PUBLISHED ON : மே 29, 2022

எஸ்.ஜே.சூர்யாவை, 'டென்ஷன்' ஆக்கிய, 'ஹீரோ'கள்!
தற்போது, வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அவரது நடிப்புக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனபோதிலும், சில, 'ஹீரோ'கள், எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுப்பதற்கும் அல்லது பிரமோஷனில் அவரது புகைப்படங்களை அதிகமாக பயன்படுத்துவதற்கும் தடை போடுகின்றனர்.
இதையறிந்த எஸ்.ஜே.சூர்யா, தன்னை இருட்டடிப்பு செய்ய நினைக்கும், 'ஹீரோ'களின் படங்களை தவிர்க்கத் துவங்கி விட்டார். அதோடு, இயக்குனர்களிடத்தில் தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்பதோடு, படத்தின் விளம்பரங்களில், 'ஹீரோ'வுக்கு இணையாக தன் புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என, 'அக்ரிமென்ட்' போட்டு ஒப்பந்தமாகி வருகிறார்.
— சினிமா பொன்னையா
நயன்தாராவை வளைத்துப் போடும், பாலிவுட்!
'பாலிவுட் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்...' என்று, அடம் பிடித்து வந்த, நயன்தாராவை, ஷாருக்கானை வைத்து தான் இயக்கி வரும் படத்தில் நடிக்க வைத்து விட்டார், அட்லி. இந்த படத்தில், நயன்தாரா நடித்து வரும் புகைப்படங்கள் அங்குள்ள மீடியாக்களில் வெளியானதையடுத்து, தற்போது, சல்மான்கான் படத்தில் நடிப்பதற்கும், அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
இதனால், சமந்தாவை தொடர்ந்து, நயன்தாராவும், பாலிவுட்டில் முகாம் போட தயாராகி வருகிறார். இப்படி, 40 வயதில் நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்து நிற்பதைப் பார்த்து அங்குள்ள இளவட்ட நடிகையர், மிரண்டு போயுள்ளனர்.
— எலீசா
தனுஷை ஸ்வீடன் நாட்டுக்கு அழைக்கும், நடிகை!
நானே வருவேன் படத்தில், நாயகியாக நடித்திருப்பவர், ஸ்வீடன் நாட்டு நடிகை, எல்லி அவ்ரம். இந்த படத்தில், நடிக்க துவங்கியபோது, எத்தனை கஷ்டமான காட்சியாக இருந்தாலும், 'சிங்கிள் ஷாட்'டில், தனுஷ் நடித்து ஓ.கே., பண்ணியதைப் பார்த்து, அசந்து விட்டார்.
படத்தில் நடித்து முடித்து, தன் நாட்டுக்கு திரும்பும்போது, 'உங்களுடைய திறமையை ஸ்வீடன் நாட்டு சினிமா இயக்குனர்களிடம் சொல்லி, அங்குள்ள படங்களிலும், நீங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கச் செய்வேன்...' என்று, தனுஷிடம் கூறிச் சென்றுள்ளார், எல்லி அவ்ரம்.
அதனால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என, பறந்து கொண்டிருக்கும், தனுஷின் கொடி, அடுத்தபடியாக, ஸ்வீடன் நாட்டிலும் பறக்கலாம்.
— எலீசா
விக்ரம் பிரபுவின், புதிய முடிவு!
சிவாஜியின் பேரன் மற்றும் பிரபுவின் மகன் என்ற பெருமையுடன் தமிழ் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தார், விக்ரம் பிரபு. பல படங்களில் நடித்திருந்த போதும், சிவாஜியின் பேரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, அவர் நடிப்பு இதுவரை பேசப்படவில்லை.
இதன் காரணமாக, தன் தாத்தா மற்றும் அப்பாவின் பெயரை காப்பாற்றும் வகையில், திறமைக்கு சவால் விடக்கூடிய முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்க தயாராகிவிட்டார்.
'இனிமேல், ஆண்டுக்கு ஒரு படம் என்றாலும், அந்த படங்களில், தாத்தா சிவாஜியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், அழுத்தமான நடிப்பை கொடுப்பதற்கு தயாராகி வருகிறேன். இதற்காக, ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கு முன்பும் பலமுறை, 'ஹோம்வொர்க்' செய்து, களம் இறங்க திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், விக்ரம் பிரபு.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* கன்னட நடிகர், யஷ் நடித்து, சமீபத்தில் வெளியான, கேஜிஎப்- 2 படம், தமிழில், 100 கோடி ரூபாய் வசூலித்த முதல், 'டப்பிங்' படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
* அஜித் நடித்து வரும், 61வது படத்தில், மலையாள நடிகை மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கிறார்.
* மணிரத்னம் இயக்கிய, செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் இணைந்து நடித்த அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி இருவரும், தற்போது, காந்தி டாக்ஸ் என்ற ஹிந்தி படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இப்படம், பேசும் படம் பாணியில், வசனமே இல்லாமல் உருவாகிறது.
அவ்ளோதான்!
