PUBLISHED ON : ஆக 22, 2021

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின், பென்சக்கலோ நகரில் உள்ள, 'மெக்பூர் ஐரீஸ் பப்' என்ற உணவகத்துக்கு புதிதாக செல்லும் வாடிக்கையாளர்கள், அங்கு செய்யப்பட்டுள்ள வித்தியாசமான உள் அலங்காரத்தைப் பார்த்து, ஆச்சரியப் படுகின்றனர்.
அந்த உணவகத்தின் மேற்பகுதி மற்றும் நான்கு பக்க சுவர்கள் முழுதும், அமெரிக்க டாலர்கள் தொங்க விடப்பட்டுள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்களின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய மதிப்புக்கு, 14 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர் நோட்டுகள், அந்த உணவகத்தில் தொங்குகின்றன.
உணவகத்துக்கு வந்த முதல் வாடிக்கையாளர் கொடுத்த டாலரை, அவரது கையெழுத்துடன், அதிர்ஷ்டத்துக்காக உரிமையாளர், ஓட்டலின் மேற்பகுதியில் ஒட்டி வைத்தார்.
அதற்கு பின் வந்த வாடிக்கையாளர்கள் பலரும், தங்கள் கையெழுத்திட்ட டாலர் நோட்டை கொடுத்து, அதை ஒட்டி வைக்கும்படி கூறவே, அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை, இந்த டாலர் நோட்டுகளை எடுத்து எண்ணி, அதற்கு முறையாக வரியும் செலுத்துகின்றனர், உணவக உரிமையாளர்கள்.
— ஜோல்னாபையன்
