
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருத்தம்!
திருமணமானவுடன்
நீ தனிக்குடித்தனம்
போனதற்கு
வருத்தமில்லை மகனே!
கடன் வாங்கி
வீடும், காரும், 'ஏசி'யும்
வாங்குவதற்கு
வருத்தமில்லை மகனே!
பாதி நாட்கள்
வீட்டில் சமைக்காமல்
உணவு விடுதிகளில் செலவழிப்பதற்கு
வருத்தமில்லை மகனே!
பேரனுக்கு பேர் வைக்கக் கூட
ஒரு வார்த்தை கேட்காதது
ஆலோசிக்காதது
வருத்தமில்லை மகனே!
உன் வரவு, செலவு
திட்டங்கள் எதையும்
சொல்லாததற்குக் கூட
வருத்தமில்லை மகனே!
பிள்ளைகளை கண்டிக்காமல்
அடிக்காமல், செல்லமாக
வளர்ப்பதற்குக் கூட
வருத்தமில்லை மகனே!
தும்மினால் கூட
பாட்டி வைத்தியம் கேட்காமல்
டாக்டரிடம் போய் செலவழிப்பதற்கு
வருத்தமில்லை மகனே...
உனக்கு இன்று வரை
அதிகம் சுதந்திரம், உரிமை
கொடுத்து வளர்த்து விட்டதற்குக் கூட
வருத்தமில்லை மகனே...
காரணம்...
என் அப்பா
என் மீது கொண்ட வருத்தம்
இதை விடப் பெரியது!
— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.

