PUBLISHED ON : ஏப் 15, 2012

மனதை சந்தோஷமாகவும், எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளும் யாரும், நூறு வயதையும் தாண்டி வாழலாம் என்கிறார், இந்தியாவில் முதன் முதலாக, 'மிஸ்டர் யூனிவர்ஸ்' பட்டம் பெற்றவரும், நூறு வயதை தொட்டவருமான மனோகர், கோல்கட்டாவைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். மற்றவர்களின் சராசரி உயரத்தை விட, சற்றுக் குறைவு என்பதால், (150 செ.மீ.,) தன்னை எல்லாரும் கேலியுடன் பார்ப்பதை அறிந்து, எப்படியும், எதிலாவது சாதித்து, 'உயர்ந்து' காட்ட வேண்டும் என்று விரும்பினார்.
பளு தூக்கும் போட்டிக்காக, உடலை வலுவாக்க ஆரம்பித்தவர், கடைசியில், உடல் அழகை வெளிக்காட்டும் ஆணழகன் போட்டியில் ஈடுபட ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு சாதாரணமாக, நான்கு மணி நேரம் துவங்கி, 12 மணி நேரம் வரையிலும் கூட, உடற்பயிற்சி கூடத்திலேயே உழைத்தார்.
இந்த உழைப்பு, இவரை படிப்படியாக உயர்த்தியது. உள்ளூர் ஆணழகன் போட்டியில் வென்றவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, 1952ல், உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். அதன்பின், இவர்தான் இங்குள்ள இளைஞர்களின் ரோல் மாடலானார். மாஸ்டர் என்ற பட்டத்துடன், தொடர்ந்து நிறைய போட்டிகளில் கலந்து, பதக்கங்களை வாரி குவித்து அனைவரையும், 'ஏறிட்டு' வியந்து பார்க்க வைத்தார்.
இந்திய விமான படையில், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை கிடைக்க, அங்கு இவர் தயாரித்த பல வீரர்கள், ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றனர்.
கடந்த வாரம், இவருக்கு நூறு வயது நிறைவடைந்ததை அடுத்து, வாழ்த்து சொல்ல அனைவரும் தேடியபோது, மனிதர் உள்ளூர், 'ஜிம்<'மில் உடற் பயிற்சி செ#து கொண்டிருந்தார்.
இன்று வரை, உடலில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் காணப்படும் இவர், தன் உடல் வலிமை மற்றும் ஆயுளின் ரகசியம் பற்றி கூறும்போது, 'எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை; எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன். வாழ்க்கையையும், உணவையும், எப்போதும் எளிமையாக வைத்துக் கொள்வேன். எல்லாரும் சாப்பாட்டில் காய்கறி தொட்டுக் கொண்டால், எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், தட்டு நிறைய காய்கறிகளை வைத்துக் கொண்டு, உணவைத்தான் தொட்டுக் கொள்வேன், அந்த அளவிற்கு, இன்றைக்கும் காய்கறி மற்றும் பழங்கள்தான் என் பிரதான உணவு...' என்கிறார்.
தன் மகன்கள் நடத்தும் பிட்னஸ் சென்டரில், இப்போதும் இவர்தான் மாஸ்டர். 'சும்மாயிருந்தால் இரும்பே துரு பிடிச்சுக்கும், அப்படி இருக்கும் போது, இது சாதாரண உடம்புதானே, அதனாலே, நான் எப்போதும் பிசிதான்...' என்கிறார் சிரித்தபடி.
***
எல். முருகராஜ்
