PUBLISHED ON : செப் 12, 2021

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எழுத்தாளர் கல்கியும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது,
கல்கியிடம், 'எனக்கும் கதை எழுத
வேண்டும் என்று ஆசை...' என்றார், என்.எஸ்.கிருஷ்ணன்.
'அப்படி என்றால் நான்கு மை வேண்டுமே...' என்றார், கல்கி.
'என்னென்ன கலரில்...' என்றார், என்.எஸ்.கே.,
அதற்கு, 'திறமை, பேனா மை, தனிமை, பொறுமை...' என்று, கல்கி குறிப்பிட்டதும், 'நீங்க சொன்னது மிக மிக அருமை...' என்றார், என்.எஸ்.கிருஷ்ணன்.
பிரான்ஸ் நாடு, இங்கிலாந்தை தன் எதிரி நாடாக கருதிய காலம் அது.
மாவீரன் நெப்போலியன், பிரான்ஸ் மன்னராக இருந்தபோது, இங்கிலாந்து விஞ்ஞானி
டாக்டர் ஜென்னரிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
நெப்போலியனிடம், 'நீங்கள் ஏன், எதிரி நாட்டு விஞ்ஞானிக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிறீர்கள்...' என்று கேட்டனர், நண்பர்கள்.
'என்னைப் போன்ற மன்னர்களின் பெருமை, போரில் எவ்வளவு வீரர்களை கொன்றோம் என்பதில் தான் இருக்கிறது. எங்களால் ஒரு உயிரை தரவோ, காப்பாற்றவோ முடியாது.
'ஆனால், மருந்துகள் கண்டுபிடித்து, வைசூரி அம்மை போன்ற நோய்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார், டாக்டர் ஜென்னர். அழிக்கும் எங்களை போன்றவர்களை விட, காக்கும் அவரே உயர்ந்தவர். அந்த
வகையில், அவரை நான் மதிக்கிறேன்...' என்றார், நெப்போலியன்.
நெப்போலியனிடமிருந்து, இந்த
பதிலைக் கேட்டு, ஆச்சரியமடைந்தனர், அவரது நண்பர்கள்.
தமிழ் தாத்தா, உ.வே.சா., பேசுவதற்காக, ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கம் மாடியில் இருந்தது.
உ.வே. சா., சிரமப்படக் கூடாது என்பதற்காக, ஒரு சிறுவனை நுழைவு வாயிலிலேயே நிறுத்தி, மாடிப்படிகளில் அவரை அழைத்து வர ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.
உ.வே.சா.,வின் கையை பிடித்து கவனமாகவே படிகளில் அழைத்துச் சென்றான், சிறுவன்.
அவர் ஒவ்வொரு படியாக மேலே ஏறும்போதெல்லாம், 'படிங்க தாத்தா... படிங்க தாத்தா...' என்று சொல்லியபடியே வந்தான்.
கூட்டத்தில் பேசும்போது, நகைச்சுவையுடன், 'நான் நிறைய படித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னும் நான் படிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், படிகளில் அழைத்து வந்த சிறுவன், 'படிங்க தாத்தா, படிங்க தாத்தா' என்று சொன்னது, மேலும் நான் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருந்தது...' என்றார், உ.வே.சா.,
முதல் அணுகுண்டை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த, டாக்டர் ராபர்ட் ஒப்பன் ஹீமர், அமெரிக்க செனட் சபையில் ஆஜராகி, அணுகுண்டு தொடர்பான விபரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, உறுப்பினர்களில் ஒருவர், 'மக்களுக்கு இவ்வளவு பயங்கரமான அழிவைத்தரும் ஆயுதத்தை கண்டுபிடிக்கிறீர்களே... அதிலிருந்து தப்பித்து, எதிர்த்து நிற்கக்கூடிய பாதுகாப்பான ஆயுதம் ஏதாவது இருக்கிறதா...' என்று கேட்டார்.
'ஓ... இருக்கிறதே...' என்றார், ஹீமர்.
'என்ன ஆயுதம் அது...' என்று கேட்டார், மற்றொருவர்.
சிரித்தபடியே, 'சமாதானம் தான்
அது...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
