PUBLISHED ON : பிப் 24, 2013

அப்படியேதானிருக்கிறது!
* அப்படியேதானிருக்கிறது...
எல்லாமும் இன்னமும்
அப்படியேதானிருக்கிறது!
* அமர்ந்து பேச நமக்கு
சிம்மாசனமிட்ட ஆலமரத்து வேர்!
* வியர்க்கிற போது
நாம் கேட்காமலேயே
வேகமாய் விசிறிவிட்ட மரக்கிளைகள்!
* நீருக்குள் தொங்கவிட்ட
உன் பாதத்தை
தொட்டுவிட்ட சேதியை
சொல்லி மகிழ்ந்தாட
”ழித்தோடும் வடவாற்று வெள்ளம்!
* கால்கொலுசை
கண்டுவிட்ட களிப்பில்
நீருக்குமேலாய் துள்ளிக் குதிக்கும் சிறுகெண்டை!
* அப்படி என்னதான் பேசிக் கொள்கின்றனர்?
என ஒற்றறிய
தினமும் வந்தமரும் ஜோடிக்கிளிகள்!
* முக வசீகரத்திலோ
உன் வார்த்தையின் அழகிலோ மயங்கி
பழந்தின்ன மறக்கும் மைனாக்கள்...
* எனக்கு தெரியாமல்
உன்னை ரசித்துவிட
இலைகளினூடே
திருட்டுத்தனமாய் எட்டிப்பார்க்கும்
மாலை நேர சூரியன்!
* எல்லாமும் இன்னும்
அப்படியேதானிருக்கிறது...
* காலச்சூழலின் கோரப்பிடியில்
நம் காதல் கைகூடாதென உணர்ந்த வேளையில்...
சடசடவென முறிந்து விழுந்து
சருகுகளோடு சருகுகளாய் சலனமற்று கிடக்கும்
நம் இதயங்களுந்தான்!
— ஞானதாசன், கடலூர்.
