sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பெண் மனசு!

/

பெண் மனசு!

பெண் மனசு!

பெண் மனசு!


PUBLISHED ON : டிச 30, 2018

Google News

PUBLISHED ON : டிச 30, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநாராயண காயத்ரியான, 'நாராயண வித்மஹே; வாசுதேவாய தீமஹீ; தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்...' என்ற மந்திரத்தை கண் மூடியபடி, வாய் நிறைய சொற் சுத்தமாக சொல்லி, பிரார்த்தனையை முடித்தார், கைலாசம் அய்யர். பின், ஹாலில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்தார்.

அப்போது, டபரா டம்ளரில் மணக்க மணக்க, சூடான காபி சகிதம் வந்து, ஊஞ்சல் ஓரமாக அமர்ந்தாள், அவரது தர்ம பத்தினி, பார்வதி.

''ஏண்ணா... நம் ஒரே செல்ல பொண்ணு, பாகீரதி இப்படி நடந்து கொள்றாளே... அவளை, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பையன்ட்ட, அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டு, கடைசியிலே பிடிக்கலைன்னு சொல்லி, அவாளை ஓட்டிட்டாளே...

''இப்படி, இதுவரை ஏழு புள்ளையாண்டான்கள் ஓடியாச்சு... 'பொண்ணு இஷ்டம் தான் முக்கியம். அவளே, தேர்வு பண்ணிக்கட்டும்...'ன்னு நீங்களும் சம்மதித்துட்டீங்க... பொண்ணு பேர்லே அப்படி என்ன ஊர், உலகத்திலே இல்லாத செல்லமோ, தெரியலை!''

இப்படி அங்கலாய்த்த பார்வதியை பார்த்து, சற்று இருமலோடு பேசலானார், கைலாசம்.

''இதோ பார் பார்வதி... நமக்கு இருப்பது ஒரே பொண்ணு, அவ இஷ்டம் தான் பிரதானம். நம் காலமெல்லாம் மலையேறி போச்சு... இந்த கால பெண்கள் அப்படி தான் இருப்பா... உன்னை பெண் பார்க்க வந்ததை கொஞ்சம் நினைச்சு பாரு...

''ஜகதோ தாரணா என்ற, கர்நாடக காபி ராகத்திலே, புரந்தரதாசர் கிருதியான அந்த பாட்டை, ரொம்ப அழகாக, ஸ்வரம் தப்பாமல் பாடின... அதோடு இணைந்து வீணையையும் வாசித்து, என்னை அசத்தினே... நான் பார்த்த ஒரே பெண் நீ, உனக்குமே பெண் பார்க்க வந்த, முதல் நபர் நான் தான்.

''குனிந்த தலை நிமிராம, என்னை கல்யாணம் செஞ்சுக்க, மனசார சந்தோஷமாக சம்மதித்தாயே... எல்லாம் பழைய காலம்... இப்போ அப்படியா,'' என, சொல்லியவாறு, மெதுவாக ஊஞ்சலை ஆட செய்தார், கைலாசம்.

''அதென்ன பழசு, புதுசெல்லாம் காலங்கள்... கார்த்தாலே சூரிய உதயம், சாயரட்சை அஸ்தமனம், பவுர்ணமி நிலா, பனி, மழை, வெயில், குளிர்... இவையெல்லாம் இப்போ மாறியா போச்சு... இல்லையே,'' என்றாள், பார்வதி.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அருகில் வந்தமர்ந்தாள், அவர்களின் செல்ல பெண், பாகீரதி.

''என்ன... என்னை பத்தி பேச்சு அடிபடறதே!''

''எல்லாம் உன்னை பத்தின கவலை தான் எங்களுக்கு. உன்னை பெண் பார்க்க வந்த அத்தனை பேரையும், ஓடும்படியா செஞ்சுட்டே... இதுவரை, ஏழு பேர் ஓடி போயிட்டா... உன் இஷ்டம் போல படிக்க வெச்சு, கை நிறைய சம்பளத்தில், உயர்ந்த வேலையும் வாங்கி வெச்சதெல்லாம் தப்போன்னு நினைக்கும்படி ஆயிடுத்து,'' என்றாள், பார்வதி.

''அம்மா... வந்ததுல ஒருவர் கூட, நான் கேட்ட கேள்விக் கெல்லாம், எதிர்பார்க்கற பதில் தரலையே... அதனால், பிடிக்கலை... விரட்டிட்டேன்,'' என்றாள், பாகீரதி.

''அது சரி... அக்கம் பக்கத்துகாரா எல்லாம், என் மண்டையை போட்டு உருட்டுறாளே... பொண்ணோட கணிசமான சம்பள பணம், இனிமே போயிடுமேங்கிற பேராசை... வர்ற வரனையெல்லாம் நாங்க தான் தட்டிக் கழிக்கிறோம்ன்னு பேசிக்கிறா...

''பொண்ணுக்கு, இந்த ஜென்மத்திலே கல்யாணத்தை நடத்தி வைக்க மாட்டார்கள், அவளை பெற்றவர்கள்... இப்படி, அரசல் புரசலா என் காது படவே பேசுறாளே... உனக்கு எங்கே தெரியப் போறது,'' என்றாள், பார்வதி.

''அம்மா - அப்பாவான, உங்க விருப்பப்படி, நன்னா படிச்சு, உங்க சொல்படி, உத்தியோகமும் பார்த்து, கை நிறைய சம்பளமும் வாங்கி, உங்களை மகிழ்ச்சியில் மூழ்க வைக்கிறேன்... எதிலேயாவது உங்க ரெண்டு பேரோட பேச்சை தட்டியிருப்பேனா...

''நீங்களே சொல்லுங்க... நான் நல்ல பொண்ணு, அம்மா - அப்பா தான் தெய்வம் எனக்கு... 'கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர்'ன்னு அப்பாவும், 'ஒருத்தன் பொண்டாட்டியையும் மத்தவன் கட்டிக்க முடியாது, பிரம்மா போட்ட முடிச்சுபடி தான் நடக்கும்'ன்னு, அம்மா, நீயும் சொல்வீங்களே... அது போல, எனக்குன்னு இனிமே ஒருத்தன் பிறக்க போறானா...

''உங்க ரெண்டு பேரோட சொல்லை அப்படியே தட்டாமல் கேட்டு நடந்து வருகிற நான், என் எண்ணப்படி மாப்பிள்ளை அமையணும்ன்னு முடிவு செஞ்சுட்டேன்... உங்க காலத்திற்கு பிறகும், நாங்க சந்தோஷமா வாழணும்ங்கிற ஒரே நோக்கம் தான். ஊர் என்ன சொன்னா என்ன, நீங்க, என்னை புரிஞ்சுக்கணும்,'' என கூறி முடித்தாள், பாகீரதி.

இந்த வியாக்யானத்தை கேட்ட பார்வதி, சற்று படபடப்புடன் பேசலானாள்...

''அது சரி... போன வாரம், ஒரு நல்ல புள்ளையாண்டான் வந்தானே... நல்ல லட்சணம், படிப்பு, உத்தியோகம் எல்லாமே சூப்பர். சொத்து சுகம் ஏராளம். ஒரே பிள்ளை. பிக்கல் பிடுங்கல் இல்லை. கவுரவமான குடும்பம். எல்லாத்துக்கும் மேலே ஜாதகமும், 10 பொருத்தமும் இருந்தது... அவனையும் விட்டு வைக்காம, கேள்வி பல கேட்டு திணறடிச்சே... அந்த சம்பாஷனையை, நானே மறுபடியும் சொல்றேன்; சித்த கேள்...'' என, தொடர்ந்தாள்...

''அப்போது நீ, 'உங்களை விட, என் படிப்பு மற்றும் சம்பளமும் அதிகம்... என் சம்பளத்தை நீங்க கேட்கக் கூடாது... மேலும், உங்களோட சம்பளத்தையும் அப்படியே என்கிட்டே தந்துடணும்... உங்க சம்பளம், என் சம்பளம் எல்லாம் சேர்த்து, என் இஷ்டப்படி நான் செலவு செய்வேன்... ஏன், எதுக்குன்னு கேள்வி மற்றும் கணக்கு வழக்கெல்லாம் கேட்கக் கூடாது...' என்றாய்.

''அவனும், 'என் சம்பளமும் உன் கையிலேயே தருவேன். கணக்கெல்லாம் கேட்க மாட்டேன். நம் ரெண்டு பேருடைய சம்பளமும், உன் இஷ்டபடி செலவு செய்யலாம்... எனக்கு திருப்தி, முழு மனசோடு சம்மதிக்கிறேன்...' என்றான்.

''இப்படி, உன் எடக்கு மடக்கான நிபந்தனைக்கு எல்லாம், 'பூம் பூம்' மாடு மாதிரி தலையை ஆட்டி, உன் கால்லே அவன் விழுந்து நமஸ்காரம் செய்யாத குறையாக, அத்தனைக்கும் சம்மதித்தவனையும், ஈவு இரக்கம் இல்லாமல், 'உங்களை எனக்கு பிடிக்கலை'ன்னு கூசாம பதில் சொல்லி, விரட்டிட்டே... நல்ல பொண்ணு,'' என்றாள்.

''தட் ஈஸ் பாகீரதி,'' என, ஒத்த வரியிலே பதில் சொல்லி, தன் அறையில் தஞ்சமானாள், பாகீரதி.

கணவர், கைலாசத்தை பார்த்து, ''கேட்டேளா... உங்க பொண்ணு லட்சணத்தை,'' என்றாள், பார்வதி.

''சரி... சரி... பாரு... கிருஷ்ண பரமாத்மா, எட்டாவது பிள்ளையா அவதரித்தார். அது போல, நம் பொண்ணை, இன்னிக்கி சாயங்காலம், பெண் பார்க்க, எட்டாவதா ஒரு நபர் வர்றார். தெரியுமோ, இல்லையோ... போய் வழக்கம் போல், பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் வக்கணையா செஞ்சுடு... நாம செய்றதை செஞ்சிடுவோம்.''

எல்லாவற்றையும் சிரத்தையாக செய்து முடித்தவுடன், பெண் பார்க்கும் படலம், மாப்பிள்ளையின் வருகையால் அமர்க்களமாகி, களை கட்டியது, கைலாசம் வீடு.

வந்த பையனிடம், இரு கரம் குவித்து, 'நமஸ்காரம்' சொல்லி, சோபாவிலே அமரப்போனாள் பாகீரதி. அதைப் பார்த்து, தடுத்தபடியே, ''நோ... நோ... இப்படிப்பட்ட வணக்கம் எல்லாம் கூடாது. பெண்ணா லட்சணமா மண்டியிட்டு, முழங்கால்கள், நெத்தியெல்லாம் தரையில் படற மாதிரி, அடக்கமுடன் நமஸ்காரம் செய்யணும், அது தான் அழகு; முறையும் கூட...

''பெண் பார்க்க வந்த நான் தான், பகிரங்கமா கேள்விகள் கேட்பேன்... மத்தவா கேள்வி கேட்க கூடாது... என் கேள்விக்கெல்லாம், பொண்ணு தான் பதில் சொல்லணும்... ஏத்துக்கிற மாதிரி இருந்தாத் தான், எங்க சம்மதத்தை சொல்வோம்,'' என்றான், புள்ளையாண்டான்.

''அப்படியா... வழக்கமா, எம் பொண்ணு தான் கேள்வி கேட்பா... இப்போ, நீங்க கேட்க போறீங்களா... சரி... சரி... கேளுங்கோ,'' என்றாள், பார்வதி.

''என்னை விட உயர் கல்வி உனக்கு... அதை போல, உயர் உத்தியோகம்... நீ வாங்குற சம்பள பணம் பூராவும் என்னிடம் அப்படியே வில்லாம, விரியாம தந்துடணும்,'' என்றான்.

இந்த முதல் கேள்விக்கு, ''ஓஹோ... அப்படியா... தந்துட்டா போச்சு,'' புருவம் உயர்த்தி, பதில் சொன்னாள், பாகீரதி.

''வேலைக்கு போக வேண்டாம்... வீட்டோட கிடன்னு நான் சொன்னா, மறு பேச்சு இல்லாம கேட்கணும், ஒப்புக்கணும்... வேலையை விட்டுடணும்.''

''ஆஹா... சரி... சரி,'' என்றாள், பாகீரதி.

''நம் கல்யாணம், பிரமாண்டமான கல்யாண மஹாலில் நடக்கக் கூடாது. வீட்டு வாசல் தெருவிலேயே இந்த கோடிக்கும், அந்த கோடிக்கும் பந்தல் போட்டு, தோரணம் கட்டி, அதில் தான் மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரை, ஊஞ்சல், மாங்கல்ய தாரணம் மற்றும் நலங்கு நிகழ்ச்சி எல்லாமே நடத்தணும், அந்த காலம் போல,'' என்றான்.

''வெரிகுட்... சூப்பர்... எனக்கும் அது தான் புடிக்கும்,'' என்றாள்.

''கல்யாண மங்கல வாத்திய நாதஸ்வர இசை, காருகுறிச்சி அருணாசலம் மற்றும் வலையபட்டி தவில் போன்ற பிரபலங்கள் வாசிக்க கூடாது... மிக சாதாரணமானவர்கள், அதாவது, நம் ஊர் கிருஷ்ணன் கோவிலில் நீண்ட காலமாக நாதஸ்வரம் வாசித்து வருகிற அங்கப்ப பிள்ளை... அவர் குழுவில் தோளில் தவிலை கட்டிண்டு, முதுகு வளைஞ்சு தவில் வாசிப்பாரே, வயதான தவசு பிள்ளை போன்றோரை, மங்கல வாத்திய கோஷ்டியா ஏற்பாடு செய்யணும். இதில் மாற்றம் கூடாது,'' என்றான், புள்ளையாண்டான்.

''அப்படியே செஞ்சுட்டா போச்சு,'' என்றாள், பாகீரதி.

''கல்யாண விருந்து சாப்பாடெல்லாம் மிகப்பெரிய, 'கேட்டரிங் கான்டிராக்ட்' எல்லாம் கூடாது. ஒரு மாதம் முன் கூட்டியே நம் வீட்டுக்கு வந்து, கல்யாணத்திற்கான அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், வடாம், வத்தல் மற்றும் ஊறுகாய் எல்லாம் தயாரிக்க முன் வர்ற, அக்ரஹாரத்து மாமிமார்கள் தான், கல்யாண சமையல், கட்டுச்சாத கூடை வரை எல்லாமே, அவாளை பயன்படுத்தி தான் செய்யணும்,'' என்றான்.

''இதுவும் வரவேற்க தகுந்ததே,'' என்றாள்.

''இப்போ சொல்ல போற சங்கதி முக்கியமானது. அதாவது, நாம் இருவர் நமக்கு இருவராக ஒரு ஆண், ஒரு பெண் தான் பெத்துக்கணும்ங்கிறது அரசு ஆணை. ஆனா, அவை எல்லாம் கண்டுக்கவே கூடாது. கணக்கு வழக்கில்லாம நிறையவே குழந்தை, குட்டிகள் பெத்துக்கிடணும், இதுக்கு, நீ பரிபூரணமா சம்மதிக்கணும் போதும் என்று கர்ப்பத்தடை செய்து கொள்ளக் கூடாது,'' என்றான்.

''சம்மதம்... பிள்ளை பெத்துகிற இயந்திரமா மாறிடறேன்,'' என்றாள்.

''பின் துாங்கி, முன் எழுவாள் பத்தினி என்பது போல், பணிவிடை செய்யணும்... காலை காபி, டீ இதெல்லாம் கூடாது. நீராகாரம் தான். வேலைக்காரி கிடையாது, வீட்டு வேலை பூராவும் நீதான் பார்க்கணும்... அதாவது, அதிகாலை எழுந்து, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, வீட்டை பெருக்கி, மொழுகி, துணி துவைத்து, சமையல் செய்து, சகல வேலைகளும் நீதான் செய்யணும்... மாடு குளிப்பாட்டி, பால் கறக்கற வரை,'' என்றான்.

''சபாஷ்... நல்ல தேக ஆரோக்யம் தான்... செய்யறேன்,'' என்றாள்.

''எனக்கு, அப்பா - அம்மா இல்லை. உன்னோட பெற்றோர் தான் எனக்கும், அப்பா - அம்மா. நம் கூட தான் அவாளும் இருக்கணும்... தனி குடித்தனம் கூடாது,'' என்றான்.

''சரியான ஈர நெஞ்ச புரட்சி எண்ணம். மகிழ்ச்சி. குதுாகல மனசோடு ஏத்துக்கிறேன்,'' என்றாள்.

''ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, என்னை போல, நீயும் உன் ரத்தம் பொருந்துகிறவர்களுக்கு தானம் செய்யணும்,'' என்றான்.

''இதுவும் எனக்கு பிடிச்சது தான். நிச்சயம் செய்வேன்,'' என்றாள்.

பெண் பார்க்க வந்தவன், இப்படி அடுக்கடுக்கான கட்டளைகளை சொன்னபோது, படபடத்தாள், தாய் பார்வதி.

''போதும்... போதும்... உங்க ராஜாங்க ஆணைகள். எம் பொண்ணுக்கு நீங்க சரிப்பட மாட்டீங்க... வேறு இடம் பாருங்க... புறப்படலாம் நீங்கள்,'' என்றாள், பார்வதி.

''அம்மா... அவசரப்படாதே... இவர் சொன்னபடி நடக்க, எனக்கு பரிபூரண சம்மதம். இது மாதிரி ஒரு ஆண் மகன் தான், எனக்கு கணவராக வரணும்... பரிபூரண சம்மதத்துடன், உன் வருங்கால மாப்பிள்ளை காலில் விழுந்து, நமஸ்காரம் செய்கிறேன்... இவர், என் கணவராக வருவது, நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம்... பகவான் அனுக்கிரகம்,'' என்றாள், பாகீரதி.

''இவளை திருமணம் செய்து, மனைவியாக அடையும் நானே பாக்யவான்... ஜாடிக்கு ஏற்ற மூடி... ஆகர்ஷன தம்பதியர் நாங்கள்,'' என, வருங்கால மாப்பிள்ளை, மகிழ்ச்சியோடு பேசியது, யாவரையும் வியக்க வைத்தது.

இரண்டு உள்ளங்கள் ஒன்றானது கண்ட பூரிப்புடன், விடு விடுவென பூஜை அறை அம்பாள் படம் முன் நின்று வணங்கி, 'என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே... என் அன்னையே...' என்று பாடியபடி, நமஸ்காரம் செய்தாள், பார்வதி.

'மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி...' என்று கண்களை மூடி, கைகள் கூப்பி, மெல்லிய குரலில் பிரார்த்தனை செய்தார், கைலாசம்.

பாகீரதி, கல்யாண வைபோகம், இனிதே நடந்தது!

அ.ராமன்

சொந்த ஊர்: காரைக்குடி, அழகப்பா கல்லுாரியில் கல்வி பயின்று, 40 ஆண்டுகாலம், அரசு பணிபுரிந்து, துணை தாசில்தாராக ஓய்வு பெற்றவர். தற்சமயம், எழுத்துத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறுகதை எழுதி பரிசு பெறுவது, இதுவே முதல் முறை. இது, தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us