
ஈழத்தமிழர் கதையில் தேன் கூடு!
ஆர்யா நடித்த, கலாபக்காதலன் படத்தை இயக்கியவர் இகோர். இவர் இப்போது, ஈழத்தமிழர் கதையில், தேன் கூடு என்றொரு படத்தை இயக்கியுள்ளார். 1989ல் இலங்கை திரிகோண மலையில் இருந்த தென்னமரத்தடி என்ற கிராமம், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்டது. அதன்பின், இலங்கை வரைபடத்தில் இருந்தே நீக்கப்பட்ட அக்கிராமம், மறுபடியும் துளிர்த்து வருவது போன்று, மேற்படி படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறுகிறார் இகோர்.
— சினிமா பொன்னையா.
திக்குமுக்காடிய அமலா பால்!
டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்க, நடிகர் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி அமலா பால். இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வந்தார் அவர். இதற்கிடையே, பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், அடுத்து அஜீத்தை வைத்து இயக்கும் படத்திலும் அமலா பாலிடம் கால்ஷிட் கேட்டுள்ளார். இதனால், சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கும் இவர், புதிதாக தேடிவரும் தெலுங்கு பட வாய்ப்புகளை திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். 'இனி, நான் முழு நேர தமிழ் நடிகை...' என்றும், உற்சாக முழக்கமிடுகிறார். வேண்டி, வேண்டி கொடுத்தாலும் வேண்டாம் என்றார் போல்!
— எலீசா.
தனுசுக்கு - தங்கம்; சிம்புவுக்கு - வெண்கலம்!
தனுஷ் எழுதி, பாடின கொலைவெறி... பாடலை போன்று, காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி, ஒரு பாடலை எழுதி பாடினார் சிம்பு. ஆனால், 'யு ட்யூப்'பில் வெளியான அந்த பாடலுக்கு, தனுஷ் பாடல் அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால், தனுசுக்கு தங்கம் விருதளித்த, 'யு ட்யூப்' நிறுவனம், சிம்புவுக்கு வெண்கல விருது வழங்கியுள்ளது. இதனால், 'மீண்டும் ஒரு அதிரடி பாடலை வெளியிட்டு, தங்கம் வெல்வேன்...' என்று ஆவேசம் கொண்டுள்ளார் சிம்பு.
— சி.பொ.,
சமூக சேவை செய்ய விரும்பும் ஸ்ரேயா!
தன் பனிரெண்டு வருட சினிமா பயணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், என, பல மொழி படங்களில் நடித்து விட்டது திருப்தியாக உள்ளது என்கிறார் ஸ்ரேயா. இந்நிலையில், 'தற்போது போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால், விளம்பர படங்களில் நடிக்கும் நான், சமூக சேவைகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறேன். இது, எனக்கு சினிமாவை விட, கூடுதல் திருப்தியாக இருக்கிறது...' என்கிறார். பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
— எலீசா.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி!
தற்போது, ஸ்பீல்பெர்க் படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் இந்தியாவிலுள்ள முக்கிய நகரங் களான, மும்பை, டில்லி, கோல்கத்தா, சென்னை, ஆகிய நகரங்களில், மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதில், இசைக் கருவி வாசிப்பதற்கும், பாடுவதற்கும் வெளி நபர்கள் யாரையும் பயன்படுத்த போவதில்லை யாம். தன் இசைப்பள்ளியில் பயிலும், திறமை யான கலைஞர்களை வைத்தே நடத்த இருக்கிறார்.
— சி.பொ.,
வடிவேலுவுக்கு எதிர்ப்பு!
தன்னை நாயகனாக வைத்து, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்பு தேவனிடம், தொடர்ந்து சான்சு கேட்டு வந்தார் வடிவேலு. இதனால், தனுஷை கொண்டு, தான் இயக்கும் புதிய படத்தில், வடிவேலுக்கு, ரீ- என்ட்ரி கொடுக்க முன் வந்தார் சிம்பு தேவன். ஆனால், இடையில் தனுஷ் புகுந்து, 'என் படத்துக்கு வடிவேலு செட்டாகாது...' என்று, தன் எதிர்ப்பை தெரிவித்து விட்டார். இதனால், சிம்பு தேவன், வடிவேலுவை கழட்டி விட முடிவு செய்து விட்டார்.
— சினிமா பொன்னையா.
சின்னத்திரைக்கு வந்த அசின்!
இந்தியில் அசின் நடித்த படங்கள், தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், மார்க்கெட்டில் பின்தங்கி விட்டார். அதோடு, அவரது ஆதிக்கத்தால், பட வாய்ப்பு இல்லாமலிருந்த கத்ரீனா கைப், கரீனா கபூர், வித்யா பாலன் உள்ளிட்ட சில நடிகைகள், அசினுக்கு வர இருந்த புதிய படங்களை கைப்பற்றி விட்டனர். இதனால், அடுத்தடுத்து நடிக்க படம் இல்லாமல் இருக்கும் அசின், திடீரென்று சின்னத்திரைக்கு தாவி விட்டார். இந்தியாவில், சூப்பர் ஸ்டார் சான்டா என்ற பெயரில் உருவாகும் தொடரில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போகிற போது பொறி தட்டினது போல!
— எலீசா.
அவ்ளோதான்!

