PUBLISHED ON : மே 31, 2015

இயக்குனர் ஷங்கரின் புதிய கூட்டணி!
இயக்குனர் ஷங்கர், தான் இயக்கும் படங்களின் கதை உருவாக்கத்தின் போது, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் கலந்து தான் முடிவு செய்வார். அதனால், அவரது படங்களும் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருந்தது. ஆனால், ஐ படம் சுஜாதா இல்லாமல் உருவாக்கப்பட்ட கதை என்பதால், போதுமான கமர்ஷியல் வேல்யூ இல்லாததால், அடுத்து தான் இயக்கும் படத்திற்கு, நல்ல எழுத்தாளர் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஷங்கர், தற்போது, எழுத்தாளர் ஜெயமோகனை, தன் கதை இலாகாவில் இணைத்திருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக, வேறு இசையமைப்பாளருடன் கூட்டணி அமைக்கிறார் ஷங்கர்.
— சினிமா பொன்னையா
குட்டி ராதிகாவின் ஆசை!
இயற்கை, மற்றும் வர்ணஜாலம் ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. ஒரு கட்டத்தில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டிலானார். ஆனாலும், நடிப்பு ஆசை அவரை விடாமல் இருந்ததால், தற்போது ஒரு படத்தை தயாரித்து, நடிக்க முடிவெடுத்துள்ளார். நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள அப்படத்திற்கு, ஐ ஹேட் டான்ஸ் என்று பெயர் வைத்திருப்பவர், அதில் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபுதேவாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காரணம், பிரபுதேவாவுடன் ஒரு படத்திலேனும் இணைந்து நடனமாட வேண்டும் என்பது குட்டி ராதிகாவின் நீண்ட கால ஆசை. அதை, இப்படத்தில் நிறைவேற்ற இருக்கிறார். ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இரா!
— எலீசா
ஆபாச வீடியோ அதிர்ச்சியில் நடிகைகள்!
அனுஷ்கா, ராதிகா ஆப்தே, ஹன்சிகா மற்றும் லட்சுமி மேனன் என, பல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வைரஸாக பரவி, திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை தொடர்ந்து, தற்போது, உத்தமவில்லன் பட நாயகி பூஜாகுமாரின் ஆபாச வீடியோவும், இணையதளங்களில் பரவியுள்ளது. ஏற்கனவே, படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற போதும், எஞ்சியுள்ள நடிகைகள் வட்டாரத்தில் இது கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், 'இப்பிரச்னைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்று நடிகர் சங்கத்தை கேட்டு வருகின்றனர். கட்டுத்தறியை விட்டு, மேய்ச்சல் காட்டில் பிடிப்பது!
— எலீசா
விக்ரம் - முருகதாஸ் மோதல்!
ஐ படம், எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், பத்து எண்றதுக்குள்ள படத்தை, சூப்பர் ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று நினைக்கும் விக்ரம், சில காட்சிகள் தான் எதிர்பார்த்தபடி வராததால், திரும்ப திரும்ப அதை படமாக்க வைத்ததால், படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது. இதனால், அப்படத்தை தயாரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், செம டென்ஷனாகி விட்டார். அதையடுத்து, 'கூடுதலாக ஆன செலவை, விக்ரமின் சம்பளத்தில் தான் கை வைப்பேன்...' என்று சொன்னதை அடுத்து, புகைச்சலில் இருக்கிறார் விக்ரம்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
இந்தியா - பாகிஸ்தான் பட நாயகி, 'அடுத்த அருந்ததி நாயகி தான்தான்!' என்று பில்டப் கொடுத்து வருவதால், ஒரிஜினல் அருந்ததி நடிகை ஆவேசமாகி விட்டார். 'அதெப்படி நான் பீல்டில் இருக்கும் போது ஒரு நடிகை, என் பெயரை வைத்து பில்டப் கொடுப்பது...' என்று காண்டானவர், அந்நடிகையை அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு போன் போட்டு, அவருக்கான வாய்ப்புகளை திருப்பி விட்டு வருகிறார். இதனால், ஒரே ரன்னில் க்ளீன் போல்டாகி கிடக்கிறார் அந்த நடிகை.
கும்கி நடிகையை கமர்ஷியல் நடிகையாக்கும் நோக்கத்துடன் சில இயக்குனர்கள் கதை கூறினர். ஆனால், நடிகையோ, 'கணுக்கால் கவர்ச்சி கூட காட்ட மாட்டேன்...' என்று கறாராக கூறி விட்டார். இதனால், கடுப்பான இயக்குனர்கள் வேறு நடிகைகள் பக்கம் தாவி விட்டனர். இந்த சேதி அம்மணியின் காதுக்கு செல்ல டர்ராகி விட்டார். 'கவர்ச்சியாக நடிக்காதது ஒரு குத்தமா... இதை வைத்தே என்மார்க்கெட்டை காலி செய்து விடுவர் போலிருக்கே...' என்று புலம்பி வருகிறார்.
மணியான இயக்குனர் ஏற்கனவே ஒருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததோடு, உடம்பையும் சரியாக பராமரித்து வந்தார். இந்நிலையில், சமீபகாலமாக அவருக்கு அவ்வப்போது நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் ஏற்படவே, இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் செய்தி கசிந்து விடும் என்று, டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, திரும்பியுள்ளார். ஆனபோதும், விஷயம் வெளியில் கசிந்து விட, 'இது சாதாரணமான செக்கப்தான்...' என்று அவரது மனைவி மழுப்பியுள்ளார்.
சினி துளிகள்
* அஜித்தின், 56வது படத்தில் சந்தானத்திற்கு பதிலாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், காமெடி காட்சிகளில் சில திருத்தங்களை செய்திருக்கிறார் இயக்குனர் சிவா.
* விழித்திரு என்ற படத்தில் இடம் பெற்ற மஸ்கார பாடலில் ஆடிய அஷ்மிதாவுடன் இணைந்து, ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் டி.ராஜேந்தர்.
* இஞ்சி இடுப்பழகி படத்தில், ஒரு இடுப்பு டான்ஸ் பாடலுக்கு சிம்ரன் போன்று இடுப்பை வளைத்து, நெளித்து ஆடுகிறார் அனுஷ்கா.
* ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியான இசையமைப்பாளர் ரெஹானா, தன் பெயருடன் தந்தையின் பெயரான சேகரையும் இணைத்து, தற்போது, ரெஹானா சேகர் என்று தன் பெயரை மாற்றியுள்ளார்.
* ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து, தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார் மணிரத்னம்.
* சல்மான் கானுக்கு தண்டனை வழங்கப் பட்டிருப்பதற்கு ஷாருக் கான், அமீர் கான் போன்ற இந்தி நடிகர்கள் எவ்வித கருத்தும் சொல்லாமல், மவுனம் சாதித்து வருகின்றனர்.
* வாய்மை படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு, பாரதிராஜாவின் மகன் மனோஜ், பாண்டியராஜின் மகன் ப்ருத்வி ஆகியோர் நடித்துள்ளனர்.
* விஜய் ஆன்டனியுடன், இந்தியா - பாகிஸ்தான் படத்தில் நடித்துள்ள சுஷ்மாராஜ், கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அவ்ளோதான்!
