PUBLISHED ON : நவ 01, 2020

அவன் போக்கில் அவனை விடு!
இள வயதிலிருந்தே தம் மகன்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; சுதந்திரமாக முடிவெடுக்க அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்; அவர்களை சுயமாகச் சிந்திக்க விட்டு விட வேண்டும் என்கிற அப்பாவின் பார்வை, எனக்கு இன்றைக்கு நினைத்தாலும் வியப்பு தான்!
அப்பாவின் கருத்திற்கு மாறாக, நான் அதிகம் சிந்தித்தது இல்லை என்றாலும், மென்மையாக மறுத்து, மாற்றுக் கருத்து ஒன்றை வெளியிட அனுமதிப்பார்.
'நான் சொல்றேன் கேளு! என்னை எதிர்த்தா பேசுறே?' என்று, அவர் ஆதிக்கம் செய்ததாக எனக்கு நினைவில்லை.
சுதந்திரமாக இயங்க, என்னை எப்படி அனுமதித்தார் என்பதற்கு, ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.
இது, என் அம்மா, அப்பாவிடம் என்னைப் பற்றிச் சொன்ன புகார்...
'இங்க பாருங்க, இந்த லேனாவை... தீபாவளி உடை எடுத்துக்க வாடா கடைக்குன்னா, 'எனக்குரிய காசைக் குடுத்துடு. நானே எடுத்துக்கிறேன்'னு வம்பு பண்றான். இவனை என்னன்னு கேளுங்க...'
'இங்க வாடா! அம்மாவோட போய், 'டிரஸ்' எடுக்கறதுல உனக்கு என்னடா பிரச்னை?'
'இல்லப்பா. புடிக்காத துணியெல்லாம் குடுத்து, இதைத்தான் நீ போட்டுக்கணும்ன்னு அம்மா கட்டாயப்படுத்துறாங்கப்பா. அம்மா எடுத்துத் தர்ற துணி எதுவுமே எனக்குப் பிடிக்கலைப்பா. இப்ப புதுசா ஒரு துணி, டெர்லின்னு வருதுப்பா. பிரமாதமா இருக்கு. அதை எடுக்கணும்ன்னா, அம்மா விடமாட்டேங்குறாங்கப்பா...'
'அது, வெல வெலன்னு இருக்குதுங்க. வியர்வையே இழுக்காது...'
'விடு. அவன் போக்குல அவனை விடு. அவன்கிட்ட, 50 ரூபாயைக் குடுத்துடு. அவனே எடுத்துக்கட்டும்...'
'சின்னப் புள்ளைங்க கையில இவ்வளவு பெரிய காசைக் குடுக்கச் சொல்றீங்க. நல்லா இல்லீங்க இது...'
'பரவாயில்லை குடு. நான் பார்த்துக்கறேன்...'
இள வயதிலேயே என் உடைகளை நானே தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தது மற்றவர்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகப் படலாம்.
பிள்ளைகளுக்கு சின்னச் சின்ன விஷயங்களில் உரிமை கொடுத்து விடவேண்டும். எல்லாவற்றிலும் பெற்றோர் வழியிலேயே சிந்திக்காமல் அவர்களைச் சுயமான முறையில் முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பது, எங்களுக்கு நடத்தப்பட்ட பால பாடம்.
என் மகன்கள் (அரசு ராமநாதன், ஆனந்த் சுப்பிரமணியன்) விஷயத்திலும் நான் இதைப் பின்பற்றலானேன். வளர்ந்து, வாலிபர்களாகித் திருமணமுமாகி, மகன், மகள்களைப் பெற்று விட்ட என் பிள்ளைகள் இருவரும், எந்தப் பெரிய முடிவிற்கும் பிறரைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதில் இன்று வல்லவர்களாக இருக்கின்றனர். அதற்கு காரணம், அவர்களது தாத்தா தமிழ்வாணன் போட்டுக் கொடுத்தத் தடம் தான் என, நான் நம்புகிறேன்.
ரத்தக் களறியாய் வந்து நின்ற தந்தை!
'தைரியமா இருடா; துணிச்சல் அவசியம்டா வாழ்க்கைக்கு...' என்று அவர் போதித்ததே இல்லை. பிள்ளைகள் எது ஒன்றையும் பின்பற்ற வேண்டுமானால் அதன்படி பெற்றோர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நம்பினார், அப்பா. இதற்கும் ஓர் உதாரணம் தர விரும்புகிறேன்.
ஒருமுறை, பெங்களுருக்கு,
'ஹெரால்ட்' காரை, தனியே ஓட்டிச் சென்று திரும்பிய அப்பா, ஒரு பெரிய விபத்தை சந்தித்த சம்பவம், என் நினைவிற்கு வருகிறது.
சென்னை, போரூரில் ஒரு வளைவு. இதில் திருப்பாமல் துாக்க கலக்கத்தில், வண்டியை, அப்பா நேரே செலுத்த, அந்த இடத்தில் ஒரு பழைய வீடு. அதில் ஒரு பிராமணக் குடும்பம் வசித்து வந்தது. சுவரைப் பொத்துக் கொண்டு வீட்டினுள் கார் நுழைந்து விட, நல்ல வேளையாய் அந்த பிராமணக் குடும்பம் அடுத்த அறையில் படுத்திருக்க, விஷயம் விபரீதமாகாமல் போனது.
காரை அப்படியே விட்டு விட்டு, (எங்கேயிருந்து எடுப்பது? வண்டி மீது உடைந்த ஓடுகளும், செங்கல்களுமாய்!) ஏதோ ஒரு புண்ணியவானின் உதவியோடு வீட்டில் வந்து இறங்கி விட்டார்.
மருத்துவமனை என்பது அந்தக் காலத்தில் எல்லாம், அரசுப் பொது மருத்துவமனை தான். மருத்துவர்களெல்லாம் நள்ளிரவில் கிடையாது.
அப்பா, வீடு வந்து கதவைத் தட்ட, இன்னும் காணவில்லையே என எதிர்பார்த்து, சரிவரத் துாங்காமலிருந்த நானும், என் அம்மாவும் கதவைத் திறந்து, பார்த்தால்...
தலை, முகம், சட்டை என்று எங்கு பார்த்தாலும் ரத்தம்! ஒரே ரத்தக் களறிதான் போங்கள்! ஒரு நிமிடம் எனக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. சட்டையில் வெள்ளைப் பகுதி குறைவு; சிவப்புப் பகுதியே மிகுதி.
அம்மாவும் சற்று தைரியமான ஆள்! 'ஆத்தி...' என்று பிரதிபலித்ததோடு சரி. பிறகு, சூழ்நிலையை தைரியமாகக் கையாண்டார்.
சட்டையைக் கழற்றி, 'டெட்டால்' இட்டு, உடம்பின் ரத்தக் கறையை எல்லாம் துடைத்தார். அங்கிங்கெனாதபடி சிராய்ப்புகளும், கிழிசல்களும், பார்க்கவே கோரம்!
குறிப்பாக, தலையிலிருந்து அடங்காத ரத்தம். உறைந்து போன ரத்தத்தையும் தாண்டி, ஒரு காயம் மட்டும் இன்னமும் ரத்தத்தை சற்று வெளிப்படுத்தியபடி இருந்தது.
'இப்படியா ராத்திரி நேரத்துல தனியா ஓட்டிக்கிட்டு வர்றது... துாங்கிட்டுக் காலையில வந்திருக்கலாம்ல...' என்று அம்மா செல்லமாய் கடிந்து கொண்டார்.
மறுநாள் நானும், ரவியும், வாகனக் காப்பீட்டு அதிகாரி மற்றும் குடும்ப நண்பர் தியாகுவுமாய், போரூரில் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றோம் - காரைப் பார்க்க, மீட்க!
வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். அவர்களை விலக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
கூட்டத்தின் நடுவே பல உரையாடல்கள். ஒன்று மட்டும் உங்களுக்கு.
'பெங்களூர்லேருந்து குடிச்சுட்டு வந்திருக்கான், அதான்...' என்றார், ஒருவர்.
'யோவ்! எங்கப்பா ஒண்ணும் குடிக்கிறவர் இல்லே...' என்று, எனக்குத் தொண்டை வரை வந்தது. அடக்கிக் கொண்டேன்.
நம்ப முடியாத காட்சியை அங்கு கண்டோம். ஒரு வீட்டிற்குள் ெஹலிகாப்டர் கொண்டு இறக்கப்பட்டது போல, எங்கள் கார் உட்கார்ந்திருந்தது.
கார் வீட்டிற்குள் பாய்ந்த மாயத்தை காண, அதன் தடத்தைப் பின்பற்றி சென்றேன். இந்தக் காரின் நிலைமையை பார்க்கும் எவரும், அதனுள் இருந்தவர்கள் நிச்சயம் பிழைத்திருக்க மாட்டார்கள் என்கிற முடிவிற்கே வருவர்.
வலுவான மரம் என்றோ, இளஞ்செடி என்றோ சொல்ல முடியாதபடி காணப்பட்ட, வளர்ந்திருந்த கருவேலஞ் செடிகளை கார் கடந்து வந்திருப்பது தெரிய வந்தது.
இச்செடிகள் மட்டும் இல்லாதிருந்தால் ஒருபோதும் பிழைத்திருக்க மாட்டார், அப்பா. உண்மையில், இது மறு பிழைப்பு தான்.
ஒன்றுமில்லாத விபத்திற்கும், காயத்திற்கும், 'ஆய் ஊய்' என்று ஆர்ப்பாட்டம் செய்கிற மனிதர்களின் மத்தியில், இந்தப் பயங்கர விபத்தையும், மோசமான உடல் காயங்களையும் அப்பா எடுத்துக்கொண்ட விதம் இருக்கிறதே... உண்மையில் அவர் துணிவைப் போதிப்பவர் மட்டுமல்ல, பின்பற்றுபவரும் கூட என்பதை எனக்கு உணர வைத்த சம்பவம் இது.
அப்பாவின் துணிச்சலுக்கு இன்னுமோர் உதாரணம் தருகிறேன். இதுவும் சற்றுப் பயங்கரமானது. அது:
தமிழ்வாணன் தன் அண்ணன் எல்.வைரவன் மீது பேரன்பு கொண்டவர். இருவரும் நண்பர்களைப் போலவே பழகுவர். இருவரும் சேர்ந்தால் அந்த அறை கலகலப்பும், கைத்தட்டலுமாக இருக்கும். வைரவன், திருச்சியில், 'குமுதம், கல்கண்டு' இதழ் முகவராகவும், சிறந்த தொழில்முறைப் புகைப்படக் கலைஞராகவும் இருந்தார்.
— தொடரும்
லேனா தமிழ்வாணன்

