PUBLISHED ON : பிப் 21, 2021

உலகில், எவ்வளவு தான் உயர்ந்தவராக இருந்தாலும், அடுத்தவர் உதவி இல்லாமல் யாருமே வாழ முடியாது. நினைத்தது நிறைவேற வேண்டுமானால், கண்டிப்பாக, அடுத்தவர் உதவி தேவை.
தாணுமாலய முனிவர் என்பவர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். தவம் மற்றும் தியானம் செய்வதுமாக, முனிவர்களுக்கு உண்டான நியம, நிஷ்டைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
பேகன் எனும் வேடர் ஒருவருடன், துாய்மையான நட்பு கொண்டிருந்தார், தாணுமாலய முனிவர். அவரின் துாய்மையான அன்பும், இனிமையான வார்த்தைகளும், வேடரின் மனதைக் கவர்ந்தன.
முனிவரின் அன்பையும், இனிமையையும் அனுபவித்த வேடர், தானும், அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். காய், கனி, கிழங்கு ஆகியவைகளை எடுத்து வந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்தார்.
முனிவரும், வேடரும் நட்புடன் இருந்தது, அக்காட்டில் இருந்த மற்ற முனிவர்களுக்கு பிடிக்கவில்லை.
'என்ன அநியாயம் இது... இவரோ, தவம் செய்யும் முனிவர்; அவனோ, பறவைகளையும், விலங்குகளையும் கொல்லக்கூடியவன். அப்படிப்பட்டவனுடன், இந்த தாணுமாலய முனிவர் நட்பு கொள்ளலாமா... என்ன முனிவர் இவர்...' என்று, தங்களுக்குள் இகழ்வாக பேசிக் கொண்டனர்.
அவர்களின் இகழ்வான பேச்சு, தாணுமாலய முனிவரின் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை.
வேடரும், மற்ற முனிவர்களின் பேச்சைக் கேட்டு, தன் நிலை மாறவில்லை. வழக்கம்போல், தாணுமாலய முனிவருக்கு, காய், கனி, கிழங்குகளை கொணர்ந்து, சமர்ப்பணம் செய்து வந்தார்.
அவர்களை கேலியாக பேசிய மற்ற முனிவர்களோ, காய், கனி, கிழங்குகளுக்காக பல இடங்களிலும் சுற்றித் திரிய வேண்டி இருந்தது. அது, அம்முனிவர்களின் தியான, தவங்களுக்கு உண்டான நேரத்தை குறைக்கவும் செய்தது.
அந்த பிரச்னை இல்லாமல், நிம்மதியாக, தன் கவனத்தை தியானத்திலும், தவத்திலும் செலுத்தினார், தாணுமாலய முனிவர்.
அடுத்தவர்களின் உதவி இல்லாமல் யாரும் வாழ முடியாது என்பதையும், அன்பும், இனிமையும் நல்ல உதவியை தரும் என்பதையும் விளக்கும் கதை இது
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
விஷ்ணுவை வணங்கி, வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடன் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே, விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன், அங்கே உட்காரக் கூடாது.
