PUBLISHED ON : ஜூலை 10, 2016

ஜூலை, 10 ஆனி திருமஞ்சனம்
சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, 'ஆனி திருமஞ்சனம்' என்பர். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச சபைகளில் சிறப்பு பூஜை உண்டு. ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், பொற்சபையான சிதம்பரம், வெள்ளியம்பலமான மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில், தாமிரசபையான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சித்திரசபையான குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஆகியவையே அந்த சபைகள்.
இதில், சிதம்பரம் எனும் பொற்சபை, புகழ் பெற்று விளங்குகிறது. காரணம், இங்கு தான் சைவத்தின் உயிர்நாடியான, தேவாரப் பாடல்கள் கிடைத்தன. இங்குள்ள மேற்கு கோபுரம் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தரும் வந்து இறைவனை தரிசித்துள்ளனர். இவர்கள் மூவருமே தேவாரம் பாடியவர்கள். இதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல, சிவவழிபாட்டின் மற்றொரு உயிர் மூச்சான திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகர், கிழக்கு கோபுரம் வழியாக இங்கு வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்துள்ளார்.
ஆத்ம ஞானம் வேண்டி, தில்லையில் மரங்கள் அடர்ந்த வனத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்தார், மாத்யந்தினர். வைகறை பொழுதில் பூஜைக்குரிய மலர்களைப் பறித்ததால், அழுகிய மலர்களும் கலந்திருந்தன. எனவே, 'நல்ல மலர்களைப் பறிக்க, எனக்கு இருளிலும் தெளிவாகத் தெரியும் கண்களும், மரத்தில் பற்றி ஏற, கூரிய நகங்களும் வேண்டும்...' என, சிவனை வேண்டினார், மாத்யந்தினர். அப்படியே அருள்பாலித்தார், சிவபெருமான்.
இதனால், இவர், 'வியாக்ரபாதர்' எனப்பட்டார். 'வியாக்ரபாதம்' என்றால், புலிக்கால் என்று பொருள். வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலியும் தினமும் நடராஜரின் திருநடனத்தைக் காண்பவர்கள். இவர்களது சிலைகளை, நடராஜர் சன்னிதிகளில் பார்க்கலாம்.
நடராஜர் தலமான சிதம்பரத்தை, சித் + அம்பரம் என பிரிப்பர்.
'சித்' என்றால் அறிவு; 'அம்பரம்' என்றால் வெட்டவெளி. அதாவது, ஒன்றுமே இல்லாதது என்று பொருள். 'மனிதா... உன்னிடம் ஒன்றுமே இல்லை...' என்பது தான், சிதம்பர ரகசியத்தின் உட்பொருள்.
நடராஜர் சன்னிதியின் வலது பக்கத்தில், சிறு வாசல் உள்ளது. இதனுள், தங்க வில்வ மாலை தொங்க விடப்பட்டு, திரையால் மறைக்கப்பட்டிருக்கும். பூஜையின் போது, இந்த திரை விலக்கப்பட்டு, ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும்.
இறைவன், ஆகாயம் போல் பரந்து விரிந்தவன்; ஆகாயத்துக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதுபோல, இறைவனும் முதலும், முடிவும் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி, சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவ சக்கரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.
ஆனி திருமஞ்சன திருநாளில், ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானை வழிபட்டு, ஆனந்த வாழ்வைப் பெறுவோம்!
தி.செல்லப்பா

