PUBLISHED ON : மார் 13, 2022

அஜித்தின், பாலிவுட் பிளான்!
தற்போதைய தமிழ் நடிகர்களில், தனுஷ், விஜய் சேதுபதி போன்றோர், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகின்றனர். விரைவில், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார், விஜய். இந்நிலையில், அஜித்குமார் எப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது, அஜித் நடித்துள்ள, வலிமை படம், ஹிந்தியில், 'டப்' செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், தான் தமிழில் நடித்துள்ள இன்னும் சில படங்களையும் ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட்டு, வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறார், அஜித். அதன் பிறகு, ஹிந்தியில் நேரடியாக, 'மாஸ் என்ட்ரி' கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அப்படி, ஹிந்தியில், அஜித், 'என்ட்ரி' கொடுக்கும் படம், அதிரடியான, 'ஆக் ஷன்' கதையில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளது; நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கப் போகிறார்.
— சினிமா பொன்னையா
இரட்டை அவதாரம்!
தமிழ் சினிமாவில், ஸ்ருதி ஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் போன்ற சில நடிகையர், பின்னணியும் பாடி வருகின்றனர். இந்நிலையில், விருமன் படத்தில், கார்த்தியுடன் கதாநாயகியாக நடித்துள்ள, இயக்குனர் ஷங்கரின் மகளான, அதிதி ஷங்கர், காணி என்ற தெலுங்கு படத்தில், தமன் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். எம்.பி.பி.எஸ்., படித்து முடித்துள்ள, அதிதி, சிறு வயதில் இருந்தே கர்நாடக இசையும் பயின்று வந்திருக்கிறார். அதனால், 'சினிமாவில் நடித்துக் கொண்டே பின்னணி பாடுவது மற்றும் இசையமைப்பதிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன்...' என்கிறார்.
— எலீசா
உலக தரத்தை நோக்கி, தமன்னா!
தமன்னாவை, சினிமா இயக்குனர்கள் ஓரங்கட்டிய போதும், 'வெப் சீரியல்' இயக்குனர்கள் அரவணைத்து வருகின்றனர். இதனால், 'ரூட்'டை மாற்றி, அந்த பக்கம், 'பிசி' ஆகி விட்டார். 'சினிமாவிற்கு இணையாக, 'வெப்சீரியல்' தயாரிக்கப்படுவதால், எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதோடு, சினிமாவில் நடித்தால், குறிப்பிட்ட மாநில ரசிகர்கள் தான், அந்த படங்களை பார்ப்பர். ஆனால், 'சோஷியல் மீடியா'வில், 'வெப்சீரியல்' வெளியாவதால், உலகளவில் உள்ள ரசிகர்களை போய் சேருகிறது. அதனால், 'வெப்சீரியல்' என்னை உலக தர நடிகை என்ற பட்டியலை நோக்கி எடுத்துச் செல்வதாகவே உணருகிறேன்...' என்று, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
— எலீசா
கரை வேஷ்டி நடிகராக, சிவகார்த்திகேயன்!
அதிரடியான அரசியல் கதைகளில் நடித்தால் தான், பரபரப்பான நடிகராக முடியும் என்பதால், தற்போது, தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடத்தில், அரசியல் கலந்த கதைகளை கூறுமாறு கேட்டு வருகிறார், சிவகார்த்திகேயன். 'அரசியல் கதைகளில் நடித்தால், சர்ச்சைகளில் சிக்க வேண்டியிருக்குமே...' என்று, தயங்குகின்றனர், இயக்குனர்கள்.
'சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு... அரசியல் என்றால் அடிதடியும் இருக்கத்தான் செய்யும். அதற்கெல்லாம் பயந்தா பெரிய, 'ஹீரோ' ஆக முடியுமா? கதையை தயார் பண்ணுங்க. களத்தில் இறங்கிடுவோம்...' என்று, இயக்குனர்களுக்கு தைரியம் சொல்லி வருகிறார், சிவகார்த்திகேயன்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், 'டீன் - ஏஜ்' பையன்களைப் போன்று, 'கலரிங் ஹேர்ஸ்டைல்
கெட் - அப்'பில் நடித்து வருகிறார், வடிவேலு.
* விஜயின், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள, 'அரபிக் குத்து...' பாடலை, அனிருத்துடன் இணைந்து பாடியுள்ள, ஜோனிதா காந்தி, நயன்தாரா தயாரித்து வரும், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்ற படத்தில், நாயகியாக
நடிக்கிறார்.
* வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரத்துரை என, பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, டைகர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அவ்ளோதான்!
