PUBLISHED ON : ஏப் 14, 2019

ஜனநாயகம் விற்பனைக்கு...
தேர் வருகிறது என்றால்
வாசலில் நீர் தெளித்து
வண்ணமிகு கோலமிட்டு
இறைவனை காண காத்திருப்பர்!
தேர்தல் வந்து விட்டால்
வாசலில் தோரணம் கட்டி
கொடிகளின் கோலமிட்டு
காணிக்கை பெற தவமிருப்பர்!
வேலை இல்லை என்று
யார் சொன்னது...
கொடி பிடித்தால், நுாறு
கோஷமிட்டால், இருநுாறு!
உங்கள் வீட்டுக்கு, காவிரியாறு
எதிர் வீட்டுக்கு வைகையாறு
பக்கத்து வீட்டுக்கு பாலாறு
ஓட்டு போட்டா தேனாறு!
வங்கியிலே நீங்க
போட்ட பணம் - நாங்க
வாரி சுருட்டி போனா - அது
வாரா கடனா மாறும்!
குப்பைய கொட்டுவோம்
நாங்க!
தெருவை கூட்டுவோம்
வாங்க!
அஞ்சு வருஷம் ஆடுனோம்
கூத்து!
அலுக்கலையா உங்களுக்கு
அத பாத்து!
சாமி வந்தா வேட்டு
தலைவன் வந்தா வேட்டு
துட்டு வந்தா ஓட்டு
புட்டுகிட்டா கானா பாட்டு!
புயலுக்கு பஞ்சமில்லே
வயலுக்கு தண்ணியில்லே
படிப்புக்கு மதிப்பில்லே
குடிப்பவனுக்கு ஜாதியில்லே!
வரப்பு உயராமல்
நீர் உயராமல்
நெல் உயராமல் - நாட்டில்
குடிகாரனை மட்டும்
உயர்த்தி விட்டோம்!
கொடியை அசைத்து
வாகனத்தை வரவேற்று
சக்கரத்தை வணங்கி
அடிமைத்தனத்தை
வளர்த்திடுவோம்...
ஜனநாயகத்தை
விலை கொடுத்து
வாங்கிடுவோம்!
- பாரதி சேகர், சென்னை.
