
மனிதர்களின் வாழ்க்கையே அவரவர்களின் கர்ம பலன்களுக்கேற்ப அமைகிறது. கர்ம பலன் என்பது பாவ, புண்ணியங்களுக்கு கிடைக்கும் பலன். இந்த கர்ம பலனை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமி கர்மா என்று மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். பூர்வ ஜென்மங்களில் செய்துள்ள கர்மாவின் பலன்களை சஞ்சித கர்மா என்றனர்.
சஞ்சித என்றால், ஒரு பை அல்லது ஒரு மூட்டை. இந்த சஞ்சித கர்மா ஒரு மூட்டையாக உள்ளது. இதன் பலனை ஒரே பிறவியில் அனுபவிப்பதில்லை; ஒவ்வொரு பிறவியிலும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க வேண்டி உள்ளது. இந்த பிறவியில் இந்த சஞ்சித கர்மாவில் இருந்து ஓரளவு பலனைப் பெற வேண்டும். இந்த ஒரு பகுதியை, பிராரப்த கர்மா என்கின்றனர்.
'என்ன சார்... உங்க பையன் மேலே ஏதோ போலீஸ் கேசு அப்படி, இப்படின்னு சொன்னாங்களே?' என்று ஒருவரைக் கேட்டால், 'அதை ஏன் சார் கேட்கறீங்க... ஏதோ பிராரப்த கர்மம், பிள்ளையா வந்திருக்கு...' என்று சொல்லி தலையில் அடித்துக் கொள்கிறார் அவர். இது தான், சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியான பிராரப்த கர்மா.
இதையும் தவிர, இவன் இந்த ஜென்மத்தில் சும்மா இருக்கிறானா? எதை, எதையோ செய்கிறான். அந்த சஞ்சித கர்மா மூட்டையிலுள்ள பலன்களில் ஒரு பகுதியை இப்போது அனுபவிக்க வேண்டும். இந்த மூட்டையிலுள்ள கர்ம பலன், பல ஜென்மாக்களில் அனுபவிக்க வேண்டியது.
இப்படி சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமிக கர்மா என்ற மூன்று வித கர்ம பலன்களையும் தன் வாழ்நாளில் மனிதன் அனுபவிக்க வேண்டி உள்ளது. இவற்றில் இது வேண்டும், இது வேண்டாம் என்று சொல்ல அதிகாரமில்லை. புண்ணிய கர்மாவின் பலனாக இருந்தால் சுகத்தை அனுபவிக்கலாம்; பாவ கர்மாவின் பலனாக இருந்தால், கஷ்டம், துக்கம் எல்லாவற்றையும் அனுபவித்தே தீர வேண்டும். இதில், யாருக்கும் விதிவிலக்கு கிடையாது; யாரிடமிருந்தும் சிபாரிசு கடிதம் பெற முடியாது. அதனால்தான், 'பாவ கர்மாக்களை செய்யாதே; புண்ணிய கர்மாக்களை செய்...' என்றனர்.
நோயாளிக்கு, வைத்தியர் அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடாதே என்று சொல்கிறார். ஆனால், நப்பாசை காரணமாக, எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்றாரோ, அதை எல்லாம் சாப்பிட்டு விடுகிறான். பலன்? கொஞ்சம் குணமாகியிருந்த வியாதி மீண்டும் வருகிறது; அனுபவிக்கிறான்.
இது போல, அவனவன் செய்யும் நல்ல கர்மா (சத்கர்மா) அவனவன் புத்தியைப் பொறுத்தது. புத்தி நேராக இருந்தால், நல்ல காரியங்களை செய்து, சாதுசங்கத்தில் சேர்ந்து, ஞானம் வரப்பெற்று, ஜென்மா கடைத்தேற வழி செய்து கொள்வான். தீய கர்மாக்களில் ஈடுபட்டால், அதற்கு தகுந்த தீயவர்களோடு சேர்ந்து முடிவில் துக்கப்படுவான்.
அது மட்டுமல்ல, செய்துள்ள பாவங்களுக்குத் தகுந்தபடி, மனிதனல்லாத மற்ற விலங்குகளாகவோ, செடி, கொடி, மரமாகவோ, புல், பூண்டுகளாகவோ, புழு, பூச்சிகளாகவோ பிறந்து அவதிப்பட நேரிடும்.
அதனால், மனிதன் மேல் படிக்கு போக முயற்சிக்க வேண்டுமேயல்லாது, மீண்டும் கீழ் படிக்கு போகலாமா... மேலே போக வேண்டும். குமாஸ்தாவிலிருந்து மேனேஜர் பதவிக்கு போக வேண்டுமா அல்லது மேனேஜர் பதவியிலிருந்து குமாஸ்தா பதவிக்கு தள்ளப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டும்.
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
*பாவ புண்ணியங்களுக்கேற்ப, பிறவியில் இன்பத்தையும், துன்பத்தையும் கடவுள் கொடுக்கிறார் என்கிறது நம் இந்து மதம். அப்படியெனில், துன்பம் அடைகிற ஒருவனுக்கு நாம் உதவி செய்வது, கடவுளின் செயலுக்கு விரோதமாகச் செய்தது போலாகுமே... விளக்கம் தருக.
அவன் துன்பம் அடையும்போதே, அவனுக்கு உதவியும் கிடைக்கும் என்று இறைவன் எழுதியிருப்பான். ஆகவே, உதவுவதை நிறுத்தாதீர்கள். அதுவும் விதியில் ஒரு பிரிவு!
***
வைரம் ராஜகோபால்

