
இது வைகையின் கோபம்!
* சிவனுக்காக தலைகுனிந்து
வைகையாய் மாறினேன்...
தவித்தோர் வாய்க்கு
தாகம் தீர்த்தேன் - எனை
தவிக்க விடுகிறீர்களே!
* வற்றாத செல்வமாய்
வாரி வாரி வழங்குகிறேன்
ஆனாலும் என் அருமை
தெ(பு)ரியவில்லையே!
* கண்டதைத் தின்று
காலைக் கடனை கழித்து
கடமையாய் என்னோடு
கலந்து விடுகிறீர்கள்
சட்டென்று பூசிக் கொள்ள
சந்தனமா, ஜவ்வாதா?
* அழுகியதை கொட்டும்போது
அருவருப்பில் மனம் கனக்கிறது!
* கரையெல்லாம் என்மீது
ஆக்கிரமிப்பு செய்கிறீர்கள்
ஆழமாய் என்னை வெட்டி
அங்கஹீனப்படுத்துவதோடு
ஆங்காங்கே சிறுவர்களின்
அகால இறப்புக்கும் ஆளாக்குகிறீர்கள்!
* பொறுத்து பார்த்து விட்டேன்
கழிவுகளின் முடைநாற்றமும்
கயவர்களின் ஆக்கிரமிப்பும்
கட்டுக்கடங்கா கோபம் தருகிறது!
* ஓலமிட்டு ஓலமிட்டு
ஓய்ந்து விடுவேன் ஒருநாள்...
கவலை எனக்கில்லை
கண்டிப்பாக உங்களுக்குத் தான்!
* ஒரு சொட்டு தண்ணீருக்காக
உங்கள் சந்ததி ஏங்கும்...
வருந்தி அழைத்தாலும்
வர மாட்டேன்!
இன்னொரு வைகை
இனிமேல் இல்லை!
— எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

