PUBLISHED ON : ஜூன் 10, 2018

கவலைகள் நிலையானதல்ல!
கன்னத்தில் கை வைத்து
கவிழ்ந்து கிடப்பதால்
கவலைகள் என்றும்
கல்லறை ஏறுவதில்லை!
கவலையைப் போக்க
கண்ணீர் வடிப்பது
மகிழ்ச்சிக்கான
மார்க்கம் அல்ல!
கவலைகள்
காயத்துக்கு மருந்தல்ல
அவைகள் விருத்தி செய்யும்
விஷக்கிருமிகள்!
கவலைகள்
சுதந்திர காற்றை
சுவாசிக்க விடாமல்
இதயத்தை இறுக்கும்
சுருக்கு கயிறுகள்!
உள்ளத்தை உல்லாசமாக
உலவ விடாமல்
உடைத்தெடுக்கும் உளிகள்!
கவலைகள்
சரித்திரமல்ல
என்றும் நிலைத்து நிற்பதற்கு!
அவைகள்
நம் சாதனைகளுக்கு
சோதனைகளாக, சுமையாகி
சுகம் கலைக்கும்
சூத்திரதாரிகள்!
மரணம் நிச்சயிக்கப் பெற்ற
அந்நிகழ்வுகளுக்கு
மனதில் நினைவலைகள் எழுப்பி
நிம்மதி கரைகளை உடைப்பானேன்!
உலர்ந்து போன நேற்றைய
உணர்வுகளை உதிர்த்து
மலரப்போகும் நாளைய
நற்சிந்தனைகளுக்கு
நாற்றங்காலிட்டு
களைகளாக கவலைகளை
பறித்தோமானால்
ஆனந்த மகிழ்ச்சி அறுவடையில்
ஆகாயத்தில் பறக்கலாம்!
க.அழகர்சாமி, கொச்சி.
