
வாழ்க்கை, நீர்க்குமிழி போன்றது. வாழும் காலத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தால், வாழ்க்கை பிரச்னை இல்லாமல், நிம்மதியாக இருக்கும். அப்படியில்லாமல், 'நான்' எனும் ஆணவத்தில், அகம்பாவத்துடன் நடந்து கொண்டால், அழிவு நிச்சயம். ஒரு அடர்ந்த காட்டில், பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தக் காட்டை ஒட்டி, ஓடிக் கொண்டிருந்த நதிக்கரையில், நாணல்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. காற்று சற்று வீசினால் போதும், நாணல் அப்படியே தரையை தொடுமளவிற்கு குனிந்து, வளைந்து, நிமிர்ந்தது. அதைப் பார்த்த மரங்கள், 'முதுகெலும்பில்லாத பயல். குனிந்தும், வளைந்தும் என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது இவனுக்கு...' என, இழிவாக பேசின. திடீரென்று, பெரும் மழையுடன் கூடிய சூறைக்காற்று, வீசியது. அந்தக் காற்றிற்கு மரங்கள் எல்லாம், வேரோடு பிடுங்கப்பட்டு, தண்ணீரில் அடித்துச் சென்று, கடலில் போய் விழுந்தன. தண்ணீரில் அலைக்கழிக் கப்பட்டு தவித்த மரங்கள், அந்த நிலையிலும், 'காட்டில் உள்ள எல்லா தாவரங்களும், வந்து விட்டனவா...' என்று பார்த்தன.
நாணல் மட்டும் வரவில்லை என்று தெரிந்தது. உடனே, மரங்கள் எல்லாம், 'ஹும்... நாமெல்லாம் யாருக்கும் தலைவணங்காத வணங்காமுடி மன்னர்கள் என்ற அகம்பாவத்தில், நாணலை ஏசினோம். வளைந்து கொடுத்த நாணல், வாழ்கிறது; வளைய மாட்டோம் என, அகம்பாவம் பிடித்துப் பேசிய நாம், இங்கே, அலைகடலில் சிக்கித் தவிக்கிறோம்...' என, வருத்தத்தோடு பேசின. பேசி என்ன பலன்... பழைய நிலையை அடைய முடியுமா... அதனால் தான், 'எது இருந்தாலும். ஆணவம் கூடாது' என்று, பீஷ்மர் கூறுகிறார்.
பாண்டவர்களை அழிப்பதற்காக, பல விதங்களில் முயற்சித்து, தோற்றுப் போன துரியோதனன், சகுனி மூலம், வஞ்சக சூதாட்டம் நடத்தி, பாண்டவர்களை காட்டிற்கு துரத்தி அடித்தான். பதின்மூன்று ஆண்டுகளுக்கு பின், பாண்டவர்களின் சார்பாக, பரம்பொருளான கண்ணன் தூது வந்தார். 'துரியோதனா... தர்மன் எவ்வளவோ விட்டுக் கொடுத்து விட்டான். அவர்களுக்கு உண்டான ராஜ்ஜியத்தை கொடு. இல்லாவிட்டால், ஐந்து ஊர்களையாவது கொடு. அதற்கும் மனமில்லை என்றால், ஐந்து வீடுகளாவது அவர்களுக்கு கொடு...' எனக் கேட்டார். பரம்பொருளே வந்து கேட்டும், துரியோதனன் கொடுக்கவில்லை.
மாறாக, 'நான் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்; ஊசி முனை அளவிற்கு கூட, அவர்களுக்கு பூமியை தர மாட்டேன். என் படைகளும், தம்பிகளும், கர்ணனும், பீஷ்மரும், துரோணரும் இருக்கின்றனர், பாண்டவர்களை அழித்து விடுவேன்...' என்று, வீர வசனம் பேசினான். விட்டுக் கொடுக்காத தன்மை, அரச பதவி மற்றும் ஆள்பலம் ஆகியவற்றால் விளைந்த அகம்பாவம், துரியோதனனை அழித்தது. விட்டுக் கொடுத்துப் போன பாண்டவர்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர்.
அதனால் தான், பெரியோர் கூறினர்... 'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்று. வளைந்து கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சுகப்படும் என்பது இப்போது புரிகிறதா?
கி.என்.பரசுராமன்
விதுர நீதி!
மனிதனின் மனதில், ஆறு தீய விஷயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான். ஆகவே, எவன் பாவம் செய்யாதவனாக விளங்குகிறானோ அவனுக்கு பாவத்தின் பின்விளைவான துன்பங்கள் ஏற்படாது.
— என்.ஸ்ரீதரன்.

