
கறிவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி, மிஷினில் நைசாக அரைக்கவும். அதை தண்ணீர் விட்டு குழைத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரில் குளித்து வந்தால், தலைமுடி கறுப்பாகும்; முடியும் நீண்டு வளரும்.
* செம்பருத்தி இலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து, தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்தால், கோடையில் உடல் சூடு தணியும்.
* எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு சேர்த்து, 'டூத் பிரஷ்'ஷால் பல் தேய்த்து வந்தால், மஞ்சள் நிறம் நீங்கி, நாளடைவில் வெண்மையாகும்.
* முகம் சொர சொரப்பாக இருக்கும் பெண்கள், திராட்சை பழச்சாறு ஒரு கரண்டி, பன்னீர் ஒரு கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும் மாறும்.
* ஆலிவ் எண்ணெயை கொதிக்க வைத்து, ஆறியபின், சேலை கட்டி கறுப்பான இடுப்பு பகுதியில் தேய்த்து வர, அது மறைந்து விடும்.
* நாட்டு மருந்து கடைகளில் கோரைக் கிழங்கு கிடைக்கும். இந்த கிழங்கை வாங்கி அம்மியில் அரைத்து உடலில் பூசி குளித்தால், தேவையில்லாது வளரும் உரோமம் உதிரும். கை, கால்கள் மழ மழவென்று பளபளப்பாக இருக்கும்.

