PUBLISHED ON : மே 28, 2023

முனைவர் எஸ்.சந்திரா எழுதிய, 'அறிஞர்கள் வாழ்வில்...' நுாலிலிருந்து:
ஒருமுறை, கொலம்பசைப் பாராட்டி, விருந்து ஒன்று நடந்தது. அதில், அவர் மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர்.
அவர்களில் ஒருவன் ஏளனமாக, 'கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் பயணம் செய்திருந்தாலும், புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பர்...' என்று கூறினான்.
உடனே, விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றை அவனிடம் கொடுத்து, 'இதைச் செங்குத்தாக மேஜையின் மேல் நிறுத்தி வை பார்க்கலாம்...' என்றார், கொலம்பஸ்.
அவன் நிறுத்திப் பார்த்தான், முடியவில்லை. பின், கொலம்பசை பார்த்து, 'உங்களால் நிறுத்தி வைக்க முடியுமா...' எனக் கேட்டான்.
அந்த முட்டையை வாங்கி, குறுகலான பகுதியை மேஜையின் மீது லேசாக தட்டினார், கொலம்பஸ். முட்டையில் சிறிய பள்ளம் விழ, அது, மேஜையின் மீது செங்குத்தாக நின்று விட்டது.
அதைப் பார்த்து, 'இப்படிச் செய்வது என்றால், நானும் செய்திருப்பேனே...' என்றான்.
சிரித்தபடியே, 'எந்தக் காரியத்தையும், ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல் முறையாக அதைச் செய்வதற்குதான் மூளை வேண்டும்...' என்றார், கொலம்பஸ்.
அவரை கேலி செய்தவன், பதில் பேச முடியாமல், தலை குனிந்து நின்றான்.
எம்.ஆர்.ராதாவுடன், வி.கே.ராமசாமி மற்றும் திருவாரூர் ராமசாமி ஆகியோர், ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக, புதுச்சேரியில் தங்கியிருந்தனர்.
அன்று, யாரோ மத்திய அமைச்சர் வருகிறார் என்று, அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, பந்தோபஸ்து பணியில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ராதா தங்கியிருந்த லாட்ஜ் அருகிலும், மூன்று போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
'இவனுங்க பாதுகாப்பை நம்பியா அந்த மந்திரி வர்றான்; இப்ப பாரு வேடிக்கையை...' என்று கூறிய ராதா, மாடியில் இருந்தபடியே அந்த மூன்று போலீஸ்காரர்களையும் அழைத்தார். ராதாவை பார்த்ததும், அவர்கள் முகத்தில் சந்தோஷம்.
அவர்களை அறைக்குள் அழைத்து சென்று, பிராந்தி பாட்டிலை திறந்து, 'வாங்க... ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம்...' என்றார்.
'இல்ல சார்... எங்களுக்கு, 'டூட்டி' இருக்கு...' என்றனர், போலீஸ்காரர்கள்.
'உங்களை யாரு, 'டூட்டி'யை பார்க்க வேண்டாம்ன்னு சொன்னது. சும்மா எனக்கு கம்பெனி குடுக்கறதுக்காக ஒரு, 'பெக்' சாப்பிடுங்க...' என்றார், ராதா.
ஒரு, 'பெக்'தானே என்று அவர்களும் சாப்பிட்டனர். ஆனால், ராதா அடுத்தடுத்து ஊற்றிக் கொடுக்க, அவர்களும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தனர். கடைசியில் மூன்று பேரும் முழு போதையில் அறையில் சுருண்டு படுத்து விட்டனர்.
'பாருய்யா... இவனுங்க பாதுகாப்பை நம்பி தான், அந்த மந்திரி வரப் போறாரு...' என்று கூறி, ராதாவும் படுத்து துாங்கி விட்டார்.
'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்...' என்ற அவ்வையார் பாடலை பாடச் சொன்னார், பள்ளிக்கூட வாத்தியார்.
முதல் மாணவன் பாடி முடிக்க, அடுத்து எழுந்த, ராமலிங்கம், 'வேண்டாம் என்பது அமங்கல வார்த்தை; வேண்டும் என்று மங்கலமாக பாடலாமே...' என்றவர், கணீர் குரலில், 'ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்...' என்று பாடினார்.
'அதிகப்பிரசங்கி...' என்று அவரை திட்டி, பள்ளியிலிருந்து வெளியேற்றினார், வாத்தியார்.
அன்றோடு, வடலுார் ராமலிங்க சுவாமிகளாகிய வள்ளலாரின் பள்ளி படிப்பு நின்று விட்டது.
- நடுத்தெரு நாராயணன்
