தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து: பஞ்சாப் மாநிலம், கபூர்தாலா மாவட்டத்தில் உள்ளது, தாஹர் என்னும் இடம். அங்கே, நீர் பாசன கால்வாய் வெட்டும், விழா ஒன்றிற்கு ஏற்பாடாகி இருந்தது. அந்த விழாவை துவங்கி வைக்க அழைக்கப்பட்டிருந்தார், ஜவஹர்லால் நேரு.

எல்லாருக்கும் முன்னதாக, ஜவஹர்லால் நேரு, மண் வெட்டியால் தரையில் கொத்தி, வாய்க்கால் வெட்டுவதை துவக்கி வைக்க வேண்டும். வெள்ளியால் செய்யப்பட்ட மண்வெட்டி வழங்கப்பட்டது. அதை பார்த்து வியந்த நேரு, 'என்ன இது...' என, கேட்டார்.

'தாங்கள் தரையில் கொத்துவதற்கென்றே, 'ஸ்பெஷல்' ஆக தயாரிக்கப்பட்ட, வெள்ளி மண்வெட்டி...' என்றனர்.

'என்ன அநியாயம்... மக்கள், பசியால் வருந்தி, மடிந்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் என்னடாவென்றால், மண்ணை தோண்ட, வெள்ளியில் மண்வெட்டியை செய்து கொடுக்கிறீர்கள். நம் நாட்டில், கிராம மக்களிடமும், தொழிலாளர்களிடமும், வெள்ளி மண்வெட்டிகளா இருக்கின்றன... சாப்பிட அரிசியோ, கோதுமையோ கிடைக்கவில்லை என, பிற நாடுகளை நோக்கி கையேந்த வேண்டியிருக்கிறது...' என்று, வருத்தமும், கோபமும் கலந்த குரலில் கூறினார், நேரு.

பிறகு, சாதாரண மண்வெட்டியால் வெட்டினார்.

இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: நேருவின் புகழ், இந்தியா மற்றும் உலகெங்கும் உச்சிக்கு போய் கொண்டிருந்த சமயம், 1936ல், மேற்கு வங்க மாநில தலைநகர், கோல்கட்டாவில், 'மாடர்ன் ரிவ்யூ' பத்திரிகையில், சாணக்கியன் என்ற பெயரில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது.

அதில், 'நேருவை, அளவுக்கு மீறி புகழ்வதன் மூலம், அவரை பெரிய சர்வாதிகாரியாக்கி விடக்கூடும்; அவர் இல்லாவிட்டால், வேறு ஆள் இல்லை என்ற நினைப்பை, அவர் அடைய செய்து விடக்கூடும்...' என்று, குறிப்பிடப்பட்டிருந்தது.

நேருவை பற்றி, இப்படி ஒரு கட்டுரையா என, பலரும் வேதனைப்பட்டு, இதை எழுதியவர் யார் என, ஆராய்ந்தனர். அப்போது, அவர் தான் எழுதியதே என்ற உண்மை வெளியானது.

பேரியக்கத்தின் தலைமை பதவிக்கு, தன்னையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதன் மூலம், மற்றவர் புறக்கணிக்கப்பட்டு விடக் கூடாது என்பதை உணர்த்தவே, இப்படி ஒரு கட்டுரையை எழுதினார், நேரு.

இளைஞர்களே... ஒப்பிட்டு பாருங்கள், அன்றைய தலைவர்களையும், இன்றைய தலைவர்களையும்.

'நுாறு தலைவர்கள், நுாறு தகவல்கள்' நுாலிலிருந்து: நேரு, பிரதமராக இருந்த காலத்தில், வெளிநாட்டு விருந்தினர், திடீரென வீட்டிற்கு வர நேர்ந்தது.

அப்போது, அவரது தனியறையை பூட்டி, காவல் காக்கும் முதியவர், குறட்டை ஒலியுடன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அவரை எழுப்ப விரைந்தனர், அதிகாரிகள்.

அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, 'அவரை எழுப்பாதீர், என்னிடம் மாற்று சாவி உள்ளது; நானே அறையை திறந்து கொள்கிறேன்...' என்று கூறி, மாடிப் படிகளில் வேகமாக ஏறி, கதவை திறந்து, விருந்தினரை, உள்ளே அழைத்துச் சென்றார், நேரு.

அவரது மனிதாபிமானத்தை கண்டு, வெளிநாட்டு விருந்தினர் திக்குமுக்காடி போயினர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us