PUBLISHED ON : ஆக 25, 2019

சிவாஜி பட தலைப்பில், தனுஷ்!
சிவாஜிகணேசன் நடித்த, திருவிளையாடல் தலைப்பில், ஒரு படத்தில் நடித்தார், தனுஷ். ஆனால், சிவாஜி ரசிகர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த படத்திற்கு, திருவிளையாடல் ஆரம்பம் என்று, மாற்றி வைத்தார். இந்நிலையில், தான் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு, சிவாஜி நடித்த, கர்ணன் தலைப்பை வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கும் எதிர்ப்பு எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கர்ணன் படத்தை தயாரித்த நிறுவனத்திடமே அனுமதி கேட்கப் போகிறார், தனுஷ்.
- சினிமா பொன்னையா
தாய்மொழியில் தஞ்சமடைந்த, கீர்த்தி சுரேஷ்!
'கோலிவுட்'டின், இளவட்ட கதாநாயகர்கள் எல்லாம், கீர்த்தி சுரேஷை ஓரங்கட்டி விட்டனர். ஆனால், மலையாளத்தில், மோகன்லால் மற்றும் அவர் மகன், பிரணவுடனும், தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இதே வேகத்தில் மலையாள இளவட்டங்களுடன், பெரிய ரவுண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக, சென்னை முகாமை காலி செய்து, தாய் வீடான, கேரளத்துக்கு இடம்பெயர்ந்துள்ளார், கீர்த்தி சுரேஷ். காற்றுக்கு தகுந்தாற்போல் பாயை மாற்றிக் கட்டு!
- எலீசா
62 வயது அதிரடி நடிகர்!
நடிகர், மொட்டை ராஜேந்திரன், 'ஸ்டன்ட்மேன்' ஆக இருந்து, நடிகரானவர். இப்போதும், சில படங்களில், 'ஸ்டன்ட்மேன்' ஆக பணியாற்றும்போது, உயரமான கட்டடத்தில் இருந்தும் தைரியமாக குதிக்கிறார். 62 வயதில், பலர் நடக்கவே தடுமாற, இப்போதும், இளவட்ட காளையாக, மொட்டை ராஜேந்திரன், 'குஸ்தி' செய்வது, கோலிவுட்டை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
- சி.பொ.,
கருத்தும், 'கமர்ஷியலும்!'
பிகில் படத்திலும், மெர்சல் படத்தைப் போன்றே, அதிரடியான தகவலுடன் களமிறங்கியுள்ளார், விஜய். அதே சமயம், கருத்து சொல்கிறோம் என, 'கமர்ஷியல்' காட்சிகளுக்கு, கத்தரி வைத்து, ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று நினைக்கிறார். அதற்காக, இந்த படத்தில், பைக்கில் பறப்பது, தண்ணீரில், 'டைவ்' அடிப்பது மற்றும் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்துவது என, இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தும் பல காட்சிகளில், முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார், விஜய்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
மீண்டும், 'ஹீரோ' ஆக, 'ரீ - என்ட்ரி' கொடுத்த, நடன சூறாவளி நடித்த பல படங்கள், தயாரிப்பாளர்களுக்கு, பெரும் நஷ்டத்தை கொடுத்து விட்டன. அதில் சிலர், வீடு, வாசலை கூட விற்று விட்டனர். ஆனபோதும், 'எனக்கான சம்பள பாக்கியை தள்ளுபடி செய்யாமல், மொத்தத்தையும் பைசல் செய்தாக வேண்டும்...' என்று, அவர்களுக்கு, 'கெடு' வைத்து விட்டார், நடன சூறாவளி.
இந்த செய்தி, காட்டுத்தீயாக பரவியதை அடுத்து, 'கொஞ்சம் கூட பாவ புண்ணியம் பார்க்காத, இந்த நடிகரை வைத்து, படம் எடுப்பதே பெரிய பாவம்...' என்று, அவரை வைத்து, அடுத்தபடியாக படம் எடுக்க இருந்தவர்கள், தெறித்து ஓடி விட்டனர்.
'தம்பி... உன் மனசுல என்ன, பிரபுதேவான்னு நினைப்பா... ரோடுல இப்படி, 'டான்ஸ்' ஆடிட்டுப் போற... வண்டிக்காரன் மோதிட்டு போயிட போறான்...' என்றார், பெரியவர் ஒருவர்.
சினி துளிகள்!
* இந்தியில் இயக்கிய சில படங்கள், அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால், படம் இயக்குவதை நிறுத்தி, மீண்டும் நடிகரானார், பிரபுதேவா.ஆனால், மறுபடியும், ஒரு இந்தி படத்தை இயக்கி வருகிறார்.
* தமிழில், எட்டு ஆண்டுகளுக்கு முன், தம்பிக்கோட்டை படத்தில் நடித்தார், மீனா, அதன்பின், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது, ஒரு, 'வெப்சீரிஸில்' நடிக்கிறார்.
* விஜய் சேதுபதி நடிக்கும், துக்ளக் தர்பார் படத்தில், அதிதிராவ், நாயகியாக நடிக்கிறார்.
அவ்ளோதான்!
