sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

நகரமும் இல்லாத, கிராமமும் அல்லாத நடுத்தரமான ஊரை சேர்ந்த நண்பர் அவர். ஊருக்குள் செல்வாக்கு மிக்க குடும்பம் அவருடையது. அவரது இல்ல திருமண விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

'ரயிலில் கிளம்பி, எங்க ஊருக்கு அருகில் உள்ள பெரிய ரயில்வே ஜங்ஷனில் இறங்கிடுங்க. கார் அனுப்பி வைக்கிறேன். நேராக திருமண மண்டபத்துக்கு வந்து விடலாம்...' என்று பக்காவாக, 'மேப்' போட்டு கொடுத்திருந்தார், நண்பர்.

போய் தான் வருவோமே என்று, லென்ஸ் மாமாவை துணைக்கு அழைத்துக் கொண்டு, இரவு, 7:30 மணிக்கு புறப்படும் ரயிலில் கிளம்பினோம். வழக்கம் போல், டிக்கெட் பரிசோதகரை நட்பாக்கிக் கொண்டு, தன் பாணியில் படு உற்சாகமாக வந்தார், மாமா. கைவசம் புத்தகம் வைத்திருந்ததால், அதில் மூழ்கினேன், நான்.

விடிகாலை, குறிப்பிட்ட ஜங்ஷனில் ரயில் நிற்க, இறங்கி, நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். சற்று துாரத்தில் நின்றிருந்த ஒருவர், தன் கையில் வைத்திருந்த மொபைல் போனையும், எங்களையும் மாறி மாறி பார்த்தார்.

தயங்கியவாறு அருகில் வந்து, மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்து, 'கார் ரெடியா இருக்கு. புறப்படலாங்களா...' என்றார்.

விஷயம் இது தான்.

அதற்கு முன் எங்களை பார்த்திராத டிரைவருக்கு, அடையாளம் காட்ட, எங்கள் போட்டோவை, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி வைத்திருக்கிறார், நண்பர். அதை வைத்து, எங்களை சுலபமாக அடையாளம் தெரிந்து கொண்டார் என்று புரிந்தது.

விழா நடைபெறும் மண்டபத்திற்கு முன் கார் நிற்க, மேள தாளம் முழங்க, எங்களை வரவேற்றார், நண்பர்.

'ஓய்... நாங்க என்ன பொண்ணு - மாப்பிள்ளையா... எதுக்கு இந்த மேள தாள வரவேற்பு...' என்றவாறு, அந்த வாத்தியக்காரர்களுக்கு சைகை காட்டி, 'ஸ்டாப்' போட்டார், லென்ஸ் மாமா.

விழா சிறப்பாக முடிய, மணமக்களுக்கு வாழ்த்து கூறி, அருமையான டிபனை ஒரு பிடி பிடித்து, மண்டபத்துக்கு வெளியே வந்தோம்.

மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தான் ரயில் என்பதால், ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று நண்பரிடம் சொல்லி கிளம்பினோம்.

'காரில் போகலாம்...' என்ற நண்பரிடம், திருமண வேலையை தொடரச் சொல்லி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

'மதியம் சாப்பிட வந்துடுங்க. சைவம் - அசைவம் எல்லாம் உண்டு...' என்று கூறி அனுப்பி வைத்தார், நண்பர்.

பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததற்கு, இப்போதைக்கு ஊர் ரொம்பவே மாறியிருந்தது. பொட்டல் காடாக இருந்த இடமெல்லாம் வீடும், கடைகளும் நிறைந்திருந்தன. வேடிக்கை பார்த்தபடி வர, அந்த இடத்துக்கு பொருத்தமில்லாமல் சிறு குடிசை ஒன்று கண்ணில் பட்டது.

வாயிற்படியில் மஞ்சள் - குங்குமம் பூசப்பட்டு, வேப்பிலை கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. சிலர் அந்த குடிசைக்குள் போவதும், பயபக்தியோடு திரும்பி வருவதுமாக இருந்தனர். தெரிந்து கொள்ளும் ஆவலில், எதிரில் இருந்த ஒரு டீ கடையில் தஞ்சமானோம்.

அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், எங்களை அழைத்து உட்கார சொன்னார்.

'ஊருக்கு புதுசா? ரொம்ப நேரமா அந்த வீட்டையே பார்த்துட்டு இருக்கீங்களே... யார் என்னென்னு தெரிஞ்சுக்கணுமா?' என்றார்.

'ஆம்' என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினோம்.

'கொஞ்ச நாட்களுக்கு முன், பஞ்சம் பிழைக்க வந்தான், அந்த வீட்டில் இருப்பவன். கிடைச்ச வேலையை செஞ்சுகிட்டு இருந்தவன், திடீரென்று ஒருநாள் சாமியாரா ஆகிட்டான். என்ன மந்திரம் போட்டானோ, மக்களும் அவனை கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க...' என்றார்.

'என்ன மந்திரம் போட்டு மக்களை வசப்படுத்திட்டானா?' என்றார், மாமா.

'மந்திரம்லாம் ஒண்ணுமில்ல, எல்லாம் தந்திரம் தான்...' என்று தொடர்ந்தார், பெரியவர்:

அதையெல்லாம் இப்ப உங்க காதுலயும் போட்டு வச்சுடறேன்.

ஏன்னா, அந்த நபர் மாதிரி, சிலர் உங்க ஊருக்கும் வரலாம். அப்படி வந்தா, நீங்க ஏமாறாம இருக்கணுமில்லையா அதுக்காக. இந்த மாதிரி ஆசாமிங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

முதல்ல ஊருக்குள்ள வருவாங்க. ஏதாவது ஒரு இடத்துல உட்கார்ந்து மந்திரம் செய்வது போல், பாவ்லா காட்டுவாங்க. பூமிக்குள்ளே இருந்து கடவுள் வரப்போறார். அவரை வரவழைக்கிற மந்திரம் தான், இப்ப நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்பாங்க.

ஜனங்கள்லாம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. நிஜமாவே அந்த இடத்துல, பூமி லேசா வெடிக்க ஆரம்பிக்கும். உள்ளே இருந்து ஒரு சிலை வெளியே வரும். உடனே, இவரு கால்ல விழுந்து எல்லாரும் கும்பிடுவாங்க.

இதை எப்படி செய்யிறாங்க தெரியுமா?

சுண்டல் கடலையை ஊற வைச்சுடுவாங்க. இரண்டு நாட்களுக்கு முன்பே ராத்திரி நேரம், யாருக்கும் தெரியாம ஒரு இடத்துல குழியைத் தோண்டி, ஊற வச்ச சுண்டல் கடலையை, தேவையான அளவுக்கு கொட்டிடுவாங்க. அதுல சின்னதா ஒரு சாமி சிலையை வச்சு, மண்ணை போட்டு மூடி, தண்ணீர் தெளிச்சு வைச்சுடுவாங்க.

அந்த குறிப்பிட்ட இடத்துல, யாரும் நடமாடாம பார்த்துக்குவாங்க. இரண்டு நாட்களுக்கு பின், ஜனங்களை கூட்டிக்கிட்டுப் போய், அந்த இடத்துல உட்கார்ந்து மந்திரம் பண்ணுவது போல் பாவ்லா செய்வாங்க.

ஊற வச்ச கடலை முளைக்க ஆரம்பிக்கிறதுனால, அந்த இடம் லேசா வெடிக்க ஆரம்பிக்கும். சாமி சிலை வெளியே தெரியும். அவ்வளவு தான் அசந்துடுவாங்க, மக்கள்.

அடுத்து, வெறும் கையில விபூதி வரவழைச்சு காட்டுவாங்க. சோறு வடிச்ச கஞ்சியில் விபூதியைக் கலந்து சின்ன சின்ன உருண்டையா உருட்டி, காய வெச்சுப்பாங்க. அதுல ஒரு உருண்டையை எடுத்து விரல் இடுக்குல சுலபமா மறைச்சு வெச்சிருப்பாங்க.

பக்தர்கள் கையை நீட்டும் போது, கையை மடக்கி இந்த உருண்டையை விரல் நுனிக்குக் கொண்டு வந்து, உதிர்த்துடுவாங்க. உருண்டை சிறுசா இருந்தாலும் விபூதி நிறைய வரும்.

பிரேம் பண்ணிய சில படங்கள்ல உள்ள சட்டத்துல, 'லாக்டிக்' அமிலத்தை, 'ஸ்பிரே' பண்ணி வெச்சிருப்பாங்க. காற்றுல உள்ள ஈரத்தால, அமிலம் சாம்பல் போல் உருவாகி, விபூதியா கொட்டும். அந்த படத்தை விற்று காசாக்கிடுவாங்க.

சிலர் நெருப்பு இல்லாமலே தீயை உண்டாக்குவாங்க. அது எப்படின்னா, பொட்டாஷியம் பர்மாங்கனேட் என்ற ரசாயன துகள்களை போட்டு, அதுமேல கிளிசரினை ஊற்றினா போதும். பற்ற வைக்காமலே எரியும். இது மட்டுமா...

தான் சமாதி நிலையில் இருக்கிறதாகவும், அந்த சமயம் நாடித்துடிப்பு கூட இருக்காதுன்னும் சொல்வாங்க. டாக்டர்களும் சோதிச்சுப் பார்த்துட்டு, அது சரிதான்னு ஆமோதிப்பாங்க.

இது எப்படின்னா, பேட்டரி மாதிரி கடினமான பொருளை கக்கத்துல வச்சு அழுத்திக்கிட்டா போதும், நாடித்துடிப்பு பதிவு ஆகாது.

இப்படி நிறைய தந்திரங்கள்.

அசல் எது, போலி எதுங்கிறதை நாம தான் புரிஞ்சு, உஷாரா இருந்துக்கணும். நீங்க அங்கு போகாம இருக்கிறது உங்களுக்கு நல்லது.

- இப்படி சொல்லி அனுப்பினார், அந்த பெரியவர்.

மீண்டும் மண்டபத்துக்கு திரும்பி, மதிய உணவை முடித்தோம். சற்று நேர ஓய்வுக்கு பின், எங்களை காரில் ரயில் நிலையத்தில் கொண்டு விட்டார், நண்பர்.   

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us