தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,

பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,

பகைவருக்கும் பதவி கொடுத்த எம்.ஜி.ஆர்.,


PUBLISHED ON : டிச 22, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 22, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.

கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆரிடம், தனி கட்சி துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதில், மதுரை எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்கள், தங்கம் மற்றும் பால்ராஜ் முக்கியப் பங்கு வகித்தனர். கே.எஸ். ராஜேந்திரன் என்பவர், எம்.ஜி.ஆர்., கட்சிக் கொடி என்று, தாமரைக் கொடியை, பல ஊர்களில் ஏற்றி வைத்து, பரபரப்பாக்கினார்.

ஆனால், இதையெல்லாம் கண்டும், காணாமலும் அமைதி காத்தார் எம்.ஜி.ஆர்., இந்த பிரச்னை, கட்சியினர், மன்றத்தினர் ஆகியோரை தவிர, மாணவர்கள் மத்தியிலும், விஸ்வரூபம் எடுத்தது. பள்ளி மாணவர்களும், எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்து, 'ஸ்டிரைக்' செய்ய ஆரம்பித்தனர். அப்போதைய அரசால், அதை சமாளிக்க முடியாமல், நவ.,15, 1972 முதல் ஜன., 8, 1973 வரை, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இது, ஒரு வரலாற்று சம்பவமாக ஆகிவிட்டது.

தமிழக, தென் மாவட்டங்களில், எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஆதரவு மகத்தானது. எனினும், அதை முறியடிக்க, மதுரை மாவட்ட தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பு வகித்த, அப்போதைய மேயர், மதுரை முத்து, (நாடோடி மன்னன் பட வெற்றி விழாவின் போது, எம்.ஜி.ஆரை அலங்கார சாரட் வண்டியில் அமர வைத்து, மிக பெரிய ஊர்வலம் நடத்தி, எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் பரிசு அளித்தவர்) தி.மு.க., தலைமையின் தூண்டுதலால், எம்.ஜி.ஆரை, முழு மூச்சாக எதிர்த்து செயல்பட்டார்.

'எம்.ஜி.ஆர்., எடுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளிவராது; வரவும் விடமாட்டேன். அப்படி, படம் ரிலீசானால், நான் சேலை கட்டிக் கொள்கிறேன்...' என்று, பொதுக் கூட்டங்களில் பேசி, பதட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். அவரை சமாளிக்க, மதுரை அ.தி.மு.க.,வில் காளிமுத்து, பட்டுராஜன், பொ.அன்பழகன் ஆகியோர் களமிறங்கினர்.

எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தியால், படத்தின், பிராசசிங் வேலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, பிரின்ட் போடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி, அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம், சவால் விட்ட மதுரை முத்துவுக்கு, மதுரை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும், சேலை கடை வைக்குமளவிற்கு, சேலைகள் குவிந்தன. அது, முத்துவின் மனதை மாற்றியது. அதே நேரம், கருணாநிதி, மேயர் முத்துவுக்கு எதிராக செயல்பட்டார். மேயர் போடும் எந்த உத்தரவும் செயல்படாதவாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய ஆணையிட்டார். இதனால், மனம் உடைந்த முத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியை, மேடைகளில், கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற முடிவுக்கு வந்த முத்துவிற்கு, எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து பேச வழி தெரியவில்லை.

அ.தி.மு.க., பிரமுகர் பட்டுராஜனிடம், எம்.ஜி.ஆரை சந்திக்க ஆலோசனை கேட்டார். ஆனால், அவரை அழைத்து செல்ல பட்டுராஜனுக்கு இஷ்டமில்லை. காளிமுத்து மற்றும் பொ.அன்பழகன் ஆகியோர், வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எல்லாம் மீறி, மும்பையில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை, சில பிரமுகர்களுடன், முத்து சந்தித்து, தன் ஆதரவை அளித்து, கட்சியில் சேருவதாக கூறினார். 'மதுரையில் முறைப்படி வந்து சந்தியுங்கள்...' என, கூறி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.,.

சில நாட்களுக்கு பின், மதுரை பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில், ஆள் உயர மாலை அணிவித்து, பெரிய பூச்செண்டு கொடுத்து, முறைப்படி அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார் முத்து. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியை கடுமையாக தாக்கிப் பேசினார். அந்த கூட்ட முடிவில் எம்.ஜி.ஆர்., பேசும் போது, 'வருங்கால மேயர், அண்ணன் முத்து அவர்களே...' என்று சொல்லி, ஆரம்பித்தார். பொதுக்கூட்டத்தில், சொல்லியபடி, மேயர் பதவியை வழங்கி, கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., தன் கட்சியினரின் எதிர்ப்புகளையும் பொருட் படுத்தாது, பகைவனுக்கும் பதவி கொடுத்த, அந்த உயர்ந்த உள்ளம், எம்.ஜி.ஆரைத், தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்.

மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us