PUBLISHED ON : ஜன 16, 2022

கர்நாடகா மாநிலம், ஹம்பியிலிருந்து, 20 கி.மீ., சென்றால், ஆனகுந்தி கிராமத்தை காணலாம். இங்கு வாழும் பழங்குடி மக்கள், குருபர் இனத்தவர்கள். பரம்பரையாக ஆடு மேய்ப்பது தான், இவர்களுடைய குல தொழில்.
இந்த இன மக்கள், கூட்டமாக பக்கத்து கிராமங்களுக்கு போகும்போது, ஆடுகளையும் கூடவே அழைத்து செல்கின்றனர். அவர்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருப்பர். ஒரு இடத்துக்கு சென்றால் அங்குள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் தங்க வைப்பர்.
இவர்கள் மீது பரிதாபப்பட்டு இப்படி அனுமதிப்பதாக நினைக்க வேண்டாம். ஆடுகளை மாதக்கணக்கில் நிலங்களில் மேய விடும்போது, அவைகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் நிலத்திற்கு சிறந்த இயற்கை உரமாகி விடும். சில மாதங்களுக்கு பிறகு வேறு ஊருக்கு செல்வர். இதற்கிடையில், இவர்களுடன் வந்திருக்கும் பெண்கள் கர்ப்பமானால், அவர்களை ஊருக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
- ஜோல்னாபையன்
