PUBLISHED ON : ஜூன் 03, 2012

தேர் தட்டிலே ஒரு தேவ கீதம்!
* வாழ்க்கை
குருஷேத்திரத்தில்
வாடும் நமக்கு,
கீதை உரைக்கும்
பார்த்தசாரதி
அனுபவம்!
* அஸ்திரம் எடுப்பதா,
அமைதி காப்பதா?
குழம்பும் மனதை
அதுதானே
ஆற்றுப்படுத்துகிறது!
* வார்த்தை உபாயமும்
வாதில் சகாயமும்
வழங்கும்
கிருஷ்ண வடிவம்
அனுபவம்!
* அது,
பொங்கி எழுவதை விட
பொறுமை காப்பதே
புத்திசாலித்தனம் என்கிறது!
* காண்டீபம்
கைநழுவினாலும்
கவலைப்படாதே
என
கனிவாய் சொல்கிறது!
* அனுபவம்
ஒருபோதும்
போரை விரும்புவதில்லை...
பொறுத்துப் போதலே
பொருத்தமானது என்கிறது!
* போரிடாமலே
வெற்றி எய்தலாம்...
காத்திருப்பு மட்டுமே
கவசமாய் இருந்தால்-
இது
அனுபவம் சொல்லும் கீதை!
* நம்மில் பலர்,
அனுபவ சாரதியை
அலட்சியம் செய்வதால்
ரணகளப்படுகிறது
வாழ்க்கை!
* சிக்கல் எழுகையில்
அறிவு தேரில் அமர்ந்து
வரும் அனுபவத்தை
அடைக்கலம் புகுந்தால்,
ஆபத்தில்லாமல்
ஆதாயம் பெறலாம்!
— சு.விஜயலட்சுமி, கடம்பூர்.
