தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரொக்கமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பரிவர்த்தனை


PUBLISHED ON : ஜன 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ.சி.எஸ்., முறை (Electronic Clearing System) எனும் வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

உங்கள் பெயரிலும், குடும்ப நபர்களின் பெயர்களிலும், நான்கைந்து ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருப்பீர்கள். ஒவ்வொன்றுக்குமான பிரீமியத்தை, வெவ்வேறு மாதங்களில் செலுத்த வேண்டி இருக்கலாம். சில பாலிசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையும், வேறு சிலவற்றை, ஆண்டுக்கு, நான்கு முறையும் செலுத்த வேண்டியிருக்கும். இதில், எந்த தவணையை செலுத்த மறந்தாலும் சிக்கல் தான்.

நீங்கள், ஜனவரி மாதம் கட்ட வேண்டிய ஆயுள் காப்பீடு பிரீமியத் தொகையை, மறந்து, ஏப்ரல் மாதத்தில் கட்டுகிறீர்கள் என்றால், அப்பாலிசி, காலாவதியானதாக கருத வாய்ப்பு உண்டு. அதாவது, உரிய காலத்திற்கு பின், நீங்கள் செலுத்திய தொகை வந்து விடும். ஆனால், இடையில் சம்பந்தப்பட்டவர் இறந்து விட்டால், குடும்பத்துக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தொகை வராது.

இதை தவிர்க்க, நீங்கள், இ.சி.எஸ்., வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அது, எப்படி என்று பார்ப்போம்...

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், ஒரு விண்ணப்பம் தருவர். அதில், உங்கள் பெயர், பாலிசி எண் போன்ற விவரங்களை நிரப்பி, அதை, உங்கள் வங்கி கிளை மேலாளரிடம் அளிக்க வேண்டும். 'இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து, மேற்படி பாலிசிகளுக்கான பிரீமியத்தை அனுப்புமாறு, எங்கள் வங்கிக்கு நோட்டீஸ் வந்தால், நாங்கள், இந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, அத்தொகையை கட்ட சம்மதிக்கிறோம்...' என்ற உறுதிமொழியின் கீழ், வங்கிக் கிளை அதிகாரி கையொப்பமிட வேணடும். பின், இந்த விண்ணப்பத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

அதற்கு பின், நேரடியாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம், உரிய நாளில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, பணத்தை எடுத்துக் கொள்ளும். எந்தத் தவணையாவது பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் கூட, அது, உங்கள் உரிமைகளை பறித்து விடாது; ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில், போதிய இருப்பு, தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் தொலைபேசி கட்டணம் போன்ற, பல சேவை கட்டணங்களை, இ.சி.எஸ்., முறையில் கட்டலாம்.

மின்னணு பணம்

இதுவும் ரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகளுக்கு, வழிவகுக்க கூடியது. அதாவது, நீங்கள் நேரடியாக சென்று செலுத்தாமல், கணினியில், இணையதளம் மூலம், மின் கட்டணம், சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றை செலுத்த முடியும். மேலும், உங்கள் வங்கி கணக்குகளில், ஒன்றிலிருந்து, மற்றொன்றிற்கு தொகையை மாற்றலாம். அவ்வங்கியில் உள்ள பிறரது கணக்கிற்கும், உங்கள் கணக்கிலிருந்து தொகையை மாற்றிக் கொள்ளலாம்.

இ பே., (Epay)

'இ.பே.,' என்ற அமைப்பு, 2001ல் உருவானது. இன்டர்நெட் வசதியுள்ளவர்கள், தங்களது வணிகம் தொடர்பான, கொடுக்கல், வாங்கல்களை, கணினி மூலமாக, ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதற்காக, இதை துவக்கினர்.

பே டி எம் (Paytm)

பே டிஎம், பே யு மணி மற்றும் மொபிக்விக் என்று, பல, 'ஆப்'களின் மூலம், தொலைபேசியிலிருந்தே, பணத்தை செலுத்தலாம். இந்த ஆப்களை, உங்கள் மொபைல் போனிலுள்ள, 'ப்ளே ஸ்டோர்' என்பதிலிருந்தோ, உரிய வலைத்தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவற்றில், இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்துவது, 'பேடிஎம்!'

நீங்கள் கடைக்கு சென்று, 1,500 ரூபாய்க்கு, பொருட்கள் வாங்குகிறீர்கள். உங்கள் மொபைல் போனில், 'பேடிஎம் - ஆப்'பை ஏற்கனவே தரவிறக்கம் செய்திருப்பீர்கள். அதை அழுத்தியவுடன், யாருக்கு செலுத்த வேண்டும் என்று விவரம் கேட்கும். கடைக்காரர்களின் தொலைபேசி எண்ணை நிரப்ப வேண்டும். அடுத்து, எவ்வளவு தொகை என்று கேட்கும். நீங்கள் நிரப்பிய பின், முடிவு என்ற பொத்தானை அழுத்தினால், அது, உங்கள் கணக்கிலிருந்து, கடைக்காரர்களின் கணக்கிற்கு, மாறி விடும்.

இது எப்படி சாத்தியம்? நீங்கள், உங்கள் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை எடுத்து, பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து, செலவு செய்வீர்கள். அதற்கு பதில், வங்கியிலிருந்து, உங்கள், 'பேடிஎம்' நிறுவனத்தின் பாக்கெட்டுக்கு, முதலில் பணத்தை மாற்ற வேண்டும். இதற்காக, வங்கிக்கு போக வேண்டாம்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே இதை செய்ய முடியும்.

ஒவ்வொரு மாதமும், 20,000 ரூபாய்க்கு உள்ளாக, நீங்கள், 'பேடிஎம்' மூலம் பண பரிவர்த்தனைகள் செய்தால், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டுமே அந்நிறுவனத்துக்கு அளித்தால் போதும்; இதை விட, அதிக தொகை என்றால், உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் போன்றவற்றையும், பகிர்ந்து கொள்ள வேண்டும்.

'பேடிஎம்' அமைப்பு என்ன சொல்கிறது? 'நீங்கள், ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்; உங்கள் கடைக்காரர்கள் பல்வேறு வங்கிகளில், கணக்கு வைத்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும், நான் ஒரு பொதுவான எண்ணை தருகிறேன். அதுதான், உங்கள் தொலைபேசி எண். அதுதான், எங்களிடமுள்ள ஒவ்வொரு பர்சுக்குமான அடையாள எண். இந்த எண்ணை, நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால் போதும்.

ஆனால், மொபைல் போன் மூலம் இதை பயன்படுத்துவது என்றால், அது, 'ஸ்மார்ட்' போனாக இருக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமும், இதை செய்ய முடியும்.

'மொபிக்விக்' என்பதும், இதே போல தான். தன் மூலம் தொகைகள் செலுத்தப்படும் போது, அதில், ஒரு சிறு பகுதியை, மீண்டும் உங்களுக்கே அளிப்பதால், முன்பை விட, பிரபலமடைந்து வருகிறது. ஒருவேளை, உங்கள் தொலைபேசியை, நீங்கள் தொலைத்து விட்டால், அதில், நீங்கள் பதிவு செய்த, 'மொபிக்விக்' கணக்கை, முழுவதுமாக அழித்து விடும் வசதி உண்டு. அதாவது, உங்கள் பழைய கொடுக்கல், வாங்கல் விவரங்கள், பிறருக்கு தெரிய வராது.

மேலும், 'USSB' (Unstructured Supplementary Service Data) என்பதை பயன்படுத்த, இன்டர்நெட்டோ, 'ஸ்மார்ட்' போனோ தேவையில்லை.

இதற்கு, உங்கள் தொலைபேசி எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் தொலைபேசியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, 'டயல்' செய்ய வேண்டும். பின், உங்கள் வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., எண்ணின், முதல் நான்கு எழுத்துகளை, 'டைப்' செய்ய வேண்டும்.

பின், யாருக்கு பணம் செலுத்துகிறீர்களோ, அவரது தொலைபேசி எண்ணையும், அடையாள எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

கடன் அட்டையும் இல்லை; டெபிட் அட்டையும் இல்லை. எவ்வித மொபைலும் இல்லை என்றாலும் கூட, நீங்கள் ரொக்கம் இல்லாமலேயே, உங்கள் வங்கி கணக்கிலிருந்து, கடைக்காரர்களுக்கு பணம் செலுத்த முடியும். இதற்கு, நீங்கள் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.

இதை, 'ஏ.இ.பி.எஸ்.,' என்கின்றனர். அதாவது, 'ஆதார் எனேபிள்ட் பேமென்ட் சிஸ்டம்!' இதை பயன்படுத்த, மைக்ரோ

ஏ.டி.எம்., என்கிற சிறு கருவி தேவைப்படும். இக்கருவியை, நீங்கள் வாங்க வேண்டாம்; நீங்கள் பொருட்களை வாங்கும், வணிகர்கள் தான் வாங்க வேண்டும்.

நீங்கள், ஒரு பொருளை வாங்கிய உடன், வணிகர், உங்கள் ஆதார் எண்ணையும், நீங்கள் வாங்கிய பொருட்களின் தொகையையும், அக்கருவியில் பதிவு செய்வர். நீங்கள், உங்கள் கைரேகையை, அக்கருவியில் பதிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, இத்தொகை, வணிகரின் கணக்குக்கு சென்று விடும். நீங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கை, ஆதார் எண்ணுடன் ஏற்கனவே இணைத்திருக்க வேண்டும்.

ரூபே அட்டைகளை பயன்படுத்தியும், நீங்கள், 'ஆன்லைன்' மூலமாக பொருட்களை வாங்கலாம். 'பே செக்யூர்' என்ற பாதுகாப்பு அமைப்பின் மூலமாக தான், இதை செய்ய முடியும்.

இவற்றில், சில வழிமுறைகளை படிக்கும் போது, லேசான குழப்பம் தோன்றுவது இயல்பு. ஆனால், ஓரிரு முறைகள், அவற்றை பின்பற்றி விட்டால், பின் இயல்பாகி விடும். ஏ.டி.எம்., கருவியை பயன்படுத்துவற்கு கூட, துவக்கத்தில், பலருக்கும் தயக்கம் இருக்கத்தானே செய்தது! பின், அது நமக்கு பழக்கமாகிவிட்டதைப் போல், கால ஓட்டத்தில், நம் வாழ்வை, எளிதாக்கிக் கொள்ள, மேற்படி வழிகளை, நாம் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

- ஜி.எஸ். சுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us