரயம் பண்ணியிருக்கியே...'ன்னாராம் முனிவர்.

எதுக்கு இந்த கதைன்னா, இந்த உலகத்தை பார்க்கிற நம்ம பார்வையை, நாம மாத்திக்கணும்.

இந்த உலகம் பூராவுமே நம்ம உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுதான்ங்கற உண்மையை நாம நல்லா புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சுகிட்டா, 'எல்லாமே மோசம்'ன்னு அலுத்துக்க வேண்டிய அவசியம் இருக்காது. இல்லேன்னா ஒருத்தருக்கொருத்தர் மோதிக்கிட்டிருக்க வேண்டியது தான்.

'எவ்வளவு பெரிய உண்மையை எளிதாக புரிய வைத்து விட்டார்...' என்று, நினைத்து கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us