PUBLISHED ON : ஜூலை 14, 2013

பாலூட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்ததாகவும் தற்போது நாலாயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனம்.
'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்வால் மட்டுமே. வவ்வால்கள் அதிசயத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இரவில் விழித்து, பகலில் பதுங்கி, மனிதன் நலமுடன் உயிர் வாழ பல உதவிகளை செய்யும் வவ்வால் இனம், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் குமாரசாமி, வவ்வால்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறுகையில், 'உலகில் சுமார் 1,200 வகை வவ்வால்கள் உள்ளன. துருவப் பகுதி தவிர மற்ற இடங்களிலும், வவ்வால்களை காண முடியும். இவற்றில் பழம் தின்னி, பூச்சித்தின்னி என, இருவகை உள்ளன. இவற்றை எளிதில் வித்தியாசம் காண முடியும்...' என்கிறார்.
பழம் தின்னிகள்: பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறிய காது, இறக்கைகளுக்கு இடையே 20 செ.மீ., நீளம், 70 கிராம் எடையில் இருக்கும். பறக்கும் நரி போல் தோற்றமளிக்கும் இவ்வகை வவ்வால்கள், இந்தியாவில் மட்டுமே காணப்படும். இவை 6 அடி நீளம் 2 கிலோ எடை வரை இருக்கும். இவை தேன், பூ இதழ்கள், மகரந்த தூள், அழுகிய பழங்களைச் சாப்பிடும்.
பூச்சித் தின்னிகள்: மிளகு போன்ற சிறிய கண்கள், ரேடார் பேசின் போன்ற காதுகள், தட்டையான மூக்குடன் 6 முதல் 20 செ.மீ., நீளம். 15 முதல் 60 கிராம் எடையுடன் காணப்படும். இவற்றில் மிகச் சிறிய வகையைச் சேர்ந்த மூங்கில் வவ்வால்கள் பிலிப்பைன்ஸ் தீவில் காணப்படுகின்றன. இவற்றின் இறக்கைக்கு இடைப்பட்ட நீளம் 1.5 இன்ச். 1.5 கிராம் எடை மட்டுமே இருக்கும். இவை மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் வண்டு, பூரான், தேள், பல்லி, எலி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும்.
ரத்தம் குடிக்கும் வவ்வால்கள்: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மட்டும், ரத்தம் குடிக்கும், 'வேம்பயர் பேட்ஸ்' இனத்தை சேர்ந்த வவ்வால்கள் காணப்படுகிறது. இவற்றால் மனிதனுக்கு எந்த தீங்கும் இல்லை. மிருகங்களின் ரத்தத்தை மட்டுமே, அதுவும் ஒரு தடவைக்கு 20 மில்லி மட்டுமே குடிக்கிறது. இவற்றின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து, மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு, 'டெஸ்மட்டோபிளாஸ்' என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்படுவதை தடுக்கவும், காயங்களிலிருந்து வெளியேறும் ரத்தத்தை விரைவில், உறைய வைக்கவும் பயன்படுகிறது.
வவ்வால்கள் கூட்டமாக வாழக்கூடியது. ஒரு சதுர அடியில் நூற்றுக்கும் மேல் இருக்கும். அமெரிக்காவின் டெக்சாசில் பிராகன் குகையில், 40 மில்லியன் வவ்வால்கள் வசிக்கின்றன. இவை கூட்டமாக பறக்கும் போது கரும் புகை போல் காணப்படும். தினமும் 55 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நாலா திசையிலும் உணவு தேடுகின்றன. மெக்ஸிகோவில் வாழக் கூடிய, 'மஸ்டிப் வவ்வால்கள்' ஒரு இரவில் 250 டன் பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை உணவாக உண்ணுவதாக கண்டறிந்துள்ளனர். சிறிய பழுப்பு நிற வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.
வவ்வால்கள் பழங்களை உண்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணை செய்கின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும், பாறைகள் வெட்டப்பட்டு குவாரிகளாக மாறி வருவதாலும், உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலைக் கோளாறு காரணமாக கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏற்படும் காட்டுத்தீயாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
இயற்கை வளத்தை காப்பதுடன், உயிர் காக்கும் மருந்து தயாரிக்க பயன்படும் வவ்வால்களை காக்க, குறைந்தபட்சம் இயற்கை வளத்தை மனிதன் அழிக்காமல் இருந்தால் போதும்.
***
ஆர். ஆனந்த்