PUBLISHED ON : மார் 22, 2020

வித்தியாசமான அனுபவங்களை தேடும், ரஜினி!
சமீப காலமாக, இளவட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்கும், ரஜினி, தன்னுடன் நடிப்பவர்களும், மாற்று மொழி நடிகர் -- நடிகைகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதன் காரணமாக, எந்திரன் படத்தில், ஐஸ்வர்யா ராய்; லிங்கா படத்தில், சோனாக் ஷி சின்ஹா; கபாலி படத்தில், ராதிகா ஆப்தே; காலா படத்தில், ஹூமா குரோஷி என, பாலிவுட் நடிகைகளுடன் நடித்தார். அதேபோல், காலா படத்தில், நானே படேகர்; பேட்ட படத்தில், நவாசுதீன் சித்திக்; 2.0 படத்தில், அக்சய்குமார்; தர்பார் படத்தில், சுனில்ஷெட்டி என, பாலிவுட் வில்லன்களுடன் நடித்தார். தற்போது, அண்ணாத்த படத்திலும், மாற்று மொழி வில்லனே வேண்டும் என்று கூறியிருப்பதால், இந்திய அளவில் உள்ள பிரபல வில்லன்களிடம், 'கால்ஷீட்' பேசி வருகின்றனர்.
சினிமா பொன்னையா
சன்னிலியோன் செய்த, 'மேஜிக்!'
ஆபாச பட நடிகை, சன்னி லியோன் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டதால், ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் காரணமாக, இதுவரை, ஆபாச புகைப்படம், வீடியோ என்று வெளியிட்டு வந்தவர், இப்போது, தான், 'மேஜிக்' செய்வது போன்ற ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணிமைக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள சாகசங்கள், இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுக்கும் வகையில் அமைந்துள்ளது. கருடி கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வித்தை!
எலீசா
ரோட்டோர கடையில், தோசை சுட்ட ஐஸ்வர்யா!
அஜீத்தை போலவே, ஐஸ்வர்யா ராஜேஷும், கிச்சன் கில்லாடி. அவர் வீட்டிற்கு யார் சென்றாலும், உடனே டிபன் செய்து தருகிறார். தானும் கிச்சன் கில்லாடி தான் என்பதை வெளிப்படுத்த, ஒரு ரோட்டோர கடையில், தோசை சுடும் வீடியோவை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து, 'நீங்கள் எந்த ஏரியாவுல, கையேந்தி பவன் வச்சிருக்கீங்க ஐசு... உங்க கையால சுடச்சுட, ஸ்பெஷல் தோசை சாப்பிடணும்ன்னு ஆசையா இருக்கு...' என்று, ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர். கைத்தொழில் இருக்க, கவலை இல்லை!
— எலீசா
சவாலை, 'வாபஸ்' பெற்ற, நிவேதா!
'தமிழ் சினிமாவில், தமிழ் நடிகைகளால் கோலோச்ச முடியாது என்று, சிலர் சொல்லிய கருத்தை, நான் பொய்யாக்கி காட்டுவேன்...' என்று, சவால் விட்ட, நிவேதா பெத்துராஜ், சில படங்களில் நடித்தார். ஆனால், சுத்த தமிழில் பேசியதால்தானோ என்னவோ, அவரை யாரும் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால், 'தமிழ் நடிகை என்று வெளிப்படையாக சொன்னதும், என்னையும் புறக்கணித்து விட்டனரே...' என்று, தன் சவாலை, 'வாபஸ்' பெற்று, டோலிவுட்டில் தஞ்சமடைந்து விட்டார். உண்மையை சொன்னவள், ஊருக்கு பொல்லாதவள்!
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உலக நடிகருடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தாலி அணியாத மனைவியாக வாழ்ந்த நான்கெழுத்து நடிகை, பின்னர் வெளியேறினார். இப்போது, அவருடன் நடித்த இன்னொரு, 'மாஜி ஹீரோயினி'யையும், 'நடிகரின் அடுத்த மனைவி' என்று, 'சோஷியல் மீடியா'வில் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு, உலக நடிகரோ, சம்பந்தப்பட்ட நடிகையோ, இன்னமும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதனால், அந்த புகைச்சல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
'பக்கத்து வீட்டுக்கு, புதுசா குடி வந்த கமலநாதன், கிரஹப்பிரவேச விழாவுக்கு அழைச்சார்ன்னு போய் வந்த சரி... அதோடு விட வேண்டியது தானே, பூஜா. அவன் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கெல்லாம் தவறாம கலந்துக்கணும்ன்னு ஒத்த கால்ல நிக்கறயே... இது உனக்கே சரியா படுதா... வேண்டாம்டி கண்ணு... பின்னாளில் விபரீதத்தில் முடியும்...' என்று எச்சரித்தார், அம்மா.
சினி துளிகள்!
* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படத்திற்கு, ஜகமே தந்திரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
* விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் படங்களில் நடித்த, பூஜாகுமார், கமல் வீட்டில் நடக்கும், அனைத்து விசேஷங்களிலும் கலந்து கொள்கிறார்.
அவ்ளோதான்!
