தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 22, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 22, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜாஜிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது, 1936-ல் தான். சென்னை மாவட்ட, காங்கிரஸ் நிர்வாகி என்ற முறையில், பொதுக்கூட்டம், மாநாடு போன்ற விழாக்களுக்கு அழைப்பதற்காக, அடிக்கடி ராஜாஜியிடம் செல்வேன். அந்த மேடைகளில், ராஜாஜியை வரவேற்று உபசரிப்பேன். இந்த முறையில் தான், அவரோடு தொடர்பு ஏற்பட்டது. 1940-41ல், சென்னையில் தனி நபர் சத்தியாகிரகத்தை, நடத்துவது தொடர்பாக, ராஜாஜியின் ஆலோசனையைக் கேட்க, அவரிடம், அடிக்கடி செல்வேன்.

அந்த நாளிலேயே, தமிழ் மொழிப் பற்றும், தமிழன் என்ற இன உணர்வும், என் இதயத்தில் வளர்ந்து வந்தன. ராஜாஜி அப்போது, தமிழில் மிகுந்த பற்று கொண்டிருந்தார். டில்லி என்பதை, 'தில்லி' என்று தான் எழுதுவார். மொழிக்கு முதலில், 'ட' கரம் வரக்கூடாது என்பது, தமிழ் இலக்கணம். தன் பெயரை கூட, 'இராச கோபாலாச்சாரி' என்று தான் எழுதுவார். பொதுக்கூட்டங்களில், ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவார். அவரது தமிழ் உணர்வும், ஒழுக்கமான வாழ்வும், எனக்கு, அவர் மீது பக்தியை ஏற்படுத்தியது.

ஆனால், சோதனை மிக்க ஒரு கட்டத்திலே, அவர் காங்கிரசை பலவீனப்படுத்த முயற்சித்தார். வடக்கே பாகிஸ்தான் அமையவும், தெற்கே திராவிட கோரிக்கை வலுக்கவும், அவர் ஆதரவு காட்டியது, எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

சென்னை நகர காங்கிரஸ் கமிட்டி செயலராக இருந்த நான், ராஜாஜியின் போக்கை எதிர்த்து, பிரசாரம் செய்தேன்.

இந்நிலையில், மதுரையில் நடந்த, தேசிய நாடார் சங்க மாநில மாநாட்டு மேடையிலே, நாங்கள் சந்தித்தோம். என்னை அவர் அன்புடன் கை காட்டி அழைத்து, அருகில் அமர்த்தி, பக்கத்திலிருந்த டி.டி.கே.,விடம், 'கிராமணி நன்றாக பேசுவார்; நம்மையும் ஏசுவார்...' என்றார்.

'தங்களை எதிர்த்து தான் பேசுகிறேன்; ஏசிப் பேசவில்லை. பேசவும் மாட்டேன்...' என்றேன் பணிவுடன். 'தங்களை எதிர்க்கவில்லை. பாகிஸ்தான் கோருவதைத் தான் எதிர்க்கிறேன்...' என்று மேலும் கூறினேன்.

'பாகிஸ்தான் பிரிந்தால், அதனால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்று கேட்டார் ராஜாஜி.

'எனக்கொன்றும் தெரியாது தான். ஆனால், 'நாட்டைத் துண்டாடுவது, குழந்தையைத் துண்டாடுவது போல' என்று தாங்களே முன்னர் கூறியிருக்கிறீர்கள். அதை நம்பித்தான் பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்க்கிறேன்...' என்றேன்.

'அப்படியா... இப்போது நானே சொல்கிறேன், பாகிஸ்தானை பிரித்து கொடுப்பதால், நமக்கு நன்மை தான் என்று. என் மீது, தங்களுக்கு மதிப்பு இருந்தால், இதை நம்புங்களேன்...' சற்று நேரத்திற்கு முன், அவர் முகத்தில் இருந்த சினம் மாறி, ஒரு தந்தைக்குரிய அன்பு, அவர் குரலில் வெளிப்பட்டது.

'தாங்கள் சொல்வதை, காந்திஜியும் ஏற்றுக் கொள்ளும்படி செய்யுங்கள்; நான் தங்களைப் பின்பற்றுகிறேன்...'

'நீங்கள், இன்று, எனக்கு எதிராக செய்யக்கூடிய பிரசாரத்திற்காக, நீங்களே வருந்தக்கூடிய நாள் வரும்...' என்று, கண்டிப்பான குரலில் என்னை எச்சரித்தார் ராஜாஜி.

'அந்த நாள் விரைவில், வருவதையே நான் விரும்புகிறேன். தங்களைப் பிரிந்திருப்பதிலே எனக்கு மகிழ்ச்சியில்லை...' என்று பதிலளித்தேன்.

'எனது போராட்டம்' நுாலில் ம.பொ.சிவஞானம்.

பத்திரிகையாளர், 'இந்து நேசன்' லட்சுமிகாந்தன், கொலை வழக்கில் கைதான ஜெயானந்தன், உடனே, 'அப்ரூவர்' ஆனான். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில், பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் சந்தித்ததாகவும், நச்சுப் பாம்பை ஒழித்துக் கட்ட, என்ன செலவானாலும் ஏற்பதாகக் கூறி, அவர்கள், சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தான். 'எங்கள் கவுரவத்திற்கும், புகழுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், துரோகம் செய்ய மாட்டோம் என்று, சத்தியம் செய்ய வேண்டும்...' என்று, பாகவதர் கேட்டார். அதன்படியே, உப்பு, வெற்றிலை வைத்து, சத்தியம் செய்து கொடுத்தானாம்.

பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பம்பாயிலிருந்து வந்த, வழக்கறிஞர் கே.எம்.முன்ஷியின் வாதத்தின் பேரில், சதி ஆலோசனை நடந்ததாக சொல்லப்படும் நாளில், ஸ்ரீராமுலு நாயுடு, பம்பாய் தாஜ் ஓட்டலில், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் இருந்தார் என்று நிரூபித்து, ஸ்ரீராமுலு விடுதலை பெற்றார். முன்ஷியின் ஒரு நாள் பீஸ், அக்காலத்திலேயே, எழுபது ஆயிரம் ரூபாய்.

முன்ஷியின் வாதத்தால், ஸ்ரீராமுலு விடுதலையானதைக் கண்ட என் எஸ்.கே., தானும், முன்ஷியை வழக்கறிஞராகக் வைத்துக் கொண்டார். முன்ஷியின் வாதத்தைக் கேட்டவுடன், கோர்ட்டு, தன்னையும் விடுவிக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தார்.

சதி நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், கிருஷ்ணன், மாடர்ன் தியேட்டர்சின் படப்பிடிப்பில் இருந்தார் என்று, நிரூபிக்க முயன்றார் முன்ஷி.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சின் படம் டைரக்ட் செய்து வந்தவர் எம்.வி.ராமன் என்பதால், அவர் சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார். 'நவ., 7ம் தேதி,

என்.எஸ் கிருஷ்ணன், 3மாடர்ன் தியேட்டர்சில் இருந்தார்...' என்று, சாட்சி அளித்தார் ராமன். 'அன்று, பக்த ஹனுமான் படத்துக்காக, ஒரு தந்திரக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். மாலையில், என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார்...' என்று, கேமராமேன் பெய்லஸ்சும், 'மாலையில், மாடர்ன் தியேட்டர்சில் டிபன் சாப்பிட்டார்...' என்று, சவுண்டு இன்ஜினியர் பிள்ளையும் சாட்சி கூறினார்.

ஆனால், இந்த சாட்சிகள் எதுவும் பலிக்கவில்லை. என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பாகவதருக்கும், ஆயுள் தண்டனை என்று, தீர்ப்பானது.

'புகழ் பெற்ற வழக்குகள்' என்ற நுாலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us