sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கெட்டிமேளம்!

கெட்டிமேளம்!

கெட்டிமேளம்!


PUBLISHED ON : ஏப் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுந்தரி இப்படி செய்வாள் என்று, கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் மனதில் பேரிடியாய் இறங்கியது, அந்த செய்தி.

'அப்பா, அம்மா... என் மனதுக்கு பிடித்த ஒருவருடன் ஊரை விட்டு செல்கிறேன். நாளை காலை, எங்கள் திருமணம். என்னை மன்னிக்கவும்...' - சுந்தரி.

கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு செல்வர். முதல் முறையாக, கைப்பேசியில், குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டை விட்டு சென்றாள், சுந்தரி. இரவு, 10:00 மணி இருளில், எங்கே போய் அவளை தேடுவது. தேடுவதற்கு அவள் என்ன இந்த ஊரிலேயா இருப்பாள். எந்த ரயிலில், எந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறாளோ...

சுந்தரியின் திருமணத்துக்கு, இன்னும், 30 நாள் கூட இல்லாத சமயத்திலா இப்படி செய்வாள். சக்திக்கு மீறிய இடம் வந்த போதிலும், வசதியான இடத்தில் அவள் வாழ வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம்.

'எதற்கு இவ்வளவு செலவு செய்து, பெரிய இடம் எனக்கு பார்க்கிறீர்கள் என்று, சொல்லிக் கொண்டிருந்தது, காதல் திருமணம் செய்து கொள்ளத்தானா! பாவி மகளே... எங்களை பெருந்தீயில் தள்ளி விட்டு சென்று விட்டாயே...' என, சுப்ரமணியனும், ஜானகியும். அழுது புலம்பினர்.

'திருமண பரிவர்த்தனை நிலையத்தில் பதிவு செய்திருந்த, சுந்தரியின் விபரங்களை பார்த்தோம். உங்கள் பெண் ஜாதகமும், புகைப்படமும் கிடைத்தது. எங்கள் மகன் சுரேஷுக்கு, சுந்தரியை மிகவும் பிடித்து விட்டது.

'திருமணம் செய்தால், அவளை தான் செய்து கொள்வேன் என்று ஒற்றை காலில் நிற்கிறான். ஜாதக பொருத்தம் பிரமாதம். உங்களுக்கு சம்மதம் என்றால், சம்பந்தம் பேசலாம் - ராமச்சந்திரன்' என்ற தகவல் கிடைத்தது, சுப்ரமணியனுக்கு.

பதிவு செய்த, 10 நாளிலேயே ஜாதகம் பொருந்திய கடிதத்தை கண்ட மகிழ்ச்சியில் துள்ளினாள், ஜானகி; சுப்ரமணியத்துக்கு, கால்கள் தரையிலேயே இல்லை.

இரண்டே நாளில் அவர்கள், சுந்தரியை பெண் பார்க்க வந்தனர். அவர்கள் சொன்னது போல், பெண் பார்க்கும் படலம் வெறும் சம்பிரதாயமாக நடந்தது. சுந்தரியின் அழகில் சொக்கி தான் போனான், சுரேஷ்.

சுப்ரமணியத்துக்கும், ஜானகிக்கும் சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

சுரேஷின் அம்மா பேச ஆரம்பித்த போது தான், அந்த சந்தோஷம் அடங்கியது.

'எங்களுக்கு ஒரே பையன், சுரேஷ். எங்க சொத்துக்கு, ஒரே வாரிசு. நாங்க உங்களை விட பெரிய இடம்ன்னு உங்க வீட்டுக்கு வந்த உடனே தெரிஞ்சு போச்சு... சுரேஷ் ஆசைப்பட்டுட்டாங்கற ஒரே காரணத்துக்காக மட்டும் இல்லாம, எங்களுக்கும் சுந்தரியை ரொம்ப பிடிச்சு போச்சு...

'ஆனா, ஒண்ணு... எங்க அந்தஸ்துக்கு சமமா கல்யாணம் தடபுடலா நடக்கணும்... மண்டபமே கிராண்டா இருக்கணும்... சீர் வரிசையிலும் எந்த குறையும் இருக்கக் கூடாது...' என்றாள்.

சுப்ரமணியனும், ஜானகியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.

'உங்க சக்திக்கு மீறினதுன்னு தெரிஞ்சா சொல்லிடுங்க இப்பவே... எந்த காரணத்துக்காகவும், சுரேஷ் கல்யாணத்தை சிம்பிளா பண்ண விரும்பலை... முடியலைன்னா சொல்லிடுங்க...' என்று, கைக்கடிகாரத்தை பார்க்க துவங்கினாள், அவனது அம்மா.

இருவருக்கும், நல்ல இடத்தை விட மனசில்லை.

'யோசித்து நல்ல முடிவா சொல்கிறோம்...' என்றனர்.

'அப்பா... இந்த மாதிரி பெரிய இடம் எனக்கு வேணுமாப்பா... நம் சக்திக்கு மீறிய இடம். எனக்கு அப்புறம் இரண்டு பேர் இருக்காங்க... எனக்கே இவ்வளவு பணமும் செலவு செஞ்சீங்கன்னா, அவங்களுக்கு என்னப்பா பண்ணுவீங்க...

'அதுவும் இல்லாம, அவ்வளவு பணத்துக்கு, எங்கப்பா போவீங்க... லட்சக்கணக்குல ஆகுமேப்பா... எனக்கு இப்ப, 22 வயசு ஆகுது... இன்னும் ரெண்டு, மூணு வருஷம் வேலைக்கு போயி, பணம் சேர்த்தப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேனேப்பா...'

'கஷ்டம் தான் சுந்தரி... ஆனா, இந்த மாதிரியான இடம் உனக்கு, முதல் வரன்லேயே அமைஞ்சது, ஆண்டவன் செயல். கஷ்டம்ங்கிறது வாழ்க்கையோடு பிண்ணி பிணைஞ்சது... மனுஷனா பிறந்தாலே கஷ்டம் தானே... இதுக்கெல்லாம் பயந்தா வாழவே முடியாது.

'உன்னை பெத்த எங்களுக்கு, ஒரு நல்ல இடத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற கடமை இருக்கு... உனக்கு தெரியாது, நீ வாயை மூடு...' என்றார்.

'சத்திர வாடகையே, ரெண்டு லட்சம் கிட்ட... சாப்பாடு செலவு நாலு லட்சம்... அவங்க கேட்கற நகை செலவு ஆறேழு லட்சம்... அதை தவிர, பாத்திரம் பண்டம்... அப்புறம் சொந்தகாரங்களுக்கு துணி மணி... பையன் வீட்டுக்காரங்களுக்கு துணி... கணக்கு பண்ணி பார்த்தா, கிட்டத்தட்ட, 15 - 16 லட்சத்துக்கு மேல போகும்போல இருக்கேம்மா...

'அத்தனை பணத்துக்கு எங்கே போவீங்க... தேவையாப்பா இந்த இடம்? ரொம்பவே அகல கால் வைக்கிறீங்க ரெண்டு பேரும்... நினைச்சாலே குலை நடுங்குது எனக்கு...' என்ற சுந்தரியின் கண்களில், மிரட்சி தெரிந்தது.

மீண்டும் கணக்கு வழக்குகளில் மூழ்கினர், சுப்ரமணியமும், ஜானகியும்.ஒருநாள், சுரேஷின் பெற்றோர் வர, வாய் மலர வரவேற்றனர்.

'கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்துட்டு இருக்கா... எவ்வளவு துாரம் இருக்கு...' என, அவனது அம்மா கேட்க, 'அதில் தான் மும்முரமா இருக்கோம்... அப்புறம் சொல்லுங்க...' என்றாள், ஜானகி.

'ஒண்ணுமில்லை... சுரேஷ், என்ன நினைக்கிறான்னா, ஹனிமூனுக்கு, சுவீட்சர்லாந்து போக வர, விமான டிக்கெட்... அங்க, ஓட்டல் புக்கிங்... நீங்க கொடுத்தா, மதிப்பா இருக்கும்னு சொல்றான்...' எனக் கூறி, இவர்கள் மவுனத்தையே சம்மதமாக எடுத்து கிளம்பியது, நினைவுக்கு வந்தது.

மறுநாள் காலை, 5:00 மணியளவில், அழைப்பு மணி ஓசை கேட்டு, கதவை திறந்தார், சுப்ரமணியம்.

'பளார் பளார் பளார்...' சுந்தரியின் கன்னங்களில் அவர் கைகள் பதிந்து, கோவை பழம் போல சிவந்தன.

சத்தம் கேட்டு வந்த, ஜானகி திடுக்கிட்டாள்.

''எங்கே இருந்தே ராத்திரி முழுக்க... வீட்டை விட்டு ஓடிப் போறேன்னு, 'மெசேஜ்' அனுப்பிட்டு, ராத்திரி எங்கேடி போனே... நாங்க பதறிப் போயிட்டோம்... என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல... எப்பாடு பட்டாவது, உன் கல்யாணத்தை நடத்திடணும்ன்னு, நாங்க ரெண்டு பேரும் அரும்பாடுபட்டு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிற வேளையில, என்ன திமிர் இருந்தா, நீ இப்படியெல்லாம் பண்ணுவே,'' என்றார்.

''பதட்டப் படாதீங்கப்பா... என் தோழி வீட்டுல தான் இருந்தேன்.''

''எதுக்கு... என்ன திமிர் இருந்தா,'' சுப்ரமணியன், மீண்டும் கைகளை ஓங்க, தடுத்தாள், ஜானகி.

''போதுங்க... அடிக்க வேண்டாம்... ஏண்டி இப்படி பண்ணினே சொல்லு,'' சீறினாள்.

''கொழுப்பெடுத்து நான் இப்படி பண்ணலை... எனக்கு ஒரு காபி கொடும்மா,'' எனக் கேட்க...

எல்லாருக்கும் காபி எடுத்து வந்தாள், ஜானகி.

''சொல்லுடி... ராத்திரி முழுக்க துடிச்சு போயிட்டோம்... எங்கே போனே,'' பதறினாள்.

''ஒண்ணும் ஆகலைம்மா... என் தோழி ராதிகா வீட்டுல தான் இருந்தேன்...''

''ஏன் அவ வீட்டுல இருந்தே?''

''உங்களை பயமுறுத்த தான்... நான் வீட்டை விட்டு போவதாக அனுப்பிய, 'மெசேஜ்' பார்த்ததும், ராத்திரி உங்க மனசுல என்ன எண்ணம் எல்லாம் வந்ததுன்னு சொல்லுங்களேன்.''

''எதுக்கு... பண்றதை பண்ணிட்டு, என்ன ஆராய்ச்சி பண்றியா?''

''ரெண்டு பேரும் சொல்லுங்க,'' என்றாள்.

''தவிச்சு போயிட்டோம்... உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு கவலை... அப்புறம் நம்ம குடும்ப கவுரவம்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட என்ன சொல்றது... அவங்க முன்னாடி தலை குனிஞ்சு நிற்கணும்.''

''அப்புறம்?''

''என்ன கதையா கேட்டுக்கிட்டு இருக்கே... செய்யிறதையும் செஞ்சுட்டு... இனிமே இது மாதிரி செஞ்சே, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்,'' கர்ஜித்த அப்பாவை பார்த்தாள், சுந்தரி.

''கோபப்படாதேப்பா... வேற ஏதாவது நினைச்சியான்னு, எனக்காக யோசிச்சு சொல்லேன்... ப்ளீஸ்... நான், உன் செல்ல பெண் இல்லே,'' குழைந்தாள்.

''ஒரு நினைப்பு வர தான் செஞ்சது... நீ, 'மெசேஜ்'ல சொல்லியிருந்தா மாதிரியே ஒருத்தனோட ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டு இருந்தேன்னா... உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ற, இந்த மெகா பிரச்னையிலிருந்து விடுதலைன்னு, ஒரு சின்ன நிம்மதி பெருமூச்சு வந்தது!''

''அப்படி வா வழிக்கு... நிம்மதி பெருமூச்சு வந்ததுன்னு சொன்னியே, அது வெறும் கனவா இல்லாம, நனவா ஆயிட்டா... நான் என்ன எதிர்பார்த்து, நேற்று ராத்திரி உங்களுக்கு ஒரு, 'ஷாக்' கொடுத்தேனோ, அது மாதிரியே நடந்துடுச்சு...

''அப்பா, அம்மா தலையில பெரிய கடன் சுமையை ஏத்திட்டு, ஒரு பணக்கார குடும்பத்துக்கு மருமகளா போக எந்த பொண்ணுக்குப்பா மனசு வரும். உங்களை தவிக்க விட்டு, நான் மட்டும் சந்தோஷமா வாழ முடியும்ன்னு எப்படி நினைக்கறீங்க...

''நான் சந்தோஷமா வாழணும்ன்னு நீங்க நினைக்கிற மாதிரி, நீங்க சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்க மாட்டேனா... ப்ளீஸ்பா... இந்த இடம் வேண்டாம்பா... தாங்காது... ப்ளீஸ்!''

''சரிம்மா... நீ சொல்றதும் சரி தான். ஆனா, இப்ப என்ன செய்ய முடியும்... கல்யாண ஏற்பாடு நடந்துட்டு இருக்கு... நம்ம கவுரவம்... இந்த கல்யாணத்துக்கு நாங்க ஒத்துண்டதுதானே,'' என்றார்.

''கவுரவத்தை காப்பாத்தறேன்னு நீங்க காலம் முழுக்க கஷ்டப்பட நான் அனுமதிக்க மாட்டேன்... இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்... அப்படியே பண்ணனும்ன்னு நீங்க நினைச்சா, என் ஆபீஸ்ல இருக்கற கோபால்ங்கறவரோட தங்கை பையன், வங்கியில, 'கிளார்க்'கா இருக்காராம். உங்களுக்கு சம்மதம்னா, சம்பந்தம் பேசி முடிச்சிடலாம்ன்னு சொன்னார்.

''சின்ன வயசுலேர்ந்து கஷ்டப்பட்டு படிச்சு, குடும்பத்தை முன்னேத்தி வந்ததுனால, சிம்பிளா கல்யாணத்தை பண்ணிட்டு வாழ தான் ஆசையாம்... வரதட்சணை, சீர்வரிசை எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாராம்... அவங்க அம்மாவும் ரொம்ப நல்லவங்களாம்பா... யோசிக்காதீங்கப்பா... உங்களை ஏழை ஆக்கிட்டு, நான் பணக்காரியா ஆக விரும்பலைப்பா... ப்ளீஸ்!''

அழ ஆரம்பித்த மகளை அணைத்து, கண் கலங்கினார், சுப்ரமணியம்.

''உன் மனசை புரிஞ்சுக்காம, தப்பு பண்ண இருந்தேன்... என்னை மன்னிச்சுடும்மா... உன் மனசு போலவே செய்யறேம்மா... நீ என்ன சொல்றே, ஜானகி!''

''அப்பாவும், பொண்ணும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க... இனிமே நான் என்ன சொல்றது... எனக்கும் சரின்னு தான் தோணறது... நம்ம பொண்ணு மனசை ஏன் நோகடிக்கணும்... சுந்தரி சொல்ற மாதிரி லட்சக்கணக்கில் கடன் தான் ஆகும்... வேண்டாம்... வேண்டாம்,'' என்று சொல்லி, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

வெ.ராஜாராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us