தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (13)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (13)

நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (13)


PUBLISHED ON : ஆக 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு முறை, நாடகம் போட, கும்பகோணத்துக்கு போயிருந்தோம்.

நாடகம் நல்லபடியாக நடந்து முடிந்தது. பாலாஜியின் காரிலேயே, அவர், நான், 'மேக் - அப் மேன்' ராமசாமி மற்றும் பத்திரிகையாளர் விகடன் பாலாவுடன், இரவோடு இரவாக, கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டோம்.

நாடகம் முடிந்த அலுப்பு, இரவு சாப்பாடு எல்லாமாக சேர்ந்து கொள்ள, புறப்பட்டு கொஞ்ச நேரம் வரை பேசியபடியே வந்தாலும், சீக்கிரமே துாங்கிப் போனோம்.

திடீரென்று பயங்கர சத்தம். நாங்கள் வந்த கார், தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை என்ற இடத்தில், சாலை ஓர மரம் ஒன்றில் மோதியது.

டிரைவர், மணிக்கு பலத்த காயம். முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த எனக்கும், 'மேக் - அப் மேன்' ராமசாமிக்கும் பலமான அடி.

குறிப்பாக, எனக்கு கண்ணில் அடிபட்டு, விழி பிதுங்கினாற்போல ஆகிவிட்டது. பத்திரிகையாளர், விகடன் பாலாவுக்கு வாயில் பலத்த காயம். பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த பாலாஜியும், மற்றவர்களும் லேசான காயங்களுடன் தப்பி விட்டனர். டிரைவரின் கால், 'கிளட்ச்'சுக்கும், 'பிரேக்'குக்கும் இடையில் சிக்கியிருந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால், சாலையில் போக்குவரத்தும் கிடையாது. அடிபட்ட எங்களுக்கு உதவ யாருமில்லை.

சில மணி நேரம் கழித்து, அவ்வழியே வந்த லாரிக்காரர் தான், எங்களை வெளியில் எடுத்து, லாரியில் ஏற்றி, தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தார். இப்படியும் அப்படியுமாக புரண்டு புரண்டு, வலியால் துடித்ததை, உடன் இருந்தவர்கள் பல நாள் சொல்லி புலம்பினர்.

சில நாட்களில் குணமடைந்து, சென்னைக்கு புறப்பட்டார், பாலாஜி. எங்களுக்கும், நல்ல முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

தஞ்சை மருத்துவமனையில், ஒரு மாதம் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. ஒரு வழியாக மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி, சென்னைக்கு திரும்பினோம்.'

அடுத்த சில நாட்களில், ஏவி.எம்.,மின், வீரத் திருமகன் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்தது. அதில், எனக்கு காமெடி வேடம் கொடுத்திருந்தனர்.

ஏவி.எம்., ஸ்டுடியோவுக்கு போய், 'இப்போது குணமாகி விட்டேன். என்னால் படப்பிடிப்புக்கு வரமுடியும். பிரச்னை ஏதுமில்லை...' என்று சொல்ல, சரவணன் சாரை சந்தித்தேன்.

விபத்து பற்றி, அவர் கேள்விப் பட்டிருந்ததால், என்னை பார்த்தவுடன், நலம் விசாரித்தார்.

காதுக்கு மேல் ஓரிடத்தில் பட்ட காயம் மட்டும், முழுவதுமாக ஆறாமல் இருந்தது. அதை சுட்டிக்காட்டி, 'கொஞ்சம் பஞ்சு வைத்து, அதன் மேலே, 'விக்' ஒட்டி விடலாம்...' என்றேன்.

'விபத்து காரணமாக, ஒரு மாதம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என கேள்விப்பட்டோம். அதனால், உங்களுக்கு பதிலாக, அந்த வேஷத்துக்கு காமெடியன் ராமாராவை ஒப்பந்தம் பண்ணிட்டோம்...' என்றார், சரவணன்.

மிகுந்த வருத்தத்துடன், மேற்கொண்டு ஏதும் பேசாமல், அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். ஆனாலும், அந்த ஏமாற்றத்தை ஏற்க, மனது மறுத்தது.

திரும்பவும், சரவணன் அறைக்குள் சென்று, 'சார்... இந்த முறை எனக்கு, உங்க படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆனால், கூடிய சீக்கிரமே, உங்க படத்துல, நான் கேட்கிற தொகையை கொடுத்து, என்னை ஒப்பந்தம் பண்ணத்தான் போறீங்க...' என்றேன்.

இந்த வார்த்தைகள், கர்வம் காரணமாக வெளிவரவில்லை. என் திறமை மீது இருந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் அது. ஆனால், என் வார்த்தைகளை, சரியானபடி எடுத்துக் கொண்டார், சரவணன்.

'மிஸ்டர் நாகேஷ்... அப்படி ஒரு நிலைக்கு நீங்க வந்தால், ரொம்ப சந்தோஷம் தான். நீங்க கேட்கிற தொகையை கொடுத்து, நிச்சயமா உங்களை ஒப்பந்தம் பண்ணுகிறேன்; வாழ்த்துக்கள்...' என்றார்.

அவர் வாழ்த்து சீக்கிரமே பலித்தது. அதற்கு மூல காரணமாக இருந்தவர், இயக்குனர் திலகம், கே.பாலசந்தர் தான்.

அவர் எழுதி, நான் மேடையில் நடித்த, சர்வர் சுந்தரம் நாடகம், மிக பிரமாதமான வரவேற்பை பெற்றது. பத்திரிகைகள், 'ஓகோ' என்று பாராட்டின. சென்னையில் முக்கியஸ்தர்களும், திரையுலக பிரபலங்களும், அந்த நாடகத்தை பார்த்து பாராட்டினர்.

ஏவி. மெய்யப்ப செட்டியார், அந்த நாடகத்தை, பலமுறை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்து ரசித்தார். ஒவ்வொரு தடவை நாடகம் பார்க்க வருகிறபோதும், அவரது மனைவி ராஜேஸ்வரி அம்மாளையும் அழைத்து வருவார். ஏவி.எம்., தயாரித்த பல திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருந்த, இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவுடன், ஏவி.எம்., செட்டியாரும் வந்து, சில தடவை நாடகத்தை பார்த்தனர்.

ஏவி.எம்., சம்பந்தப்பட்ட இத்தனை பேரும், சர்வர் சுந்தரம் நாடகத்தை பலமுறை பார்த்ததற்கு காரணம், அவர்கள் அதை சினிமாவாக எடுக்க விரும்பியது தான். என்னை கூப்பிட்டு அனுப்பினார், ஏவி.எம்., செட்டியார். போய் பார்த்தேன்.

'என்னப்பா, நாகேஷ்... சர்வர் சுந்தரத்தை படமாக எடுக்கலாம்ன்னு இருக்கேன்...' என்றார்.

'நீங்க முடிவு எடுத்தா, அது சரியாகத்தான் இருக்கும்...' என்றேன்.

'ஆனா, ஒரு சின்ன தயக்கம்...' என்றார்.

'என்ன சொல்லுங்க...' என்றேன்.

'காமெடியனை, 'ஹீரோ'வா   போட்டு எடுத்த தமிழ் படம், வெற்றி பெற்றதில்லை...' என்றார்.

'அப்போ எதற்கு வீணா, 'ரிஸ்க்' எடுக்கறீங்க... விட்டுடுங்க... இல்லை, மார்க்கெட் இருக்கிற, 'ஹீரோ' யாரையாவது போட்டு படம் எடுங்க, நல்லா ஓடும்...' என்றேன்.

'இல்லைப்பா... நல்ல சப்ஜெக்ட் தான்... உன் நடிப்பு அபாரமா இருக்கு... உன்னையே போட்டு படம் எடுத்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது...' என்றார்.

அவருக்கு, என்னை போட்டு படம் எடுப்பது, 'ரிஸ்க்' என்ற எண்ணமும் இருந்தது. அதே நேரம், வேறு யாரையும் என் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் விரும்பவில்லை என்பது, தெளிவாக புரிந்தது.

இறுதியில், சர்வர் சுந்தரம் நாடகத்தை, சினிமாவாக எடுப்பது, அதில், என்னை பிரதான பாத்திரத்தில் நடிக்க வைப்பது என, முடிவு செய்தார், ஏவி.எம்., கே. பாலசந்தரிடம் கதையை வாங்கினார்; படத்தை இயக்கும் பொறுப்பை, இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு ஏற்றுக் கொண்டனர்.

தொடரும்

நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us