PUBLISHED ON : அக் 31, 2010

* அழுகை...
* அது...
சொந்தக் காலில்லாத
சோம்பேறி மனிதர்கள்
கண்களால் ஆடும்
கோலி விளையாட்டு!
* அழகான முகத்தை
அலங்கோலப்படுத்த
அவர்களாகவே
அவர்கள் மேல் எறியும்
ஆசிட் வீச்சு!
* சோகம் காட்டி
சுகம் பெறலாமென்ற
சூட்சுமக்காரர் எண்ணங்களின்
சுய விளம்பரம்!
* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்
ஒப்பாரி வைக்கும்
உதவாக்கரை மனிதனே...
உன் நிலைக்காக
ஒருமுறையாவது
ஓலமிடுவாயா?
* ஏனென்றால்...
நீயே கூட ஒரு
நடை பிணம் தானே!
* பிணத்தின் மீது
விழுகிற துளிகளே...
ஒருவன் வாழ்ந்ததற்காக
கிடைக்கிற விருதுகள்!
* ஆகையால் தான்
மனிதனே...
அடுத்தவர் கண்கள்
அழுகிற நீரை
வாழ்கிற வரையில்
வழித்துத் துடைத்தெறி!
* கண்களிலிருந்து
கழன்று விழுகின்றனவே
அவைகள்
கண்ணீர்த் துளிகளா?
இல்லை —
* முறிந்து விழும்
முயற்சிகள்...
* கருகிச்சாயும்
கனவுகள்...
* வியர்வைத் துளிகளின்
விரோதிகள்!
* உழைத்து உழைத்து
வாழ்வில் உயர
இரு கை இருப்பதை
உணர்ந்துவிட்டால்
அழுகை ஏன்
அவசியப்படுகிறது நண்பனே?
— எல்.பிரைட், தேவகோட்டை.
