PUBLISHED ON : ஜூன் 28, 2020

விழா காலங்களில் அலங்கார துணி குடை ஏந்தி, சுவாமி வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். சன்னிதியில் குடை அமைப்பதில்லை. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவிலில் உள்ள, மகிஷாசுரமர்த்தினிக்கு, சன்னிதியிலேயே கருங்கல் குடை அமைக்கப்பட்டுள்ளது.
பசுபதி கோவிலிலுள்ள மரத்தின் கீழ் இருந்த ஒரு சிவலிங்கம் மீது, காய்ந்த சருகுகள் விழுந்தன. இதைப் பார்த்த ஒரு சிலந்தி, வலை பின்னி லிங்கத்தின் மீது துாசு படாமல் பாதுகாத்தது.
சிலந்தியின் சிவ பக்தியை அறியாத யானை ஒன்று, எச்சிலால் வலை பின்னி, லிங்கத்தைப் பாழாக்குகிறதே என எண்ணியது. தன் தும்பிக்கையில் எடுத்து வந்த காவிரி நீரை, சிலந்தி வலை மீது ஊற்றி, அதை அறுத்தது.
இதைக்கண்டு கோபமடைந்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் அடிக்கவே, கீழே விழுந்த சிலந்தி, இறந்தது. யானையும், வலி தாங்காமல் இறந்து விட்டது.
சிவ பாதமடைந்த அந்த ஜீவன்களில் சிலந்தி, கோச்செங்கட் சோழ மன்னனாக, மறு பிறவி எடுத்தது. இந்த மன்னன், யானை ஏற முடியாத சன்னிதிகளைக் கொண்ட கோவில்கள் சிலவற்றை அமைத்தான்.
இவை மாடக்கோவில்கள் எனப்பட்டன. இவ்வகை கோவிலே பசுபதி கோவில். சுவாமிக்கு, பசுபதீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு, சவுந்தரநாயகி என்றும் பெயர்.
இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி (காளி) சிலைக்கு, கருங்கல் குடை அமைக்கப்பட்டுள்ளது; வித்தியாசமானது. எருமை தலை மீது நின்று, வில் உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கியிருக்கிறாள். இரு வீரர்கள் கத்தியால் தங்கள் தலையை வெட்டி, அம்பாளுக்கு காணிக்கையாக்குவது போன்ற இந்த சிற்பம் காணக் கிடைக்காதது.
அக்காலத்தில், போரில் வெற்றி தரும்படி வேண்டி, காளிக்கு, களப்பலி கொடுப்பர், மன்னர்கள். அதற்கு நான், நீ என, போட்டி போட்டுக் கொண்டு தைரியமான வீரர்கள் முன் வருவர். அவர்கள், தங்கள் தலையை தாங்களே அறுத்து, காளிக்கு காணிக்கையாக அர்ப்பணிப்பர். இந்த வழக்கத்தை மெய்ப்பிக்கும் சிலையாக இது உள்ளது.
இங்கு, நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி இருப்பது விசேஷ அம்சம். எந்த கிரகமும், சிவனின் காவலரான நந்தியை மீறி, பக்தர்களுக்கு கெடுதல் செய்யாது என்பது, இதன் தாத்பர்யம். பக்தர்கள், தங்கள் கோரிக்கைகளை நந்தியிடம் வைத்து விடுகின்றனர். அவர், கிரகக் கோளாறு ஏற்படாமல் தடுப்பார் என, நம்புகின்றனர்.
தஞ்சாவூர் -- கும்பகோணம் சாலையில், 14 கி.மீ. துாரத்தில், பசுபதி கோவில் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 1 கி.மீ., சென்றால், கோவிலை அடையலாம்.
தி. செல்லப்பா
