PUBLISHED ON : மார் 13, 2011

யோகிகள் மிகுந்த தவ வலிமை பெற்றவர்கள். உடல் வலிமையை விட, இவர்களது தவ வலிமை பெருமை வாய்ந்தது. இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.
ஏதோ அவசரத்தில் சாபம் கொடுத்தாலும் உடனே பச்சாதாபப்பட்டு, சாப நிவர்த்திக்கான மார்க்கத்தையும் சொல்வர். அதனால், இப்படிப்பட்ட சாதுக்கள் மற்றும் யோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒரு கந்தர்வன், முனிவரின் சாபத்தால் பாம்பானான். எப்படி? ஒரு சமயம் கோபர்கள் எல்லாரும் அம்பிகாவனம் சென்று, சரஸ்வதி நதியில் நீராடி, மகாதேவரையும், பார்வதி தேவியையும் பூஜித்தனர். பிறகு, நிவேதனம் செய்யப்பட்டவைகளை புசித்து, அன்றிரவு அங்கு தங்கினர். எல்லாரும் படுத்திருந்த போது, ஒரு பெரிய பாம்பு வந்து, நந்தகோபரை விழுங்கத் துவங்கியது.
'கிருஷ்ணா... கிருஷ்ணா... என்னைக் காப்பாற்று...' என்று கத்தினார் நந்தகோபர். மற்றவர்கள் ஓடி வந்து, அந்த பாம்பை அடித்தனர்; ஆனால், அந்தப் பாம்பு சாகவில்லை. அப்போது, பகவான் கிருஷ்ணன் வந்து, அந்த பாம்பின் மீது, தன் பாதங்களை வைத்தார். அடுத்த வினாடி, அந்தப் பாம்பு, கந்தர்வனாக மாறியது.
'நீ யார்?' என்று கேட்டார் பகவான். அவன், 'நான் சுதர்சனனென்ற கந்தர்வன். நான் விமானத்தில் சஞ்சரித்த போது, விரூபமான ஆங்கீரச மகரிஷியைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன். அதனால், அவர் என்னை பாம்பாகும்படி சபித்து விட்டார். அத்துடன், கருணா மூர்த்தியான உம்முடைய பாதம் பட்டதும், சாபம் நிவர்த்தியாகும் என்றும் அருளினார்.
'உம்முடைய பாதம் பட்டதால், பாம்பாக இருந்த நான், இப்போது மீண்டும் கந்தர்வரூபம் பெற்றேன்.
'பாபங்களை நிவர்த்திப்பவரே... உம்மை சரணடைகிறேன். எனக்கு விடை கொடுத்தனுப்ப வேண்டுகிறேன்.
'மகா புருஷ, சாதுக்களுக்கு அதிபரே... சகல லோகங்களுக்கும் அதிபதிகளாகிய பிரம்ம தேவர் முதலியவர்களுக்கு அதிபரே... கிருஷ்ணா... உம்மை தரிசித்த மாத்திரத்தில் பாப நிவர்த்தியாகியது.
'எவருடைய திவ்ய நாமதேயம், கேட்பவர் களையும், உச்சரிப்பவர்களையும், கேட்கச் செய்பவர்களையும் உடனே சுத்தப்படுத்துகிறதோ, அப்படிப்பட்ட உம்முடைய திவ்யமான பாதத்தால் தொடப்பட்ட எனக்கும் பாப, சாப நிவர்த்தி ஏற்பட்டது...' என்று சொல்லி, அவரை நமஸ்காரம் செய்து, மறைந்தான், கோபர்களும், பயம் நீங்கி கோபாலனைத் தொழுதனர்.
கந்தர்வனுக்கு இது வீண் வம்புதானே... தன் அழகில் பெருமை கொண்டு, அழகில்லாத முனிவரை கேலி செய்வானேன்; பாம்பாக மாறி பரிதவிப்பானேன்! அகம்பாவம் தான் காரணம்.
இன்னும் கூட சிலர் தங்களை ரொம்பவும் அழகு, மன்மதன், ரதி என்றெல்லாம் நினைத்து, ஏதோ ஒரு மாதிரியாக இருப்பவர்களை பரிகாசம் செய்வதுண்டு. பரிகாசம் செய்யப்படுபவரின் மனம் எவ்வளவு புண்படும். அவரும், மனதுக்குள் சாபமிடுவார்; சாபம் பலிக்காமலா போகும்.
அதுவும், சாதுக்களின் சாபம் பலிக்காமல் போகாது. ஜாக்கிரதை... வீண் வம்பு வேண்டாம்.
***
ஆன்மீக வினா-விடை!
வில்வ மரத்தின் தனித்தன்மை என்ன?
வில்வ மரத்திற்கு ஸ்ரீவிருட்சம் என்று பெயர். வில்வத்தால் எல்லா வேத மூர்த்திகளையும் பூஜிக்கலாம்; அர்ச்சிக்கலாம். வில்வத்தைப் பறித்து ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்; பூஜைக்கு உபயோகிக்கலாம்; அதன் பசுமை குறையாது.
***
- வைரம் ராஜகோபால்
