தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சினிமா தயாரிப்பு நிர்வாகியாக இருந்த, ஏ.எல்.எஸ்.வீரய்யா எழுதிய, 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து: அந்த காலத்தில், நாடகங்களில் சிறுவர்கள் நடிக்க, அவர்களது தந்தையின் சம்மத கடிதம் அவசியம். ஒருநாள், சிறுவன் ஒருவன், டி.கே.எஸ்., நாடக குழுவில், வாய்ப்பு கேட்டபோது, 'உன் தந்தையிடம், கடிதம் வாங்கி வா...' என, அனுப்பி விட்டனர்.

அடுத்த நாளே, அவன் கடிதம் வாங்கி வந்து சேர்ந்து விட்டான்.

இருந்தாலும், ரகசியமாக, அந்த சிறுவனின் தந்தைக்கு, 'உங்கள் பையன் எடுத்து வந்த கடிதம் உண்மைதானா...' எனக் கேட்டு, கடிதம் எழுதினர்.

உடனே, அந்த சிறுவனின் தந்தை, ஓடி வந்து, 'ஐயா... நான் அனுமதிக்கவில்லை... கடிதம் கொடுக்கவில்லை...' எனக் கூறினார்.

ஆனால், அந்த சிறுவனின் தந்தையிடம் பேசிப் பேசி, அவன் நடிக்க, சம்மதிக்க வைத்து விட்டனர். அந்த சிறுவன் தான், நடிகர் சகஸ்ரநாமம்.

கடந்த, 1933ல், கோல்கட்டாவில் தயாராகி வெளிவந்த படம்: வள்ளி திருமணம். பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில், வள்ளியாக, டி.பி.ராஜலட்சுமி நடித்தார். படம் வெளிவந்து, சில நாட்கள் வரை, நடுவில் ஒரு, காட்சி தொகுப்பு இல்லாமலே ஓடியது. இருந்தும், அதை லட்சியம் செய்யாமல், படம் பார்க்க குவிந்தனர், ரசிகர்கள்;

டி.பி.ராஜலட்சுமிக்கு, 'சினிமா ராணி' என்ற பட்டமும் கொடுத்தனர்.

குமாரபாளையத்தில், எம்.ஆர்.ராதாவின், இழந்த காதல் நாடகம் நடந்தது. ஈ.வெ.ரா., - அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் டிக்கெட் வாங்கி, இந்த நாடகத்தை பார்த்தனர். நாடக கொட்டகை நிரம்பி வழிந்தது. அதனால், மூவரும் தரையில் அமர்ந்து பார்த்தனர்.

இடைவேளையில் மேடை ஏறினார், அண்ணாதுரை.

'அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிட கழக மாநாடுகள், 100 நடத்தறதும் சரி; எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி...' என்று மனமார, ராதாவை பாராட்டினார்.

ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு, ஒருநாள், பாகவதர் தலைமை தாங்கினார். நாடகத்தை வெகுவாக ரசித்து பாராட்டியவர், மேடையில், ராதாவை தொட்டு பேச பயந்தார். காரணம், குஷ்டரோகத்தின் மீது ஏற்பட்டிருந்த பயம் தான்.

சமுதாயத்தில் இதன் தாக்கம் அதிகமாய் இருந்தது. ராதாவின் கோலத்தை நிஜம் என நினைத்து, பயந்தார், பாகவதர்!

சினிமா உலகில் நுழைந்து, முதன் முதலில் படப்பிடிப்பிற்கு, மாட்டு வண்டியில் வந்தவர், நடிகை அங்கமுத்து.

இன்று, ஒரே கதையை, இரண்டு பேர் தயாரிக்கிறேன் என கிளம்புகின்றனர். பிறகு, வழக்கு என, நீளுகிறது.

கடந்த, 1935ல், தமிழில், 31 படங்கள் வெளி வந்தன. இதில், பயனீர் துருவர், ஏஞ்சல் துருவர், பயனீர் நல்ல தங்காள், ஏஞ்சல் நல்ல தங்காள் என, இரு கதை படங்கள் வெளிவந்தன. காரணம், அதே கதையை, இரு வேறு சினிமா கம்பெனிகள் தயாரித்து, அவரவர் கம்பெனி பெயரையும் சேர்த்து, வெளியிட்டனர். மக்களும், இரு கம்பெனி படங்களையும் பார்த்து, ரசித்தனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் தயாரித்து, நடித்த நாடகம், சத்தியவான் சாவித்திரி! இதில், எமன் வேடத்தில் நடிக்கும் காட்சியில், கையில் வைத்திருக்கும் சூலாயுதத்தை ஓங்கி மேடையில் அடிப்பார். அப்போது, ஏற்பட்ட அதிர்ச்சியில், ஒரு பெண்ணுக்கு கர்ப்ப சிதைவு ஏற்பட்டதாம்.

இதனால், இந்த காட்சிக்கு முன், கர்ப்பிணிகள் வந்திருந்தால், வெளியே போய், காட்சி முடிந்ததும் வரவும்... என, அறிவித்து, வெளியேறிய பின்னரே, காட்சியை தொடர்ந்தனர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us