
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்வியல் எது?
எதைத் தேடிக்
கொண்டிருக்கிறோம்
இருபத்து நான்கு
மணி நேரமும்...
எதைப் பிடிக்க
ஓடிக் கொண்டிருக்கிறோம்
வாழ்நாள்
முழுமையும்...
காலை - மாலை
இரவு - பகல்
ஆதவனும் - வெண்ணிலவும்
ஓடும் ஆறும்...
வான் முட்டும்
மாமலைகள் - வனம்
முழுவதும் மலர்களின்
சுகந்தம்...
எங்கு எதைத்
தேடி ஓடுகிறோம்
எங்கே... எங்கே...
என எதற்காக அலைகிறோம்...
நாளை
பதவிக் காலம் முடிந்து
முதிர் வயதில்
என் நாளைக்கென...
தள்ளி விட்டு
நுரை தள்ளி ஓடும்
இந்த வாழ்வில்
எதைக் காண விழைகிறோம்...
சின்ன மழைத்துளியின்
சிறு புல்லின் நுனியில்
மகுடமான பனித்துளியில்
மலர்ந்து விரியும்
வானவில்லிலும் கூட...
ரசித்துப் பார்க்க
மணித்துளி செலவழிக்க
முடியாமல் - நேரமின்மை
நம்மை எந்த வாழ்வியலுக்கு
இட்டுச் செல்கிறது...
ஓடுபவர்களே...
கொஞ்சம் சொல்லிவிட்டுப்
போங்கள்!
—ரஜகை நிலவன்,
மும்பை.

