
ஜன., 10 - ஆருத்ரா தரிசனம்
சிதம்பர ரகசியம்...
பல கோடி டாலர் செலவு மற்றும் எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக, உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.
எந்த செலவும் செய்யாமல், 'டெலஸ்கோப்'பும் இல்லாமல் இதை கண்டறிந்த தமிழன், பெருமைக்குரியவன் தானே!
அணு துகள்கள், அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது!
இதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து, திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது!
சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம் என்று, பலரும் பல விஷயங்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் இதோ:
* பஞ்ச பூத கோவில்களில், ஆகாயத்தை குறிக்கும், தில்லை நடராஜர் கோவில்; காற்றை குறிக்கும், காளஹஸ்தி கோவில்; நிலத்தை குறிக்கும், காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில், அதாவது, சரியாக, 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது
* இன்று, 'கூகுள் மேப்' உதவியுடன் நாம், வானத்தின் மேல் இருந்து பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம், அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்
* மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும், சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களை குறிக்கிறது
* விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை, 21 ஆயிரத்து, 600 தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இது, மனிதன் ஒரு நாளைக்கு, சராசரியாக, 21 ஆயிரத்து, 600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.
இந்த, 21 ஆயிரத்து, 600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த, 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது. இதில், கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்
* சிதம்பரம் கோவிலுள்ள பொன்னம்பலம், சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகள் ஏற வேண்டும்; இது, 'பஞ்சாட்சரப் படி' என, அழைக்கப்படுகிறது. அதாவது, சி, வா, ய, ந, ம என்ற ஐந்து எழுத்தை அடிப்படையாக கொண்டது
* கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனக சபையைத் தாங்குவதற்காக, நான்கு துாண்கள் உள்ளன. இது, நான்கு வேதங்களை குறிக்கிறது
* பொன்னம்பலத்தில், 28 துாண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த, 28 துாண்களும், 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளன. இது, 64 கலைகளை குறிக்கிறது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும், ரத்த நாளங்களை குறிக்கிறது
* பொற் கூரையின் மேல் இருக்கும், ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள, ஆறு துாண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தின், 18 துாண்கள், 18 புராணங்களையும் குறிக்கிறது
* சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவத்தை, 'காஸ்மிக் டான்ஸ்' என்று, வெளிநாட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
விஞ்ஞானம் இன்று சொல்வதை, இந்து மதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது.
ஜி.ஜெயந்தி