PUBLISHED ON : ஜூன் 14, 2020

கிழக்காசிய நாடான, தென் கொரியாவின் சியோல் நகரில், முக்கிய வீதியில், ஷூ பாலீஷ் செய்யும் கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர், தினமும், தன் கடையை திறப்பதற்கு முன், அருகில் உள்ள மரத்துக்கு செல்கிறார். பின், மரத்தை இரு கைகளாலும் பிடித்தபடி, ஆத்திரம் தீர, தன் தலையை, மீண்டும் மீண்டும் மரத்தில் மோதுகிறார்.
வலியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், மீண்டும் மோதுகிறார். நெற்றியில் சிறிதாக ரத்தம் கசிந்த பின் தான், அவருக்கு நிம்மதி ஏற்படுகிறது. பின், கடைக்குச் சென்று, வியாபாரத்தில் மூழ்கி விடுகிறார்.
'ஏன் இந்த விபரீதம்...' என, அவரிடம் கேட்டால், 'எனக்கு குத்துச் சண்டை மிகவும் பிடிக்கும். மிகப் பெரிய குத்துச் சண்டை வீரனாக வேண்டும் என, சிறு வயதில் ஆசைப்பட்டேன்; குடும்ப ஏழ்மை காரணமாக, என் ஆசை நிறைவேறவில்லை. ஆனாலும், எனக்குள் அந்த வெறி அடங்க மறுக்கிறது.
'தினமும், தலையை மரத்தில் மோதி, என் வெறியையும், ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்கிறேன். கடவுள் ஆசிர்வாதத்தில், என் தலைக்கு, இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை...' எனக் கூறி, மிரள வைக்கிறார், அந்த இளைஞர்.
ஜோல்னாபையன்
