தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பகலில் தூக்கம் வருகிறதா?

பகலில் தூக்கம் வருகிறதா?

பகலில் தூக்கம் வருகிறதா?


PUBLISHED ON : ஜூன் 20, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலுவலகத்துக்கு சென்று நாற்காலியில் அமர்ந்தவுடன், சிலருக்கு துாக்கம் வந்து விடும். சிலர் பகலிலும் வீட்டில் படுத்துறங்குவர். இவர்களுக்கு சுறுசுறுப்பு வழங்க, ஒரு தெய்வம் இருக்கிறது.

திருமணப் பத்திரிகைகளில், 'எனது ஜேஷ்ட புதல்வி அல்லது புதல்வன்' எனக் குறிப்பிட்டு, அடுத்து மணமகள் அல்லது மணமகன் பெயர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். 'ஜேஷ்ட' என்றால், மூத்தவள் அல்லது மூத்தவன். மூத்த மகள் அல்லது மகனை இது குறிக்கும்.

தெய்வங்களில் மூத்தவள், ஜேஷ்டா தேவி. தேவர்கள் அழிவின்றி வாழ, அமிர்தம் எடுக்க முடிவெடுத்தார், திருமால். இதற்காக பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் வெளிப்பட்டது. அப்போது, ஒரு சிவப்பு ஆடையணிந்த ஒரு பெண்ணும் வெளிப்பட்டாள். முதலில் வந்தவள் என்பதால், இவளை ஜேஷ்டா தேவி அல்லது மூத்த தேவி என்றனர்.

திருமாலிடம், 'இவ்வுலகில் என் பணி என்ன?' என்றாள், இவள்.

'சண்டை நடக்கும் வீடுகள், தலைவிரி கோலமாக இருப்பவர்கள் இருக்கும் இடம், சோகம் மிகுந்த இடங்கள், குப்பை மேடுகள், சுத்தமில்லாத மற்றும் உறக்கத்தை பிரதானமாகக் கொண்டவர்களின் இல்லங்கள்...

'குழந்தைகளுக்கு உணவளிக்காமல் பொறுப்பின்றி திரியும் தந்தை, குழந்தைக்கு தராமல் முதலில் உண்ணும் தாய்... இதுபோன்ற எதிர்மறை செயல்களை நிகழ்த்துபவர்கள் வசிக்கும் இடங்களே, உன் இருப்பிடம்.

'உனக்கு, காக வாகனம் வழங்குகிறேன். அது, பூமியில் கிடக்கும் அழுக்கான பொருட்களை தின்று விடும். அதுபோல், நீயும், சோம்பேறிகள், பாவம் செய்பவர்களுக்கு கடும் சோதனையைக் கொடு. அவர்கள் கஷ்டம் தாளாமல் தவிக்கும்போது, அவர்களின் மன அழுக்கை நீக்கு. அவர்கள் மனம் திருந்தினால், நல்ல புத்தியையும், சுறுசுறுப்பையும் வழங்கி, அவர்களை திருந்தச் செய்...' என்றார், திருமால்.

இதனால் தான் எண்ணெய் வழிந்த முகம், தலை வாராதவர்கள், சோம்பேறிகளை, மூதேவி என, சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. மூத்த தேவியின் சுருக்கமே இது.

வட மாநிலங்களில் நவராத்திரி காலத்தில், ஜேஷ்டாவை கழுதை வாகனத்துடன் அலங்கரிப்பர். இவளை, துாமாவதி என்பர். இதற்கு, புகை தேவதை என, பொருள். திருந்தாத துஷ்டர்களைக் கொன்று, அவர்களை பஸ்பமாக்குபவள் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது.

சிலருக்கு, பகலில் துாக்கம் வரும். அலுவலகத்தில் உறங்குபவர்களும் உண்டு. இவர்கள் ஜேஷ்டாதேவியை வழிபட வேண்டும்.

காஞ்சிபுரம், பிரம்மபுரீஸ்வரர்; பவானி அருகிலுள்ள கெஞ்சனுார், நேமிலீஸ்வரர்; திருவாரூர், தியாகராஜர்; மயிலாடுதுறை அருகிலுள்ள வழுவூர், வீரட்டானேஸ்வரர்; திருச்சி, திருவானைக்காவல், ஜலகண்டேஸ்வரர் மற்றும் கும்பகோணம் கும்பேஸ்வரர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில் ஜேஷ்டாதேவிக்கு சிலைகள் உள்ளன.

பத்தாம் நுாற்றாண்டில் சிறப்பாக இருந்த இவளது வழிபாடு, காலப்போக்கில் குறைந்து விட்டது.

சரியான சமயத்துக்கு துாக்கம் தந்து, சோம்பலை விரட்டி, வளமையைத் தர வேண்டும் என, ஜேஷ்டாவை வேண்டிக்கொள்ள, இந்தக் கோவில்களுக்கு சென்று வரலாம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us