
நம்மைவிட நன்றாக...
அவர்கள்...
முதுகில் மட்டுமே குத்துகின்றனர்
நாம் நெஞ்சை காட்ட
தயாராக இருந்த போதும்!
அவர்கள்...
நேர்மையை நேருக்கு நேர்
சந்திக்க துணிவில்லாதவர்கள்
கண்ணுக்கு புலப்படாத
விஷக்கிருமிகள்!
தரமான எதிரிகள்
கிடைக்கக்கூட தவம்
செய்ய வேண்டுமோ?
இருள் இங்கு ஆட்சி
செய்யவில்லை
ஒளி குறைவதால்
அப்படி ஒரு பிரமை!
உலகத்தின்
தீமைக்கு காரணம்
கெட்டவர்களின் எழுச்சி அல்ல
நல்லவர்களின் அமைதியே!
புகழின் வெளிச்சத்தில்
வாழும் போது
சில கறுப்பு நிழல்கள்
விழத்தான் செய்யும்!
வீழ்வது அவமானமல்ல
வீழ்ந்தே கிடப்பதுதான்
அவமானம்!
இறைவா...
அவர்களின் பார்வையை
தெளிவாக்கு
எங்கள் வாழ்வின்
வளத்தை, வசந்தத்தை
பார்க்கட்டும்!
இறைவா...
அவர்களின் காதுகளை
கூர்மையாக்கு
எமது புகழையும்
பெருமையையும்
கேட்கட்டும்!
இறைவா...
அவர்களுக்கு எம்மை விட
அதிக ஆயுளை கொடு
எமது பிரமாண்ட
இறுதி ஊர்வலத்தில்
அவர்களும் நடக்கட்டும்!
எமது
கல்லறையின் மீது பாயும்
கண்ணீர் நதியில்
அவர்களும் நனையட்டும்
நம்மை விட நன்றாக!
— டாக்டர் வடுகம் சிவக்குமார், சென்னை.

