PUBLISHED ON : மார் 13, 2022

'இன்று மாலை, பெரிய மழை வரும்ன்னு, எச்சரிக்கை விட்டிருக்காங்க. எப்போதும் போல, வேலை வேலைன்னு உன்னை மறந்து உட்கார வேண்டாம், வெளிச்சத்தோடு கிளம்புங்கள்...' என்று அழுத்திச் சொல்லியிருந்தாள், சாரு.
'இந்த நாகர்கோயில் கோப்பை மட்டும் முடித்து விட்டால் போதும், பெரிய தலைவலி குறைந்து விடும்...' என்று பெருமூச்சு விட்டான், சேது.
வெளியே வானம் உறுமும் சத்தம் கேட்டது. அலுவலக ஊழியர் அனைவரும் சென்று விட்டனர். கடைசியாக செக்யூரிட்டி செல்வராஜ் கூட, ''சார்... இன்னிக்கு பேத்திக்கு பிறந்த நாள். நான் தான், 'கேக்' வாங்கிட்டு போகணும்; 10 நிமிடம் முன், கிளம்புறேன் சார்...'' என்று சென்று விட்டார்.
கிளம்பும் போது டெலிபோன் ஒலிக்க, ''ஹலோ... சுவாதி கன்சல்ட்டன்சி ஹியர்,'' என்றபடியே மணியைப் பார்த்தான்.
''அகர்வால் பேசுகிறேன், தலைமை அலுவலக, 'செக் ஷன் ஹெட்' சேது இருக்கிறாரா?'' என்று தெளிவான ஆங்கிலத்தில் அகர்வாலின் குரல் கேட்டது.
அவனும் கூடுதல் இனிமையுடன், ''சேது தான் சார் பேசுகிறேன். வணக்கம் அகர்வால் சார்... நலமா?'' என்றான்.
அகர்வால் பெரிய பதவியில் இருப்பவர். ஆனால், பணிவு, மரியாதை, கனிவு என்ற நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர்.
''வணக்கம் சேது... நேரம் அதிகமில்லை; உடனே விஷயத்தைச் சொல்லிடுறேன். உங்களுக்கு, 'சீனியர் செக் ஷன் ஹெட்' பதவி உயர்வு; 'போஸ்டிங்' அகமதாபாத். கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிக சம்பளம். இது, 'அட்வான்ஸ்' தகவல். இன்னும் ஐந்து நிமிடத்தில், 'மெயில்' வந்துடும். மகிழ்ச்சி தானே?''
''என்ன சார் சொல்கிறீர்கள்?'' என்றான்.
வியர்த்தது. சடாரென்று வேறொரு உலகத்திற்கு வந்து விட்டதைப் போலிருந்தது.
''ஆமாம் மிஸ்டர் சேது... கம்பெனி எப்போதும், நல்ல ஊழியர்களுக்கு பரிசுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் மிக நல்ல பணியாள்.
எம்.டி., உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வார். அதனால் தான் இந்த பதவி உயர்வு.''
''நன்றி சார்... ஆனால், மனைவி, அம்மா, யு.கே.ஜி., படிக்கிற குழந்தை என்று அனைவரையும் விட்டுட்டு அவ்வளவு துாரம் எப்படி சார்... நினைத்தே பார்க்க முடியவில்லை.''
''என்ன சொல்கிறீர்கள், சேது... இந்தியாவிற்குள் தானே... பாஸ்போர்ட், விசா பிரச்னைகள் இருக்கிறதா என்ன?'' என்று சிரித்தார், அகர்வால்.
''அதில்லை சார்... சேலம் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு கிராமத்துப் பையனான நான், சென்னை வந்து பாடுபட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். இப்போது தான், 'அபார்ட்மென்ட்' வீட்டை வாங்க பார்த்து வைத்திருக்கிறாள், என் மனைவி.
''அம்மாவுக்கு மூச்சுப் பிரச்னைக்கு சென்னை ஆஸ்பிடல்கள் தான் ஓரளவு ஆறுதல். இந்த நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் செல்வது, மிகவும் கஷ்டம் சார்,'' எனும்போது, அவன் அழுது விடுவதைப் போலிருந்தான்.
சிரித்தார், அகர்வால்.
''என்ன மிஸ்டர் சேது... நாட்டு நிலைமை, உலக நிலைமை எல்லாம் தெரிந்து தான் பேசுகிறீர்களா... 5,000 ரூபாய் சம்பளத்திற்காக, பொறியியல் படித்த பட்டதாரிகள், துாய்மைப் பணியாளராக பணிபுரிகின்றனர்.
''எந்தப் பணியும் குறைந்ததல்ல. ஆனால், நாட்டில் வேலைப் பஞ்சம் பயங்கரமாக இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
''இன்னும், 10 நாட்களில் கிளம்பத் தயாராக இருங்கள், சேது. புதிய அழகிய வாழ்க்கைக்கு என் வாழ்த்துகள்,'' என சொல்லி, போனை வைத்து விட்டார், அகர்வால்.
சென்னையை அடித்து துவைத்து விட்டு, இரவு, 8:00 மணிக்கு தான் மழை நின்றது.
டிபன் தட்டுடன் வந்த சாரு, ''இன்னிக்கு குதிரைவாலி கிச்சடி, தொட்டுக்க தக்காளி தொக்கும், அரிசி அப்பளமும். அம்மா சொன்ன தொக்கு... மிக அற்புதம்,'' என்று, சிரித்தாள்.
''ம்ம்... இதெல்லாம் எத்தனை நாளோ,'' என்றான்.
''சேது... என்ன சொன்னீங்க, சரியா புரியலே.''
''இல்லே சாரு... இப்போ வேண்டாம், நாளைக்கு சொல்றேன். சரி, இன்னிக்கு நாள் எப்படி போச்சு?'' என்றான்.
''கொஞ்சம் கடினம் தான் சேது,'' என்று அவள் பெருமூச்சு விட்டாள்.
''ஏன், என்ன ஆச்சு?''
''நம் மகன் பிருத்வியோட, யு.கே.ஜி., 'போர்ஷன்ஸ் மெயில்'ல வந்துது, படு பயங்கரமா இருக்கு. போன வருஷம்,
எல்.கே.ஜி.,ல, ஹிந்திக்கு ஒரு புத்தகம் தான்; இந்த வருஷம், நாலு புத்தகம். 'கிராப்ட்ஸ், மாரல்ஸ், மாத்ஸ், சோஷியல்'ன்னு எல்லாமே இரண்டு மடங்கு.
''இப்போ எடுத்த உடனே, 1 முதல் 100 வரை, 'ஸ்பெல்லிங்'குடன் சொல்லித் தரணுமாம். அப்படியே, 'ட்ரிபிள் ஜம்ப்!' ரொம்ப கவலையா இருக்கு, சேது. இவன் வேற வாலு, எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலே. சரி, ஆபிஸ்ல என்ன பிரச்னை... நெறைய பேர் லீவா?''
''அதெல்லாம் இல்லே சாரு... நாளைக்குப் பேசலாம், இப்போ படுக்கிறேன்.''
''ஓ.கே., சேது... கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகும். சரி... குட் நைட்,'' என்று, அவள் மென்மையான முத்தமொன்றை அவன் நெற்றியில் இட்டு விட்டுப் போனாள்.
பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டான். புரண்டு கொண்டே இருந்தான்.
அலுவலகத்திலும் யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியவில்லை. ஏதோ விட்டேற்றியாக கழிந்தது, சேதுவுக்கு.
மழைக்காலத்தில் இணையை இழந்துவிட்ட குயிலைப் போல, ஏக்கமும், தாபமும் மனதுக்குள் கம்பளி போல இறுக்கியது.
''இன்னிக்கு டிபன், உப்புமா, ஆந்திரா சட்டினி. சிம்ப்ளி சூப்பர்... தவிர, அவல் லட்டு. சூப்பர் டின்னர்,'' என்று அருகில் உட்கார்ந்து இனிப்பை ஊட்டினாள், சாரு.
''அப்படியா?''
''ஸ்வீட் ஏன் பண்ணினேன் தெரியுமா?''
''ஏன்?''
''நேத்திக்கு இருந்த கவலை மறைஞ்சதுக்கு. அப்பாடான்னு மனசு சமாதானம் ஆனதுக்கு.
இது இப்படித்தான்னு உள் மனசு ஏத்துகிட்டதுக்கு,'' என்று புன்னகைத்தாள்.
''புரியலே.''
''பிருத்வி விஷயத்துல ஏகப்பட்ட பாடங்கள், எக்கச்சக்க புத்தகங்கள்ன்னு கவலைப்பட்டேன் இல்லையா?''
''ஆமாம்.''
''இன்னிக்கு, மிருதுளா போன் பண்ணா... அவள் பையன் ராபின், இந்த வருஷம் எல்.கே.ஜி., வந்திருக்கான். 'போர்ஷன்ஸ்' பார்த்து பயந்து போய் என்னைக் கூப்பிட்டு, 'அய்யோ சாரு, ப்ரீ கேஜில ஒண்ணுமே இல்லையே... வெறும், 'ஸ்டோரி டெல்லிங்'தானே இருந்தது... இதென்ன இவ்வளவு பாடம். எப்படி நாலு வயசு குழந்தை இவ்வளவு படிக்கும்'ன்னு ஒரே புலம்பல்.
''நான் தான், 'கவலைப்படாதே, குழந்தைகள் நாம நினைக்கிறதை விட புத்திசாலிகள், பிரமாதமா கத்துப்பாங்க'ன்னு சொல்லி சமாதானப் படுத்தினேன். அப்படியே என் மனசும் சரியாகிட்டது,
சேது. இது இயல்புதான்.
''ஒவ்வொரு வருஷமும் புது, 'போர்ஷன்' வரும்போது மலைப்பாகத்தான் இருக்கும்... போகப் போக சரியாகிடும்ன்னு புரிஞ்சது. நமக்கும் சின்ன வயசுல அப்படித்தானே இருந்தது. சமையல், தோட்டம், 'லேப் டாப், சாப்ட்வேர்' மற்றும் சுற்றுலான்னு மெல்ல மெல்ல ஏறிப் போகிறதுதானே வாழ்க்கையின் அழகு... சரியா சேது?''
திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
மொபைல் போன் அழைத்தது.
''சேது ஹியர்... யாரு?'' என்றான்.
''சார்... என் பெயர் அண்ணாமலை. மதுரை பக்கம், கல்லுப்பட்டி தாண்டி கிராமம். இப்போ, நம் மதுரை கிளை அலுவலகத்தில் வேலை பண்றேன்.''
''ஓ... அண்ணாமலை நினைவிருக்கு, ஒருமுறை, 'ஒர்க் ஷாப்' விஷயமா சென்னை வந்து என்னை சந்திச்சீங்க... சொல்லுங்க, அண்ணாமலை.''
''நீங்க பதவி உயர்வுல, குஜராத் போகப் போறீங்களாமே... உங்க இடத்துக்கு என்னை, 'பிரமோட்' பண்ணி, 'போஸ்ட்' பண்ணப் போறாங்களாம்... பயமா இருக்கு சார்.''
''வாவ்... மகிழ்ச்சி, வாழ்த்துகள்.''
''இல்ல சார்... நான் கிணத்துத் தவளை, மதுரையில பிறந்து வாழற தவளை... என்னைத் துாக்கி வங்காள விரிகுடா கடல்ல போட்டா, எப்படி சார் வாழ முடியும். ரொம்ப பயமா இருக்கு. சென்னை எல்லாம் எனக்கு லண்டன் மாதிரி, நிச்சயமா என்னால குப்பை கொட்ட முடியாது. ஏதோ உங்ககிட்ட பேசணும்ன்னு தோணுச்சு... சாரி சார்!''
''அண்ணாமலை... ஒரு நிமிஷம்,'' என்றான்.
மனதிற்குள் பழைய சேதுவின் நாட்கள் மின்னல் போல ஓடின.
கனிவுடன், ''நானும் அப்படித்தான் தம்பி இருந்தேன். 10 வருஷம் முன், சென்னை வந்த கிராமத்தான். மெல்ல மெல்ல சென்னை என்னை அரவணைச்சது. இப்போ, எப்படி குஜராத் போவதுன்னு அழுகிற அளவுக்கு சென்னை என்னை கட்டிப் போட்டிருக்கு.
''என் அனுபவத்தில் சொல்கிறேன், தம்பி. எல்லா ஊரும் நல்ல ஊர் தான். பார்க்கும் பார்வையில் தான் அனைத்துமே. புது சவால்கள், புது மனிதர்கள், புது உணவு, புது இருப்பிடம் இதெல்லாம் தான் வாழ்வின் சுவாரஸ்யங்கள்...
''எல்லா ஊரிலும் பூக்கள் இருப்பது, எல்லா ஊரிலும் மழை இருப்பது, எல்லா ஊரிலும் பறவைகள் இருப்பது உண்மை தானே தம்பி... கொஞ்சமும் கவலைப்படாதே... தைரியமாகக் கிளம்பி வா, அருமையான புது உலகம் உனக்காகக் காத்திருக்கிறது. நம்பி வா,'' என்றான்.
எதிர்முனை ஒரு வினாடி விட்டு உற்சாகமாக, ''இது போதும்ண்ணே... ஏதோ கதவு திறந்த மாதிரி இருக்குண்ணே... எவ்வளவு நம்பிக்கை ஊட்டியிருக்கீங்க... நன்றி, கிளம்பி வரேண்ணே.''
''உனக்கு மட்டும் இல்லை அண்ணாமலை... எனக்கும் புது
நம்பிக்கை வந்திருக்கிறது,'' என்று சிரித்தான், சேது.
வி.உஷா
