PUBLISHED ON : மே 28, 2023

மீண்டும் இரட்டை வேடத்தில் அஜித்குமார்!
துணிவு படத்தை அடுத்து, மகிழ் திருமேனி இயக்கும், விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார், அஜித் குமார். மேலும், பல படங்களில், 'நெகட்டீவ் ரோலிலும்' நடித்திருக்கிறார்.
அந்த வகையில், இந்த படத்தில், 'ஹீரோ' மற்றும் வில்லன் என, எதிரும் புதிருமான இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, வாலி, வில்லன், அசல் மற்றும் பில்லா என, பல படங்களில், அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
— சினிமா பொன்னையா
உயிர் பெற்று வரும், விவேக்!
நடிகர் விவேக், தமிழ் சினிமாவில் அனைத்து,'ஹீரோ'களுடனும் நடித்து விட்டபோதும், கமலஹாசனுடன் மட்டுமே, அவர் இணைந்து நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், கமலுடன் இணைந்து நடிக்க, இந்தியன் -2 படத்தில், அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, மறைந்து விட்டார், நடிகர் விவேக்.
இதேபோல், அப்படத்தில் நடித்து வந்த, இன்னொரு நடிகரான, நெடுமுடி வேணுவும், இறந்து விட்டார். இதன் காரணமாக, அவர்கள் சம்பந்தப்பட்ட மீதமுள்ள காட்சிகளை, அதே சாயலில் உள்ள நடிகர்களை வைத்து, நவீன தொழில்நுட்ப வசதியுடன் படமாக்க திட்டமிட்டுள்ளார், இயக்குனர் ஷங்கர்.
மேலும், நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரின் குரலை மிமிக்ரி மூலம் பேசக் கூடிய டப்பிங் கலைஞர்களையும் தயார் செய்துள்ளார். அதனால், இந்தியன்- 2 படத்தில் நடிக்க வந்து, மறைந்த போதும், மீண்டும் இப்படத்தில் இந்த கலைஞர்கள் இருவரும், உயிர் பெற்று வரப் போகின்றனர்.
— சி.பொ.,
விஜய்க்கு, 'ரூட்' விடும், ஐஸ்வர்யா லட்சுமி!
ஆக் ஷன், ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள, ஐஸ்வர்யா லட்சுமி, அடுத்தபடியாக, விஜயுடன் எப்படியேனும், 'டூயட்' பாடி விட வேண்டும் என்பதற்காக, அவரிடத்தில் கதை சொல்லியிருக்கும் இயக்குனர்களை துரத்தி வருகிறார்.
'குறிப்பாக, தமிழில், விஜயுடனும், ஹிந்தியில், அபிஷேக் பச்சனுடனும், 'டூயட்' பாட வேண்டும் என்பது, என் தீராத கனவாக இருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதை, நனவாக்கி காட்டுவேன்...' என்று, சவால் விட்டுள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி.
— எலீசா
'சவுத் குயின்' ஆக உருவெடுத்த, த்ரிஷா!
தற்போது, 41 வயதை எட்டிப் பிடித்துள்ள, த்ரிஷா, நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்று எடுத்து வந்த முயற்சி, கனிந்து வருகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பின், தி ரோடு படத்தில், அதிரடி, 'ஆக் ஷன் ஹீரோயினி' ஆக நடித்து வருகிறார்.
இந்த படத்தில், நயன்தாரா உள்ளிட்ட எந்த, 'ஹீரோயினி'களும் நடிக்காத அளவுக்கு, 'ஆக் ஷன்' காட்சிகளில் பறந்து பறந்து நடித்து வருகிறார், த்ரிஷா. அதுமட்டுமின்றி, இந்த படத்தில், அவருக்கு, 'சவுத் குயின்' என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில், தன், 41வது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து, சீரடி சாய்பாபா கோவிலுக்கு, தன் தோழியருடன் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.
— எலீசா
அட்லிக்கு நம்பிக்கை கொடுத்த, ஷாருக்கான்!
ஷாருக்கான் நடித்து வரும், ஜவான் படம் மூலம், ஹிந்தியில் கால் பதித்துள்ள, இயக்குனர் அட்லி, தற்போது, மும்பையில், 38 கோடி மதிப்பில், ஒரு பங்களா வாங்கி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், ஷாருக்கான் தானாம்.
'ஜவான் படம், கண்டிப்பாக, 'பிளாக்பஸ்டர் ஹிட்' அடிக்கும். அதன்பின், ஹிந்தியில் உங்கள் இயக்கத்தில் நடிக்க, பாலிவுட், 'ஹீரோ'கள் படையெடுப்பர். அதனால், நிரந்தரமாக மும்பையில் குடியேறி விடுங்கள்...' என்று கூறியிருக்கிறார். இப்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் கொடுத்த நம்பிக்கை காரணமாகவே, மும்பையில் பங்களா வாங்கி குடியேறி இருக்கிறார், இயக்குனர் அட்லி.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தளபதி நடிகருடன் இணைந்திருக்கும், மூனுஷா நடிகை, அடுத்தடுத்து, அவரது புதிய படங்களிலும் ஜோடி போட, திரை மறையில், 'டீல்' போட்டு வந்தார். ஆனபோதிலும், தளபதியின் அடுத்த பட வாய்ப்பை, வேற்று மொழி நடிகை, குறுக்கே புகுந்து தட்டி பறித்திருக்கிறார்.
அதிலும் அவர், 19 வயது நடிகை என்பதால், தளபதி நடிகராலும் ஏதேனும் உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி, படத்திலிருந்து தவிர்க்க முடியவில்லையாம்.
இதன் காரணமாக, 'தளபதி நடிகரை உடும்பு பிடி போட்டு கெட்டியாக பிடித்து வைத்த போதும், அடுத்த பட வாய்ப்பு கை மீறி போய் விட்டதே...' என்று, மூனுஷா நடிகை, பெரும் கவலையில் உறைந்திருக்கிறார்.
சினி துளிகள்!
* விஜயின், 68வது படத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்
அவ்ளோதான்!
