தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலைவாணர் என்.எஸ்.கே., (17)

கலைவாணர் என்.எஸ்.கே., (17)

கலைவாணர் என்.எஸ்.கே., (17)


PUBLISHED ON : டிச 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலைவாணரின், 'அசோகா பிலிம்சின்' தயாரிப்புகளில் நடிக்கவும், பங்கு பெறவும், பலதுறை கலைஞர்கள் அவருக்கு தேவைப்பட்டனர். அதை அறிந்து, பலர் கோவையில் ஆர்வத்தோடு கூடினர். அப்படி, கலைவாணரின் கலைக்கூடத்தில் இடம் பெற்றோர் தாம், உடுமலை நாராயணகவி, புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன் மற்றும் கொட்டாப்புளி ஜெயராமன் ஆகியோர்.

ராமசாமிக்கு, புளிமூட்டை என்ற அடைமொழியை சூட்டியவர் கலைவாணர். அதற்கு முன், அவர் ராமசாமியாகத் தான் இருந்தார். அவரது உருவமும், அதற்கேற்ற கம்பீரமான சாரீரமும், கலைவாணரை கவர்ந்திருந்தன. அத்துடன், அவர் சமையல் செய்வதிலும், நிபுணராக இருந்தார். ராமசாமி பேசும் போது, அவருடைய அங்கங்கள் குழைவதையும், முகத்தில், நெளிவு சுழிவுகள் விழுவதையும் கவனித்த கலைவாணர், நடிகர் குழுவில், அவருக்கு இடம் அளித்தார்; சமையலை விட்டு, அவர் சங்கீதம் பாடப் போனார்!

கலைவாணர் தயாரித்த, அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் (எம்.ஜி.ஆர்., நடித்த படம் அல்ல) ராமசாமிக்கு, திருடன் வேடம். கதை அமைப்பின் படி, கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியை தேடுவார்; இக்காட்சியில் நடிக்கும் போது, ராமசாமியை தேடிய கலைவாணர், அருகில் இருந்தவனிடம், 'எங்கே அந்தப் புளிமூட்டை...' என்று வேடிக்கையாகக் கேட்பார்.

இதைக் கேட்டவுடன், சிரித்தபடியே, கட்டிலுக்கு அடியிலிருந்து, பருத்த மேனியை கஷ்டப்பட்டு, விடுவித்தபடி வெளியே வருவார், ராமசாமி. அப்படத்திலிருந்து தான் அவருக்கு, 'புளிமூட்டை' எனும் பெயர் வந்தது.

அதற்கு பின், புளிமூட்டை ராமசாமிக்கு, நிறைய படங்களில் வாய்ப்பளித்தார் கலைவாணர். 'கிந்தனார்' காலட்சேபத்தில், கலைவாணரோடு சேர்ந்து, பின்பாட்டுப் பாடி வந்தார். கலைவாணரிடம், புளிமூட்டைக்கு, கடைசி வரை குறையாத பக்தி இருந்தது.

புளிமூட்டை என்பதைப் போல, வேறு சில நடிகர்களுக்கும், பொருத்தமான பெயர்களைச் சூட்டியுள்ளார், கலைவாணர். நாடக வாத்தியாரும், பழம் பெரும் நடிகருமான, டி.பி.பொன்னுசாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுசாமி என்று பெயர் சூட்டியவர் கலைவாணர் தான்.

மனோன்மணி படத்தில், மதுரத்திற்கு தந்தையாக நடித்திருந்த பொன்னுசாமி, ஒரு காட்சியில், எருமை மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, தெருவில் இழுத்து வருவார். மாட்டுக்கு பின், பிச்சைக்காரன் வேடத்தில் வந்த கலைவாணர், மெல்ல மாட்டை அவிழ்த்து, தம் கழுத்தை, கயிற்றிலே பிணைத்துக் கொள்வார்.

திரும்பிப் பார்த்த பொன்னுசாமி, வியப்போடு நிற்பார். அப்போது, என்.எஸ்.கிருஷ்ணன்,

மாடாய் இருந்த நானே

மனுஷனாய் மாறிட்டேனே

மாயம் ஒண்ணுமில்லை யதார்த்தம்...

- என்று பாடுவார்.

இப்படத்தில் தான், பொன்னுச்சாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுச்சாமி என்று நாமகரணத்தை சூட்டினார், கலைவாணர். அத்துடன், தன் நாடகக் குழுவுக்கும், 'யதார்த்தம்' என்றே பெயர் வைத்தார்.

கலைவாணரின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆழ்வார் குப்புசாமிக்கும், 'ஆழ்வார்' என்று பெயரிட்டவர் கலைவாணரே!

ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த, கண்ணகி என்ற படத்தில், கிருஷ்ண பரமாத்மாவின் பக்தையாக நடித்திருப்பார் மதுரம். அவரின், வெறித்தனமான பக்தியை தணிக்கும் காட்சியில், கிருஷ்ண பரமாத்மா வேடத்தில் வருவார், என்.எஸ்.கிருஷ்ணன். அவரிடம், 'நீங்கள் ஏறி வரும் கருடாழ்வார் எங்கே...' என்று கேட்பார் மதுரம். அதே சமயத்தில், கருடாழ்வார் போல், இறக்கைகளை அசைத்து, பறவை கத்துவது போல், 'கீகீ' என்று கத்தியபடி வருவார், குப்புசாமி. உடனே, கிருஷ்ண வேடதாரியான கலைவாணர், குப்புசாமியைப் பார்த்து, 'ஏ ஆழ்வாரு...' என்று அழைக்க, அன்று முதல், அவர் ஆழ்வாரானார்.

கலைவாணரின் கருணையால், பல படங்களில் நடித்திருந்த ஆழ்வார் குப்புசாமி, கலைவாணரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்.

ஒருசமயம், மணமகள் படத்தில், தாம் எதிர்பார்த்த வேடம் தராமல், சிறிய வேடம் தரப்பட்டதற்காக, உரிமையோடு கலைவாணரிடம் கோபித்து, கிளம்பிச் சென்றார், குப்புசாமி. அருகில் இருந்தவர்கள், 'கலைவாணரிடம், ஆழ்வார் இப்படி பேசலாமா...' என்று மனம் வருந்தினர்.

ஆனால், கலைவாணரோ சிரித்து, 'நீங்க ஏன் வேதனை படுறீங்க... நம்ப ஆழ்வார் என்னிடம் கோபித்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் கோபித்துக் கொள்வான்...' என்றார். கலைவாணரின் பெருந்தன்மை, அவர்களை மெய் சிலிர்க்கச் செய்தது.

வருவாயை எதிர்பார்க்காமல், தம் அபிமான நடிகர்களுக்காக அடிக்கடி நாடகங்களிலும் நடித்து வந்தார் கலைவாணர். 'படப்பிடிப்பு இல்லாத நாட்களில், நாடகத்தின் மூலம் கிடைக்கும் ஊதியம் அவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே...' என்ற எண்ணத்தோடு தான், நாடகங்களை நடத்தி வந்தார்.

ஒருசமயம், மேலூரில் என்.எஸ்.கே., நாடக குழுவின் நாடகம் நடைபெறவிருந்தது. கலைவாணரின் நீண்ட நாள் நண்பரான சிங்காரம் பிள்ளை என்பவர் தான், அந்த ஊரில் நாடகம் நடத்த, ஏற்பாடு செய்திருந்தார். நாடகத்தில் நடிக்க கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவைச் சார்ந்த நடிக, நடிகையர் மேலூருக்குச் சென்றிருந்தனர்.

நாடகம் முடிந்து, சென்னைக்கு திரும்புவதற்காக, கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவினர் காரில் ஏற, பரபரப்பு அடைந்தார் மதுரம். காரணம், நாடகம் நடத்தியவர், சென்னையில் முன்பணம் தந்தது போக, மீதி பணத்தை கொடுக்காதது தான்.

'அவரிடம் சென்று பாக்கிப் பணத்தை யார் கேட்பது... அவ்விதம் கேட்பது கலைவாணருக்குப் பிடிக்காதே...' என்று நினைத்த மதுரத்திற்கு, தமக்கும், கலைவாணருக்கும் ஊதியம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. இதையே நம்பியிருக்கும் மற்ற நடிகர்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டுமே என்ற தவிப்புடன் இருந்தார், மதுரம்.

ஆனால், அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், வெள்ளி வெற்றிலைப் பெட்டி சகிதம், காரில் ஏறி உட்கார்ந்தார், கலைவாணர். அப்போது, இரண்டு ரோஜாப் பூ மாலைகளோடு, காரை நோக்கி ஓடி வந்தார் சிங்காரம்பிள்ளை.

கலைவாணருக்கும், மதுரத்திற்கும் மாலைகளை சூட்டியவர், பணத்தை மதுரத்திடம் நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்ட மதுரம், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவரிடமிருந்து விடைப்பெற்று, 10கி.மீ., தூரம் கடந்த பின், கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார் மதுரம். 700 ரூபாய்க்கு பதில், 500 ரூபாய் இருந்தது. அதனால், டிரைவரிடம், 'காரை, மேலூருக்கு திருப்பு; 'கான்ட்ராக்ட்' பேசிய தொகையிலிருந்து, 200 ரூபாய் குறைகிறது. அதை, அவரிடம் வசூல் செய்தாக வேண்டும்...' என்றார், மதுரம்.

பயணம் புறப்பட்டு விட்டால், இடையில், காரை நிறுத்துவது கலைவாணருக்கு பிடிக்காது. அதனால், டிரைவர் சிறிது தயங்கி, காரின் வேகத்தை குறைத்தாரே தவிர, நிறுத்தவில்லை.

மீண்டும் மதுரம், 'என்ன, நான் சொல்றது கேட்கலையா... காரை மேலூருக்கு திருப்பு; அவரிடம் பணத்தை வாங்காமல் விடக்கூடாது...' என்றார் கோபமாக!

அதுவரை கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த கலைவாணர், மதுரத்தின் குரல் கேட்டு, 'எதுக்கு மேலூருக்கு வண்டிய திருப்பச் சொல்றே...' என்று கேட்டார். கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து, சிங்காரம்பிள்ளை, 200 ரூபாய் குறைவாகப் கொடுத்திருப்பதாக சொன்னார், மதுரம்.

உடனே, 'பணத்தை அவர் குறைத்துக் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்... நீ, பணத்தை எண்ணும் போது, சில நோட்டுக்கள் காற்றில் பறந்து போயிருக்கலாமே...' என்றார் கலைவாணர்.

'என்னய்யா நீங்க... இந்த நேரத்தில், 'தமாஷ்' செய்கிறீர்... கையில மூடி வைத்திருக்கும் பணத்த, காற்று எப்படி அடிச்சுட்டுப் போகும்... உங்க சிநேகிதர் பணம் கொண்டு வர தாமதிக்கும் போதே, இப்படி தான் நடக்கும்ன்னு நினைச்சேன்...' என்று முணுமுணுப்போடு சொல்லி, 'காரை மேலூருக்குத் திருப்பச் சொல்லய்யா...' என்றார்.

'இந்தாம்மா, காரைத் திருப்பி பயனில்ல; அந்த மனிதர், கார் கிளம்புகிற நேரத்தில் ஓடி வந்து, அவசரமாக மாலைகளைப் போட்டு, அதே வேகத்தில பணத்தை உன் கையில் திணித்த போதே யூகிக்க வேணாமா... அவரிடம் பணப் பற்றாக்குறைன்னு! விட்டுத் தள்ளு... இப்ப, மேலூருக்கு போனால் மட்டும் அவர், மீதி பணத்தை கொடுத்துடவா போறார்... நம்மைக் கண்டவுடன் கைகளை பிசைந்து, முகத்தை சோகமாக வைத்து, ஏதாவது சொல்லப் போறார்... அதையெல்லாம் பாத்துட்டு திரும்பணும்ன்னு ஆசையா...' என்று, கான்ட்ராக்ட்காரரின் நிலைமையை புரிந்து, மதுரத்திடம் எடுத்துக் கூறியவர், அதுவரை மெதுவாக சென்று கொண்டிருந்த காரை, வேகமாகக் ஓட்டச் சொன்னார்.

தொடரும்.

நன்றி: வ.உ.சி., நூலகம்

பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us