PUBLISHED ON : ஜூலை 25, 2021

'குள்ளச்சி... இவளால் என்ன செய்ய முடியும்...' என்று கிண்டல் செய்தவர்களுக்கு, சவால் விட்டு சாதனை படைத்துள்ளார், ஐஸ்வர்யா.
கும்பகோணத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளுடன், கேரளாவில் உள்ள பெரும்பாவூரில் குடியேறியது, ஐஸ்வர்யா குடும்பம். பெற்றோர் சண்டை போட்டு தனித்தனியாக பிரிந்தனர்; மகள்கள் அனாதைகளாயினர். வேலை செய்து கொண்டே, படித்து, பட்டம் பெற்று, 21 வயதில், சேலத்தில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தபோதும், சாதனை செய்ய வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டார்.
சில காலம் வட மாநிலத்தில் பணியாற்றியபோது தான், 'மோட்டார் கிராஸ் ரைடர்' ஆகும் எண்ணம் ஏற்பட்டது. கைவசம் இருந்த பணத்தில், சிறப்பு சைக்கிள், உடை மற்றும் ஷூ வாங்கி, சைக்கிள் ஓட்டத் துவங்கினார். இதை தன் முகநுாலில் பதிவிட்டார்.
இதைக் கண்ட பலர், பணம், சிறப்பு உடைகள், ஷூ என, அனுப்பி, ஆதரவு அளித்தனர்.
சைக்கிள் ஓட்டியபடி, வங்காள தேசத்திற்கு செல்ல ஆசைப்பட்டார். ஆனால், எல்லையில் அந்நாட்டு ராணுவம் தடுத்து, 'விசா இருக்கா...' என்றபோது, 'இல்லை...' என்றார்.
அங்கிருந்து கவலையுடன் திரும்பிய ஐஸ்வர்யாவை, ராணுவ கர்னல் அழைத்து, அவர் பொறுப்பில் வங்காள தேசத்தை சைக்கிளில் சுற்ற அனுமதித்தார்.
— ஜோல்னாபையன்
