PUBLISHED ON : ஜூன் 07, 2015

ஊட்டி தெருக்களில் கூவிக் கூவி காய்கறி வியாபாரம் செய்யும் முனுசாமி, தன் தீவிர முயற்சி காரணமாக, இன்று ஹாலிவுட் புகழ் அர்னால்டு பாராட்டும்படியான ஆண் அழகனாக திகழ்கிறார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் முனுசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக, கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
ஒருநாள், தெருவில் வியாபாரம் செய்தபடி வந்த போது, சுவரில், நடிகர் அர்னால்டு தன் வலுவான உடல் அழகை காட்டும், கமாண்டோ பட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது இவரது கவனத்தை ஈர்த்தது.
நீண்ட நேரம், அந்த போஸ்டரைப் பார்த்தவர், தானும் ஒரு நாள் அவர் போல, 'பாடி பில்டராக' வேண்டும் என்று எண்ணினார். எண்ணியதை செயல்படுத்த உள்ளூர் ஜிம்மிற்கு சென்றார்.
பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே போல சத்தான உணவும் முக்கியம். ஆனால், சத்தான உணவிற்கு செலவழிக்க பணம் இல்லாத நிலையில், பெரும்பாலும் பழையசோறு மற்றும் மலிவுவிலை காய்கறிகள் சாப்பிட்டே உடல் திறனை வளர்த்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிய உடலுடன், உள்ளூர் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடியவர், முயற்சி மற்றும் பயிற்சியின் காரணமாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பல வெற்றிகளை குவித்தார்.
சென்னைக்கு இடம் மாறியவர், இங்கே ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக இருந்து கொண்டே சர்வதேச போட்டிகளில் முத்திரை பதிக்கும் கனவோடு உள்ளார்.
இதற்கு இடையே, ஐ படசினிமா வாய்ப்பும், அதன் மூலம் இவரது கனவு நாயகனான, அர்னால்டை நேரில் பார்க்கும் சந்தர்ப்பமும் அமைந்தது. அர்னால்டை பார்த்ததையும், அவர், இவரை தட்டிக்கொடுத்து பாராட்டியதையும் பாக்கியமாக கருதுகிறார்.
'இளைஞர்களை எந்த விதமான போதையின் பாதைக்கும் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், ஜிம்மில் சேர்த்து விடுங்கள்...' என்று சொல்லும் முனுசாமிக்கு ஒரு ஆதங்கம் உண்டு...
'வடமாநிலங்களில், தங்கள் மாநிலத்தில் உள்ள, 'பாடிபில்டர்' களுக்கு வேலை வழங்கி அரசுகள் கவுரவிக்கின்றன. இதேபோல, தமிழகத்தில் என்னைப் போன்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கினால், என்னால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இளைஞர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உற்சாகமாக செய்து தர முடியும். கருணையுடன் என்னை அரசு கவனிக்குமா...' என்று கேட்கிறார்.
முனுசாமியுடன் தொடர்பு கொள்ள:9787948726.
பிரதீபன்

