தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நோய்க்கு தங்கக் குட மருந்து!

நோய்க்கு தங்கக் குட மருந்து!

நோய்க்கு தங்கக் குட மருந்து!


PUBLISHED ON : மார் 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோய்கள் தீர, கேரள மாநிலம், சேர்த்தலா, மருத்தோர் வட்டத்திலுள்ள, தன்வந்திரி கோவிலில், தங்கக் குடத்திலுள்ள மருந்து தருகின்றனர்.

தேவர்களும், அசுரர்களும், பாற்கடலை கடைந்த போது, ஜோதி வடிவாக, மஞ்சள் ஆடை உடுத்தி, அமிர்த கலசத்துடன் தோன்றியவர், தன்வந்திரி. ஆயுர்வேதத்தின் பிதா எனப்படுகிறார். நான்கு கைகளை உடைய இவரது கழுத்தில், மூன்று ரேகைகள் காணப்படும்.

வயலார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பல காலமாக, வயிற்று வலியால் அவதிப்பட்டார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கம் சென்று, வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோவிலை விட்டு வெளியே வந்ததும், மீண்டும் வலி வந்தது. எனவே, கோவிலிலேயே தங்கி விட்டார்.

அன்றிரவு, அவரது கனவில் தோன்றிய சிவன், 'பக்தனே... இந்தக் கோவிலை விட்டு வெளியே சென்றதும், உனக்கு மறுபடியும் வலி ஏற்படும்; எனவே, சேர்த்தலா சென்று, 'கேளம்' குளத்தில் மூழ்க வேண்டும். நீரின் அடியில், மூன்று விக்ரகம் கிடைக்கும்.

'முதல், விக்ரகம் சக்தி வாய்ந்ததால், அதை குளத்திலேயே போட்டு விடு. இரண்டாவது விக்ரகத்தை, அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவது விக்ரகத்தை, விதிப்படி பிரதிஷ்டை செய். அப்போது உன் நோய் அகலும்...' என்றார்.

அதன்படி இரண்டாவதாக கிடைத்த, தன்வந்திரி விக்ரகத்தை, ஒரு நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, மண்மூசு என்பவர் உதவியுடன் கோவில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார்.

குழந்தை பாக்கியத்துக்காக, 'சந்தான கோபாலன்' என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். 28 மூலிகைகளை தயிரில் கலந்து, முக்குடி எனும் மருந்து செய்வர். பூஜை செய்த மருந்து, தன்வந்திரி கையிலுள்ள தங்கக் குடத்தில் இருக்கும். நோய் தீர, இதைத் தருவர். சுவாமிக்கு சாத்தும் வெண்ணெயும், நோய் தீர தரப்படும்.

ரத்தத்தில், கிருமிகள் இருந்தால், அட்டைப்பூச்சி மூலம் உறிஞ்ச வைப்பது, அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில், தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன, அட்டைப்பூச்சி காணப்படுகிறது. இங்கு நடக்கும் உற்சவத்தின் போது, ஆஸ்துமா, வாதம் குணமடையவும், நினைத்தது நடக்கவும், 'கயற்றேல் வானம்' என்ற பூஜை செய்யப்படுகிறது.

அமாவாசை பிதுர் காரிய நிகழ்ச்சியின் போது, காட்டு சேப்பங் கிழங்கால் தயாரிக்கும், 'தாள்கறி' நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த கிழங்கை தொட்டாலே அரிக்கும். இதை, மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக்கி சாப்பிட்டால், நோய் தீரும். மருந்துகள், முன்பதிவு செய்தால் கிடைக்கும்.

எர்ணாகுளத்திலிருந்து, 40 கி.மீ., துாரத்தில் சேர்த்தலா உள்ளது. இங்கிருந்து, 2 கி.மீ., துாரத்தில் மருத்தோர் வட்டம் உள்ளது.

காலை, 5:00 - 10:30 மணி, மாலை, 5:00,- இரவு, 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 092491- 13355.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us